Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

"அறிவுரைக் கொத்து"
மறைமலை அடிகள்

aRivuraikkottu
of maRaimalai aTikaL
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our sincere thanks go to Mr. Murugavel of Bangalore and Mr. Anandhakumar Krishnan of Coimbatore
    for their help in the preparation of this etext.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2014.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

"அறிவுரைக் கொத்து"
மறைமலை அடிகள்

    source:
    "அறிவுரைக் கொத்து"
    மறைமலை அடிகள்
    .. பதிப்பகம் - 2004 .

பொருளடக்கம்

    எண் பொருள் எண் பொருள்
    1. கடவுள் நிலை10. தமிழ்த்தாய்
    2. சைவசமயப் பாதுகாப்பு 11. தமிழிற் பிறமொழிக் கலப்பு
    3. திருக்கோயில் வழிபாடு 12. தனித்தமிழ் மாட்சி
    4.சிறுதேவதைகட்கு உயிர்ப்பலி யிடலாமா? 13. அறிவுநூற் கல்வி
    5.சீகாருண்யம் 14. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
    6.கடவுளுக்கு அருளுருவம் உண்டு 15. உடன்பிறந்தார் ஒற்றுமை
    7.கல்வியே அழியாச்செல்வம் 16. கூட்டு வாணிகம்
    8. கல்வியுங் கைத்தொழிலும் 17. பெண்மணிகள் கடமை
    9. பகுத்துணர்வும் மாதரும் 18. பெற்றோள் கடமை
    ------------

    ஓம்

    அறிவுரைக் கொத்து
    1. கடவுள் நிலை

    ‘சைவ சமயம்‘ என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னேதொன்று தொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து, மற்றை நாட்டவர்க்கு இல்லாத் தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது.

    அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு, விளங்கச் செய்தது எப்படியென்றால், கூறுதும்: இந்நிலவுலகத்தில் எங்கும் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டு வாழ்க்கையிலிருப்பினும், எல்லாருங் ‘கடவுள் ஒருவர் உண்டு‘ என்னும் உணர்ச்சியும் அக்கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட் பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நூல்கள் எழுதியிருக்கும் ஆங்கில ஆசிரியர்கள், ‘கடவுளுணர்ச்சி யில்லாத ஒரு மக்கட் கூட்டத்தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது‘ என்று முடிவுகட்டிச் சொல்லுகின்றார்கள். நமது நாட்டிலும் மிகத்தாழ்ந்தோர் முதல் மிக உயர்ந்தோர் ஈறாக உள்ள எத்திறத்தவருங் கடவுளுணர்ச்சியும் அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற பலவகையான வணக்க முறைகளும் உடையராய் இருத்தலை நாடோறும் எங்கும் கண்டு வருகின்றோம். ஆகவே, கடவுணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்தவர்கள் உயிர் வாழ்தல் இயலாதென்பது இனிது விளங்கும்.

    இனி மக்கள் எல்லாரும் ஏன் இங்ஙனம் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் உடையராயிருக்கின்றனரென்றால், அவர்களனைவரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்பு உலவும் நிலத்தின் துணையும், இநத் உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும், வேண்டியவர்களாயிருக்கின்றனர். வியப்பான இந்த உடம்பையும் இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள்களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பணட்ங்களையுந் தமக்கு ஆக்கிக் கொடுக்கத் தக்க பெருவல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும் உள்ள ஒரு முழுமுதற் கடவுள் கட்டாயம் இருக்க வேண்டுமென்னும் உணர்ச்சி எல்லார் உள்ளங்களிலும் இயற்கையாகவே தோன்றி நிற்கின்றது.

    இனி, எவராலும் படைக்க முடியாத இத்தனை உடம்புகளையும் இத்தனை உலகங்களையும் இத்தனை அரும்பொருள்களையுந் தமக்குப் பமைத்துக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உண்டு என்னும் உணர்ச்சி வந்தவுடனே, அவனைக் காணுதற்குங் கண்டு வணங்குதற்கும் எல்லார்க்கும் பேராவா உண்டாதலும் இயல்பேயாம். சலவைக் கல்லில் திருத்திச் சமைக்கப்பட்ட மிக அழகான ஓர் உருவத்தையேனும், பல வண்ணங்களாற் குழைத்துத் திறமாக எழுதப்பட்ட ஓர் ஓவியத்தையேனும், வானத்தில் பறக்கும் ஒரு மயிற் பொறியையேனுஞ் சுவைத்த சொல்லும் பழுத்த பொருளும் நிறைந்த ஒரு நுலையேனும் இயற்றிய கைத்தொழிலாளரும் நல்லிசைப் புலவருந் தமது காலத்தில் உயிரோடிருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்களைக் காண்டற்குங் கண்டு வணங்குதற்கும் மக்கள் எவ்வளவு விரைவுடையவராய் விரைந்து செல்கின்றனர்! சென்று அவர்களை மனம் உருகி வணங்கி வாழ்த்தி எவ்வளவு இன்புறுகின்றனர்! சிற்ற்றிவுடைய மக்கட் பிறவி யெடுத்தாரிலேயே சிறிது சிறந்த அறிவு வாய்த்த கைத் தொழிலாளரையும் நல்லிசைப் புலவரையும், அவர் அமைக்கும் உருவ அமைப்பு நூல் அமைப்பின் அழகால் மனம் இழுக்கப்பட்ட மக்கள் தேடிச்சென்று கண்டு வணங்கப் பேராவல் கொள்ளுவார்களானால், எவராலும் அமைக்க முடியாத எண்ணிறந்த உடம்புகளையும் எண்ணிறந்த உலகங்களையும் எல்லையற்ற உலகத்துப் பொருள்களையும் நாம் கேளாமலே அமைத்துக் கொடுத்து, மற்றைத் தொழிலாளரும் புலவரும் அழிந்தொழிவது போல் அழிந்தொழியாமல், எக்காலத்தும் எவ்விடத்தும் நம்மோடு உடனிருக்கும் எல்லாம் வல்ல பெருமானைக் காண்பதற்குங் கண்டு வணங்குதற்கும் மக்களாகிய நாம் இன்னும் எவ்வளவு மிகுந்த பேராவல் உடையவர்களாய் இருக்கவேண்டும்! மக்களிற் சிறந்தாராயுள்ள சிலரைக் கண்டு வணங்குதலாலேயே, நம்மனோர்க்கு அத்தனையன்பும் இன்பமும் உண்டாகுமென்றால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாதல் வேண்டும்! ஆதலால் மக்களுக்குக் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரைவாரது வெற்றூரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்துகொள்க.

    இனி, ‘விருப்பு வெறுப்பில்லாக் கடவுள், தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனவுந் தனக்குத் திருக் கோயில்களுந் திருவிழாக்களும் வேண்டுமெனவும் விரும்புபவரோ‘ என வினவிச் சிலர் நம்மனோரை ஏளனஞ் செய்கின்றனர். கடவுள் தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனத் தமது திருவுள்ளத்திற் கருதுவது, அதனால் அவர் தமக்கு ஒரு பெருமை தேடிக்கொள்வதற்கன்று. ஒருவன் பிறனொருவனை வணங்குவது அச்சத்தினாலும் நிகழும், அன்பினாலும் நிகழும். செல்வத்தினாலேனுங் கல்வியினாலேனுந் தலைமையினாலேனும் வலிமையினாலேனுஞ் சிறந்தானாயிருக்கும் ஒருவனைச், செல்வமுங், கல்வியுந், தலைமையும், வலிமையும் இல்லாத பிறர் பெரும்பாலும் அச்சத்தால் வணங்கா நிற்பர். மேற்சொன்ன வளங்களுடையோன் தன்னையே பெரியவனாக மதித்துத் தன்னை வணங்குவோரை மதியாது ஒழுகும் வரையில், அவனை வணங்குவோர் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அங்ஙனஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன்னை மேலாகக் கருதாது, தன்னை வணங்குவாரெல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையவனாய் ஒழுகுவானாயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன்பாற் பேரன்புடையவராய் உளங் குழைந்து உருகி யொழுகுதலையுங் காண்கின்றோம். இவ் வியல்பை உற்று நோக்குங்காற், கடவுளை அச்சத்தாற் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கா நிற்கும். ‘‘கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையவர்; அவரை வணங்காது ஒழியின் நமக்குத் தீங்குண்டாம்". என்னும் அளவே கருதி அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையினராவர். அன்பினால் வணங்கும் உயர்ந்த நிலையினரே கடவுளின் உண்மையை உணர்ந்தாராவர். ஏனென்றால், கடவுள் எல்லையற்றி செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் மட்டுமேயுடையரல்லர், அறியாமையுந் துன்பமும் உடைய எல்லா உயிர்களுக்கும் அவ் விரண்டையும் நீக்கி, அறிவும் இன்பமுந்தருதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளின் அருமையை எண்ணிப் பார்க்கப் பார்க்க அவர் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையவரென்பது தெளிவாக விளங்குகின்றது. நம் உடம்பிலுள்ள உறுப்புக்களிற் கண்ணினும் சிறந்த்து பிறிதில்லை; கண் இல்லையானால் நமது அறிவு முக்காற்பங்கு மேல் விளங்காது ஒழியும். இத்துணைச் சிறந்த கண்ணையும், இதற்கு அடுத்து சிறப்பிலுள்ள ஏனை உறுப்புக்களையுந் தாமாகவே படைத்துக்கொள்ள வல்லவர்கள் எங்கேனும் உளரோ? இல்லையன்றே! எவராலும் படைக்க முடியாத இவ்வரும் பெறல் உறுப்புக்களை, நாம் கேளாதிருக்கையிலும் நமக்குப் படைத்துக் கொடுத்தவன் நம்பால் எவ்வளவு அன்பும் எவ்வளவு இரக்கமும் உடையனாயிருக்க வேண்டும்! இது பற்றி யன்றோ மேனாட்டிற் சிறந்த மெய்ந் நூலாசிரியரான ஒருவர் (Bergson) கண்ணின் வியப்பானஅமைப்பை ஆராய்ந்து காட்டிக் கடவுளின் அறிவாற்றலையும் அருளையும் நிலைநாட்டினார். ஆகவே, கடவுள் வகுத்த இவ்வியற்கை யமைப்பின் திறங்களை ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் நாம் அவன்றன் ஆற்றலையும் அருளையும் அறிந்தறிந்து மெய்யறிவு விளங்கப் பெறுகின்றோம் அல்லமோ? பேரறிவுடையோன் ஒருவன் வகுத்த ஒரு நீராவி வண்டியின் அமைப்பையேனும் அல்லது அது போன்ற மற்றொரு வியத்தகு பொறியையேனும் நாம் ஆராய்ந்து நோக்குந்தோறும், அவனது அறிவின்திறம் நமக்குப் பெரியதோர் இன்பத்தை விளைத்து நமதறிவையும் விரிவு செய்து விளக்குதற்போல, இறைவன் படைத்த படைப்பின் வழியே அவனது அறிவின் ஏற்றத்தைக் கண்டு நாம் வியந்து மகிழுந் தோறும் நமதறிவும் முறைமுறையே விரிந்து பேரொளியோடும் விளங்காநிற்கும். இவ்வாறு இறைவன்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை அறியுமுகத்தானன்றி, நமக்கு உயர்ந்த அறிவு விளக்கம் உண்டாதற்கு வேறுவழி இல்லையாதலால், நமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டாமென்பாரின் வழக்குரை ஏழை மக்களை அறியாமைப் பாழ்க்குழியில் ஆழ்த்தி அழிப்பனவாமென் றுணர்மின்கள்! இவ்வாற்றாற் சைவசமயமானது, மக்களுக்கு உரிய அறியாமையும், பிறப்பு இறப்பும் இல்லாப் பெருமுதற் கடவுளான சிவபெருமான்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை விளக்கும் வழியே, மக்களெல்லாரையும் பேரறிவு நிலைக்குச் செலுத்துவதோர் ஒப்பற்ற கொள்கை யாதலை உணர்ந்து கொண்மின்கள்!

    இனிக் ‘கடவுள் ஒருவர் இருந்தால், அவர் தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனக் கருதார்‘ என்னும் கருத்துப்பட உரைப்பார் உரையும் பாழுரையாதல் காட்டுதும்: எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் படைத்து, அவற்றின் நடுவே இவ்வியப்பான இவ்வுடம்புகளிற் புகுத்தி நம்மை வாழச் செய்திருக்கும் வகையினை உற்று நோக்கும் நுண்ணறிவாளர், இங்ஙனம் அவன் செய்திருப்பது ஒரு சிறந்த நோக்கம்பற்றியே யல்லாமல் வெறும் பாழுக்காக அன்றென உணர்வர். அச்சிறந்த நோக்கம் யாதோ வென்றால், நாம் அறவும் இன்பமும் இவையென உணர்ந்து, நமக்கு இயற்கையாய் உள்ள அறியாமையுந் துன்பமும் களைந்து, என்றும் அழியாப் பேரின்பத்தில் நாம் நிலைபேறாயிருக்க வேண்டுமெனப்தே யன்றோ? உலகத்தின்கண் உள்ள அரிய காட்சிகளையும், இனிய ஒலிகளையுந் தீஞ்சுவைகளையும் நறுமணங்களையும் மென்பொருள்களையுங் கண்டு கேட்டுச் சுவைத்து உயிர்த்துத் தொட்டு உணர்தலாலும், அறிவால் மிக்க சான்றோரொடு பழகி அவர் ஆக்கிய நூல்களை ஆராய்ந்து அறிதலாலும் யாம் நாளுக்கு நாள் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து அவற்றால் மேன்மேல் உயர்ந்து வருகின்றனம் அல்லமோ? ஆகவே இறைவன் இவ்வுலக வாழ்க்கையினை வகுத்தது, நாம் அறிவில் வளர்ந்து அவனது பேரின்பத்தில் சென்று நிலைபெறுதற் பொருட்டேயாமென்பது நன்கு துணியப் படும். நாம் கடவுளின் பேரறிவினையும் பேரின்பத்தையும் அறிதற்குக் கருவிகளாகவே அறிவையும் இன்பத்தினையுஞ் சிறிது சிறிதே காட்டும் இவ்வுலகத்துப் பொருள்களையும் இவ்வுடம்புகளையும் இறைவன் அமைத்தனனே யல்லாமல், இப்பொருள்களும் உடம்புகளுமே பேரறிவையும் பேரின்பத்தையும் அளிக்குமென அமைத்தானல்லன். ஆதலாற் சிற்றறிவு சிற்றின்பங்களைத் தரும் இவற்றிற் பற்றுவையாமற், பேரறிவு பேரின்பங்களைத் தருங் கடவுளிடத்தில் நாம் பற்றுவைத்தல் வேண்டுமென்பதே அவனது அரும்பெரு நோக்கமாதலால், அந் நோக்கத்தை யுணர்ந்தவர்களல்லாமல் மற்றையோர் இவ்வுலகப்பற்றை விடார். ஆகவே, இறைவனைச் சார்ந்து வணங்கி அவன்றன் பேரின்பத்தை நாம் பெறுவது அவனது நோக்கத்தோடு ஒத்திருத்தலால் அதுகண்டு இறைவன் திருவுளம் மகிழ்வன். மகன் உயர்ந்த நிலையடைதல் கண்டு மகிழாத தந்தையாரும் உளரோ? எனவே, நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும் பயன் தருதலோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக்கோயில்களுந் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையாமென்க. இஃது உணர்த்துற்கே அப்பரும்,

      "குறிகளும் அடையாளமுங் கோயிலும்
      நெறிகளும் அவன் நின்றதோர் நேர்மையும்
      அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
      பொறியிலீர் மனம் என்கொல் புகாத்தே"

    என்று அருளிச் செய்தார் ரென்பது.
    -----------------

    2. சைவமயப் பாதுகாப்பு


      " காகம உறவு கலந்துண்ணக்
      கண்டீர்! அகண்டாகாரசிவ-
      போகம்எனும் பேரின்பவெள்ளம்
      பொஙகித் த்தும்பிப் பூரணமாய்
      ஏக உருவாய்க் கிடக்கு தையோ!
      இன்புற்றிட நாம் இனி எடுத்த
      தேகம் விழும்முன் புசிப்பதற்குச்
      சேரவாரும்! செகத்தீரே! "
      - தாயுமானசுவாமிகள்.

    ‘சைவசமயம‘ என்பது ‘சிவத்தை ஆராய்ந்து அறிந்த பொழுது அல்லது கொள்கை‘ என்ற பொருள்படும்; இந்தக் கொள்கையை பாதுகாத்துக் கொள்ளுதலே சைவசமயப் பாதுகாப்பு ஆகும். உலகத்திலே அளவிறந்த கொள்கைகள் இருந்தாலும், அவையெல்லாவற்றிலுங் கடவுளைப் பற்றிய கொள்கையே சமயம் என்து பெரும்பான்மையும் எல்லாராலுங் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் நிலையில்லாத வாழ்க்கை உடையவராய் இருத்தலாலும், தோயுந் துன்பமுங் கவலையும் அடுத்தடுத்து வந்து அவரை வருத்துதலாலுந் ‘, தமக்குத் துணையாக நினைத்த மக்களுந் தம்மைப்போலவே நோய் முதலியவற்றால் வருந்தி நிலையின்றி மறைந்து போதலாலும், அவர்கள் தம்மினுந் தம்மைப்போன்ற எல்லா உயிர்களினும் மேற்பட்டு உயர்ந்த ஒரு பேரறிவுப் பொருளான கடவுளின் துணையை நாடினவராய் இருக்கின்றார்கள். கடவுள் இல்லையென்று வலி யுறுத்திப் பேசிவந்தவர்களுங்கூடப் பெருந்துன்பங்கள் வந்து தம்மை மூடிக்கொண்ட காலத்தில் தாம் கொண்ட கொள்கையைப் பிசகென உணர்ந்து கடவுளை நம்பத் தலைப்பட்டிருக்கின்றார்கள். கடவுளிடத்தில் நம்பிக்கையில்லாத அருகரும் பௌத்தருங்கூடத் தமக்கு மேற்பட்ட துணையை நாடினவர்களாய்த் தம் சமய குரவரையே கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தம்மையே கடவுளாக நினைப்பவர்களுங்கூடத் தமது கொள்கையை உண்மைப்படுத்திக்கொள்ள முடியாமை கண்டு ஏதாவதொன்றைத் தமக்கு மேற்பட்டதாக வைத்து வணங்கி வருகின்றார்கள். இங்ஙனமாக ஒன்றோடொன்று மாறுபட்ட கொள்கைகள் உடையவர்க ளெல்லாருங் கடைசியாக்க் கைக்கொண்டது, ‘தமக்கு மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருள் வணக்கமே‘ ஆகும். இம் முடிந்த கொள்கையில் எல்லாச் சமயிகளும் உடனப்டு உடையவராய் இருக்கின்றனர்.


    இனி, மக்கள் எல்லாரும் இங்ஙனந் தம்மின் மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருளின் உதவியை விரும்பி நிற்றல் எதன் பொருட்டு என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் தமது துன்பத்தை நீக்கிக் கொள்ளுதற்கும் இன்பத்தைப் பெறுதற்குமேயாம் என்னும் உண்மை புலனாகும். மக்கள் மட்டுமேயல்லர், மக்களினுந் தாழ்ந்த எல்லா உயிர்களுங்கூட தமது துன்பத்தைப் போக்கி இன்பத்தை ஆக்கிக் கொள்ளவே முயன்று நிற்கின்றன. இங்ஙனம் நம் கண்ணெதிரே காணப்படுகின்ற இவ்வுண்மையைக் கொண்டு, எல்லா உயிர்களும் இப்போது துன்பக் கயிற்றாற் கட்டப்பட்டிருக்கின்றனவென்றும், இத் துன்பக் கயிற்றை அறுக்கவும் இன்ப வெள்ளத்தைப் பெருக்கவுந் தம்மால் ஆகாமையின், துன்பத்தினின்றுந் தம்மை விடுவித்து இன்பத்தை ஊட்ட வல்ல முழுமுதற்கடவுளின் உதவியைப் பெறுதற்கு அவை பெரிதும் விரும்பி நிற்கின்றன வென்றும் நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றனம் அல்லமோ? இன்னும், பிறப்பு இறப்பு நோய் மூப்புக் கவலை இழப்பு முதலான பலதிறப்பட்ட வடிவங்களிற் றோன்றுந் துன்பங்கள் அத்தனையும் எல்லா உயிர்களையும் வருத்தி வரக் காண்கின்றோ மாதலால், இத் துன்பங்கள் உடையோர் வேறுவகையில் எவ்வளவு உயர்ந்தோராயினும் உயிர்களே யல்லாமற் கடவுளாகமாட்டார். இவ் வுயிர்களை இத்துன்பத்தினின்றும் மீட்டு, இவற்றிற்கு இன்பத்தைத் தருங் கடவுள் ஒருவரே எவ்வகைத் துன்பமும் இல்லாதவர்; எல்லா இன்பமும் ஒருங்கே உடையவர். இதுவே கடவுளுக்கு உண்மையான தன்மையென்பதை எல்லாச் சமயிகளும் உடன்பட்டு உரைப்பார்களாயினுஞ் சைவசமயத்தில் மட்டும் அவ்வுண்மை முன்னுக்குப்பின் மாறில்லாமற் காணப்படுகின்றது. மற்றைச் சமயத்தவர்களோ பிறப்பு இறப்பு முதலான மேற்கூறிய துன்பங்களிற் கிடந்து உழன்றவர்களை, அவரவரிடத்திலுள்ள சிற்சில சிறந்த தன்மைகளைக் கண்டும் வலிய செய்கைகளைக் கண்டும் முழு முதற் கடவுளாகத் துணிந்து வணங்கி வருகின்றனர். நாடக அரங்கத்தில் அரசகோலந் தாங்கி வந்து ஆடுவோன் உண்மையில் அரசன் ஆகாமைபோல, இறைவனருளாற் சிற்சில உயர்நலச் செய்கைகளைப் பெற்றவர்கள் அவற்றால் அவ் விறைவனைப்போற் கருதப்படினும் அவர் உண்மையில் அவ் விறைவனாக மாட்டார். சைவமயிகள் வணங்கி வருவது, இன்ப வடிவான கடவுளேயல்லாமற் பிற உயிர்களுள் ஒன்றும் அன்றென்பதற்கு அடையாளம் என்னென்றால், அன்பு அல்லது இன்பம் என்று பொருள்படுஞ் சிவம் என்னுஞ் சொல்லையே முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும், அச் சிவத்திற்குப் பிறப்பு இறப்பு முதலான எவ்வகைத் துன்பமுஞ் சிவபுராணங்களிற் காணப்படாமையுமேயாம். இவ்வுண்மையை வலியுறுத்தும் பொருட்டே

      "யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே
      மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்று அத் தெய்வங்கள்
      வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும்
      ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே

    என்பது சிவஞான சித்தியாரிலும் அருளிச் செய்யப்பட்டது.


    இங்ஙனம் அன்புவடிவாக விளங்கும் முதல்வனையே வணங்குஞ் சைவசமயிகள் எவ்வுயுர்க்கும் இன்பத்தையே செய்யக் கடமைப்பட்டவர்காளயிருத்தலால், இன்பத்திற்கு மாறான துன்பத்தைத் தருங் கொலைத் தொழிலை எவ்வுயிர்களிடத்துஞ் செய்யாதவர்களாயும், அக் கொலைத் தொழிலால் வரும் ஊனைத் தின்னாதவர்களாயுஞ் சீவகாருணிய ஒழுக்கத்தில் மற்றைச் சமயத்தவராலுங் கைக்கொள்ளப்படினும், அது சைவசமயிகளுக்கே பழமைக் காலந் தொட்டுச் சிறந்த உரிமையாகி வருகின்றது. மற்றைச் சமயத்தவருந் தம்மிற் புலால் தின்னாத ஒருவரைப் பார்த்து. ‘அவர் சைவராகி விட்டார்‘ என்று சைவபெயராற் கூறுதலிற், சீவகாருண்ய வொழுக்கஞ் சைவசமயிகளுக்கே சிறப்புரிமைப் பொருளாய் விளங்குகின்றது.

    இனி, இங்ஙனமெல்லாம் பலவகையாலும் உயர்ந்த சைவசமயத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகள் என்னென்றாற், சைவசமயத்திற் பிறக்கும் பெருந்தவம் பெற்றவர்கள் முதலில் தம்மால் வணங்கப்பட்டு வரும் முழுமுதற் கடவுளான சிவத்தின் இயல்புகளை அறிந்தோரிடத்தும் நூல்களிடத்துங் கேட்டும் பயின்றும் நன்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும். பெண்பாலாரே பிள்ளைகளின் நல்லறிவு வளர்ச்சிக்கும் நல்லொழுக்கத்திற்குங் காரணராக இருத்தலாற், பெண்மக்களுக்குச் சைவசமய நூல்களையும் நல்லொழுக்கங்களையும் அறிந்தோர் வாயிலாக்க் கற்பித்து வருதல் வேண்டும். ஆண் பிள்ளைகள் மற்றக் கல்வியோடு சைவசமய உணர்ச்சியும் பெற்றுவரும்படி கல்விச்சாலைகள் ஆங்காங்குத் திறப்பித்து, அதனைச் செவ்வையாகப் புகட்டி வருதல் வேண்டும். தேவார திருவாசகங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்வதோடு, இனிய குரலில் அவற்றை இசையுடன் ஓதுதற்கும் ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

    இனி, ஓர் உயிரைக் கொலை செய்யாமையுங், கொன்று அதன் ஊனைத் தின்னாமையுஞ் சைவ சமயத்திற்குச் சிறந்த அறமாயிருத்தலால், எல்லாருஞ் சீவகாருண்ய வொழுக்கத்தைக் கைப்பற்றி யொழுகும்படி எவ்வெவ் வகையால் முயற்சி செய்தல் வேண்டுமோ அவ்வவ் வகையெல்லாஞ் செய்து, அதனை எங்கும் பரவச்செய்தல் சைவர்க்கு இன்றியமையாத கடமையாயிருக்கின்றது.

    இனித், தமிழ்மொழியின் அமைப்பும் அதன் இயற்கையுஞ் சைவசமய உண்மையோடு மிகவும் ஒன்றுபட்டிருத்தலால், அதனை எல்லாரும் நன்றாக்க் கற்று வேறு மொழிக் கலப்பில்லாமற் செவ்வையாகப் பேசவும் எழுதவும், அதிற் புதிய புதிய நூல்கள் இயற்றவும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் அல்லாத மற்ற மொழிகளில், வருத்தப்பட்டுச் சொல்லுஞ் சொற்களுஞ், சினந் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும், இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவை யெல்லாஞ் செயற்கை மொழிகளென்றுந், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்குஞ் சொற்களே நிறைந்து, சினத்தாற்பிறக்கும் வெடுவெடுப் போசையுந் துன்பத்தாற் பிறக்கும் இளைப்பொலிவும் இன்றி, எல்லாம் இனிய குணத்திற் பிறக்கும் மெல்லோசைகளாய் இருத்தலின், தமிழ் இன்படவடிவாய் விளங்குஞ் சிவத்தோடு ஒத்த இன்பம் வாய்ந்த தெய்வ மொழியாம் என்றுஞ் சைவ சமயிகள் இவ்வுண்மையைக் கருத்திற் பதியவைத்து, அதனை வளரச் செய்த்ற்கான எல்லா முயற்சிகளையுங் குறைவரச் செய்தல் வேண்டும்.

    நம் செந்தமிழ் மக்களில் நூறாயிரம் பேர்க்கு இரண்டு மூன்றுபேரே சிறிது கற்றவர்களாயிருக்கின்றார்கள். மற்றவர்கள் எல்லாருங் கல்வியறிவு இல்லாதவர்களாயும் அறியாமைச் சேற்றில் புதைந்து கிடப்பவர்களாயும் இருக்கின்றார்கள். உலகத்தில் இவ்விந்திய நாட்டைத் தவிர மற்றைப் பொரும்பாகங்களில் இருப்பவர்களெல்லாருங் கல்வியிலும் மெய்யுணர்விலும் உழவிலுங் கைத்தொழிலும் வாணிகத்திலும் நாளுக்குநாள் மேம்பட்டுவர நமது நாட்டிலுள்ளவர்களோ – அவர்களிலுந் தமிழர்கள் இவற்றில் மிகவுந் தாழ்ந்த நிலைமையிருக்கின்றார்கள்! இவர்களை இனிக் கல்விச்சாலைகளுக்கு அனுப்பிக் கல்வி கற்பித்தல் இயலாதாகலின், ஊர்கள்தோறும் நகரங்கள்தோறும் கழகங்கள் வைப்பித்து அவற்றின் வாயிலாகத் தமிழுஞ் சைவமும் உணர்ந்த அறிஞரைப் பல இடங்கட்கும் அனுப்பித், தமிழ் நுற்பொருள்களையுஞ் சைவ நூற் பொருள்களையும் விளக்கமாக அறிவுறுத்தி வருதல் இப்போது உடனே செயற்பாலதான நன்முயற்சியாகும். தமிழ் கற்றோர் தொகை மிகவுஞ் சுருங்கிப் போனதால, ‘தமிழ் அறிஞர்க்குப் பொருள் ஏன் வேணடும்? என்று ஏளனமாய் உரையாமல், அவர்க்கு ஏளனமாய்ப் பொருளுதவி செய்து, கல்வியில் எல்லையின்றிக் கற்று அதனைப் பிறர்க்கும் பயன்படுத்தும்படி அவருக்கு மனக்கிளர்ச்சியினை விளைவித்தல் வேண்டும்.

    இனிச் சிவபிரான் கோயில்களில் நிறுத்தப் பட்டிருக்குந் திருவுருவங்கள், இறைவனுக்கு என்றும் உரிய அருளுருவத்தையும், அன்பர்க்கு அருள்செய்யும் பொருட்டு முதல்வன் ஓரொருகாற் கொண்ட திருவுருவத் தோற்றங்களையும் அனபர்க்கு நினைவில் எழுப்புதற் பொருட்டு அமைத்த வடிவங்களேயாகும். இவ்வடிவங்களை வணங்கச் செல்லும் அன்பர்கள் இவற்றைக் கண்டவுடன் அய்யன் அருள் உருவங்களை நினைத்தவராகி அகங்குழைந்து உருகுவர். ஆண்டவனது அருளுருவத்திற்குச் செய்யும் எண்ணத்துடன், தம் அன்பினாற் பூவும் நீரும் இட்டு ஆடையணிகலன்கள் சாத்தி அவ் வடிவங்களை வணங்குதலும் அவ்வன்பிற்கு அடையாளமாகும். இறைவனருளைப் பெறுதற்கு மெய்யுணர்வும் அதன் வழித் தோன்றும் பேரன்புமே வாயில்களாதாலாலும், இக்காலத்தில் மக்களில் பல வகைக் கூட்டத்தாரும் அறிவைப் பெருகச் செய்து, அறிவாலும் அன்பாலும் ஆண்டவனை அடைதற்கு மிக முயன்று வருதலாலுஞ் சைவ சமயிகளான அறிஞரும் அறிவுநெறியிற் றமது கருத்தை மிகுதியாய்ச் செல்லவிடுதல் வேண்டுமேயல்லாமல், வெறுந் தொழில் நெறியிற் புகுந்து ஒப்பனைகளின் பொருட்டும் திருவிழாக்களின் பொருட்டும் ஆயிரக்கணக்காகவும் நூறாயிரக்கணக்காகவும் போட்டி போட்டுக்கொண்டு பொருள்களைச் செலவழித்துச் செருக்கடையலாகாது. எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் உடைய பெருஞ்செல்வரான நம் ஆண்டவனுக்கு, ஏழை மக்கள் நல்ல அல்லா வழிகளில் ஈட்டிய பொருளைத் திரள் திரளாகக் கொடுத்தாலும், அவன் அதனைக் கண்டு ஏமாறித் தனது அருளைக் கொடுத்து விடுவான அல்லன். நம் ஐயனுக்கு வேண்டுவன அன்பும் அன்பொழுக்கமுமேயாகும். அதுபற்றியன்றோ திருநாவுக்கரசு நாயனாரும்

      "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுகளே
      புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
      பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
      நக்கு நிற்பன் அவர்தமை நாணியே"

    என்று அருளிச் செய்தனர்.

    ஆதலால், திருக்கோயில்களுக்குச் செய்யுஞ் செலவை இயன்றமட்டுஞ் சிறுகவே செய்து, மிச்சப் பெரும்பொருளை சிவவறிவு வளர்ச்சிக்குஞ், சிவனடியார்கட்கும், பழுதுபட்ட கோயில்கள் சாவடிகள் குளங்கள் சோலைகள் பாட்டைகள் முதலியவற்றின் திருப்பணிகட்குஞ் செலவு செய்து, சைவர்கள் எல்லாருஞ் சிவபெருமான் திருவருளைப் பெறுவார்களாக!
    ---------------

    3. திருக்கோயில் வழிபாடு


      "மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் றொடங்கினார்க்கோர்
      வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே".
      - தாயுமானசுவாமி

    தெய்வத்தன்மை பொருந்திய ஔவையார், "ஆலயந் தொழுவது சாலவும் நன்று" என்று அருளிச் செய்திருக்கின்றார். கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது‘ என்பதே அத் திருமொழியின் பொருளாகும். மற்ற இடங்களிலிருந்து செய்யும் வழிபாட்டைக் காட்டிலும் கோயிலுக்குச் சென்று அங்கே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு ஒன்றே சிறந்த்தாகும் என்பது அதனால் தெளிவாகப் புலப்படுகின்றது. கடவுளையன்றி வேறெதனையுங் காணமாட்டாத முற்றுணர்வுடையார்க்குக் கோயிலிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறிடங்களிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறுபாடு சிறிதுந் தோன்றாதாயினும், உலகங்களையும் உலகத்துப் பொருள்களையுமே எந்நேரமும் நினைந்து உருகுதற்கு வேறு வழி சிறிதுமே இல்லை. கோயில் அல்லாத மற்ற இடங்களுக்கெல்லாம் உணவு தேடுதற்கு இசைந்த முயற்சிகளுந், தேடிய பொருள்களை வைத்து நுகர்தற்கு இசைந்த முயற்சிகளுமே நடைபெறுந் தன்மையுடையனவாய் இருக்கின்றன. அந்த முயற்சிகள் நடக்கும் இடங்களிலே செல்பவர்களுக்கு அங்கேயுள்ள பொருள்களைப் பற்றிய நினைவும், அம் முயற்சிகளைப் பற்றிய நினைவுகளுமே அடுத்தடுத்து உள்ளத்தில் தோன்றும். மாம்பழம் விற்குங் கடைப்பக்கமாய்ச் செல்வார்க்கு மாம்பழத்தைப்பற்றிய நினைவும், சாராயம், இறைச்சை, கஞ்சா, அபின் முதலான தீயபண்டங்கள் விலையாகும் அங்காடி வழியே செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும் புழுகு, மருக்கொழுந்து, சந்தனக்கட்டை முதலான நறுமணங் கமழும் இனிய பண்டங்களுள்ள இடங்களிற் செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், பயன்மிகுந்த கல்விப் பொருளை ஊட்டும் பள்ளிக்கூடவழிச் செல்வார்க்குக் கல்வியின் அருமையைப் பற்றிய நினைவும், ஒருவர் பிணமாய்க் கிடக்கஅவரைச் சுற்றி சுற்றத்தார் ஓவென்றலரும் வீட்டின் ஓரமாய்ச் செல்வார்க்கு நிலையாமையைப் பற்றிய நினைவும், அழகுமிக்க இருவர் மனஞ்செய்ய அவரைக் கண்டு எல்லாரும் மகிழ்ந்திருக்கும் வீட்டின் பக்கத்தே செல்வார்க்கு அம்மகிழ்ச்சியைப் பற்றிய நினைவுந் தோன்றுதலைத் தெளிவாக அறிந்திருக்கின்றனம் அல்லமோ? இவற்றைப் போலவே கடவுளைத் தொழுதற்கென்று ஆங்காங்கு அமைந்திருக்குங் கோயில்களான தூய இடங்களுக்குச் செல்லும் நல்லோர்க்குங் கடவுளைப்பற்றிய நினைவும் இடைவிடாது செல்லும் நல்லோர்க்குங் கடவுளைப்பற்றிய நினைவும் இடைவிடாது தோன்றுவதாகும். உலக வாழ்வெனுந் துன்பத்திற் கிடந்து உழன்று கொண்டு கடவுளை நினைதற்கு இடமின்றி வருந்தும் மக்களுக்கு இடையிடையே நம் ஐயனைப்பற்றிய எண்ணத்தை எழுப்பும் பொருட்டாகவே ஓர் ஊரிற் பல இடங்களிலுங் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயில்களே இல்லாத நாடு நகரங்களில் இருப்பவர்களுக்குக் கடவுளைப் பற்றிய நினைவு சிறிதுந் தோன்றாதாகையால் அவர்கள் விலங்குகளினுங் கடைப்பட்டவராவார்கள்; உயர்ந்த நினைவில்லா அவர்கள் தங்கியிருக்கும் அவ்விடங்கள் விலங்குகள் குடிகொண்ட காடுகளையே ஒப்பனவாகும். இவ்வுண்மையினை உணர்த்துதற்கன்றோ,

      "திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்
      திருவெண்ணீறு அணியாத திருவி லூரும்
      பருக்கோடிப் பத்திமையிற் பாடா ஊரும்
      பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்
      விருப்பொடு வெண்சங்க மூதா வூரும்
      விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
      அரும்பொடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
      அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே"

    என்னுந் திருப்பாட்டும் எழுந்தது.
    " திருநீறு அணியாத நெற்றியைச் சுடு, சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து" என்னும் உபநிடந் திருமொழியும் இவ்வுண்மையினையே அறிவிப்பதாகும்.

    இனி, மன உறுதி உடையவர்கள் எந்த இடத்திலிருநதும் கடவுளை நினைக்கலாமாகையாற், கடவுளைத் தொழும் பொருட்டுக் கோயிலுக்குத்தான் செல்ல்ல் வேண்டுமென்று வற்புறுத்தியுரைத்தல் என்னையெனின், மேலே சொல்லியபடி கோயிலைத் தவிர மற்ற எல்லா இடங்களும் வேறு வேறு நினைவுகளை உள்ளத்தில் எழுப்பி மனவுறுதியைச் சிதைப்பனவாய் இருத்தலால், நம்மனோரில் எவ்வளவு மனத்திட்பம் வாய்ந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கடவுளை நினைக்கப் புகுவார்களாயின் அவர்களைச் சுற்றிலும் நடக்கும் உலக முயற்சிகளாலும், அவ்வவ்விடங்களைப் பற்றிய எண்ணங்களாலும் அவர்களுடைய நினைவு கலைந்து பழுதுபட்டுப் போகும். மேலும் அத்தனை மனவுறுதி வாய்ந்தவர்கள், பலருங் கடவுளைத் தொழுதற்கென்ற மிகவும் புனிதமாய் விளங்குந் திருக்கோயிலின் உள்ளே சென்று நம் ஆண்டவனை வணங்குவதற்குப் பின்வாங்குவதுங் கூசுவதும் அருவருப்பதும் ஏன்? மிகப் புனிதமான கோயிலை வெறுப்பது மனவுறுதிக்கு அழகாகுமா? பலருடைய நினைவாற் கடவுளுக் கென்றே சிறப்பாக அமைக்கப்பட்ட கோயிலிற்சென்று வணங்குவதால் மனவுறுதி யுடையார்க்கு அவ்வுறுதி மேலும்மேலும் உரம்பெற்று விளங்குவதோடு, அவரது நினைவும் அங்குள்ள இறைவன் திருவுருவத்தை நேரே கண்டு மகிழ்ந்து திருவருள் இன்பத்திற் படிந்திருக்குந் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் என்க. அளவற்ற மனவுறுதியுங் கரைகடந்த அன்புந் தூய உள்ளமுந் தூய அறிவும் நிறைந்த திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான மேலேலே கோயில்கடோறுஞ் சென்று நம் ஐயனை வணங்கி வந்தனராயின், தாழ்ந்த நிலையிலுள்ள மற்றவர்கள் திருக்கோயில் வழிபாட்டைக் குறைவாக்க் கருதுவதும், அதனை ஏளனஞ் செய்வதும் எவ்வளவு பொல்லாத குற்றமாய் முடியும்!

    அப்படியானாலும், மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் மனத்திற்கும் புலனாகாமல் அறிவு வடிவாய் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் பிரிவற நிறைந்து வணங்காமற், கல்லினாலுஞ் செம்பினாலும் உருவாக்கப்பட்ட உயிர் அற்ற வடிவங்களில் வைத்து வணங்குவது குற்ற்மாகாதோ வெனிற், குற்றமாகாது. சிறு குழந்தையாய் இருந்த காலத்திலே தன் தாய் தந்தையரைப் பிரிந்து நெடுந்தொலைவிலுள்ள ஓர் இடத்திற் பிறரால் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், ஆண்டு முதிர முதிர அறிவும் முதிரப் பெற்றவனாய்த் தன் தாய் தந்தையரைக் காணவிரும்பியபோது, அவனை வளர்த்து வந்தவர் அவன் தாய் தந்தையர்தம் ஓவியத்தைக் காட்ட, அவன் அதில் அவர்களைக் கண்டு வணங்கி அகம் மகிழ்தல்போல, எல்லையின்றி எங்கும் நிறைந்த இறைவனைப் பிரிந்து அவனது திருவருள் வடிவைக் காணம்ட்டாமல் அறியாமையிற் கட்டுண்டு கிடக்கும் நம்மனோர்க்குச் சிறதுசிறிதாக அறிவை விளங்கச் செய்து வருந் திருஞானசம்பந்தர், மெய்கண்ட தேவர் முதலான நம் வளர்ப்புத் தந்தைமார், நமது வடிவைக் கல்லிலுஞ் செம்பிலும் அமைப்பித்துக் காட்ட, நாம் அதனைக் கண்டு வணங்கி அதன் வழியே நம் ஐயனை அறிந்தவர்களாய் அகங்களித்து வருகின்றனம் அல்லமோ? ஓவியத்தின் கண்ணே தங் உருவங்களைக் கண்டு தம புதல்ன் மனம் மகிழ்ந்து வணங்குகின்றான் என்பதைச் சேய்மைக் கண் உள்ள அவன் பெற்றோர்கள் அறிந்து, அவனது அன்பிற்குத் தாமும் மனம் மகிழ்வார்களேயல்லாமல் அவன் மேற் சினங்கொள்வார்களோ? இங்ஙனமே, நாமும் நம் ஐயன் அருள் வடிவை நேரே காண இயலாமையால், அதனை நம் ஆசிரியர் உதவிகொண் கல்லிலுஞ் செம்பிலுங் கண்டு அன்பால் அகந்துளும்கி வழிபட, அதனை அறியும் நம் ஆண்டவன் அதற்கு மகிழ்ந்து அவ்வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு நம்மைப் பாராட்டிச் சீராட்டி வருவான் என்பதே திண்ணம். நம் முழுமுதற் தந்தையின் இரக்கத்திற்கு ஒரு வரம்பேயில்லை. சிற்ற்றிவினரும் ஏழை மக்களுமான நாம் நம் பெருமானை அடைதற் பொருட்டு, இத் துன்பக்கடலின்கண் அவன் திருவுருவ அடையாளங்களாகிய தெப்பங்களைக் கைப்பற்றிக் கொண்டு த்த்தளித்து வருவதைக் கண்டு, அவன் நம்மேல் மிகவும் இரக்கம் உடையவனாகி நமக்குத் தனது அருளை வழங்கி நம்மை இப்பிறவிக் கடலினின்றும் கரையேற்றித் தனது பேரின்ப நாட்டில் வாழ்விப்பனே யல்லாது, நம்மேற் சினந்து நம்மை அதன்கண் அமிழ்த்தித் தாழ்விப்பான் அல்லன். ஆதலால், முழுமுதற் கடவுளான நம் ஐயனைச் சேருங்கருத்தோடு அவன் அருள் வடிவிற்கு அடையாளங்களாக்க் கல்லிலுஞ் செம்பிலும அமைத்த திருவுருவங்களை வணங்கி வருதல் சிறிதுங் குற்றமாக மாட்தென்க. திருக்கோயிலுள்ள திருவுருவங்கள் இறைவனை யறிதற்கு வைத்த குறிகளே யல்லாமல் வேறு அல்ல. இவ்வுண்மை,

      "குறிகளும் அடையாளமுங் கோயிலும்
      நெறிகளும் அவன் நின்றதோர் நேர்மையும்
      அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
      பொறியிலீர் மனம் என்கொல் புகாத்தே"

    என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருமொழிக்கண் நன்கு விளக்கப்பட்டமை காண்க.

    இனி, முழுமுதற் கடவுளாகிய நம் சிவபெருமானை யன்றி, வேறு நம்போன்ற சிற்றுயிர்களின் வடிவங்களைக் கல்லிலுஞ் செம்பிலுஞ் செய்து வைத்துக்கொண்டு அவற்றை வணங்குதலே பெரிதுங் குற்ற்மாவதாம், மாரி, கூளி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரைவீரன் முதலிய ஆவிகளெல்லாம் நம்போற் குற்றமுடைய சிற்றுயிர்களாதலின் அவற்றைத் துணையாக்க் கொள்வது, ஒரு குருடன் மற்றொரு குருடனைத் துணைகூட்டிச் சென்று இருவரும் பள்ளத்தில் வீழ்வதற்கே ஒப்பாம். விவிலிய நூலிலுங் கடவுளுக்கு மாறான உருவங்களை வணங்குதல் ஆகாதென்று சொல்லப்பட்டதே ய்ல்லாமற் கடவுளின் திருவுருவத்தை வழிபடுதல் வழுவென்று கூறப்பட்ட தில்லை. ஈசாவசியோபநிடத்தின் ஒன்பதாவது மந்திரமும், "அறியாமையொடு கூடிய சிற்றுயிரின் வடிவங்களை வணங்குபவர்கள் இருள் நிறைந்த நிரயத்திற்குச் செல்கின்றார்கள்" என்று இங்ஙனமே கூறுகின்றது. ஆகையால், முழுமுதற் பழம்பொருளின் உண்மை அருள் வடிவாய் அம்மையப்பராய் நின்ற திருவுருவத்தையும் அம் அம் முதற் பொருளின் பேரருள் விளக்கத்திற்கு இடமாய் மேலோராற் பண்டைக் காலந்தொட்டு வணங்கப்பட்டு வரும் பிள்ளையார் முருகப்பிரான் முதலானோர் திருவுருவங்களையும், இவர்களின் அருள்வழிபட்ட அடியார் திருவுருவங்களையும் அன்றி வேறு எவற்றையும் வணங்குதல் சிறிதும் ஆகாது என்று கடைப்பிடித்தல் வேண்டும்.

    இங்ஙனம் மிகவும் புனிதம் உடையதாய் விளங்குந் திருக்கோயிலினையும், அதனுள் நிறுத்தப் பட்டிருக்கும் அருள் அடையாளங்களையுஞ் சிவமென்றே நினைந்து உள்ளங் கரைந்துருகி வணங்கவே, கன்றை நினைந்த புனிற்றாப்போல் இறைவன் அக் குறிகளில் விளங்கியிருந்து அவர்க்கு அருள் வழங்குவன். இதற்குத்,

      "திருக்கோயில் உள்ளிருக்குந் திருமேனி தன்னைச்
      சிவனெனவே தேறினார்க்குச் சிவன் உறைவன் ஆங்கே"

    என்னுந் திருப்பாட்டே சான்றாகும். பகலவன் ஒளியில் எங்கும் உள்ள நெருப்பானது காநத்க் கண்ணாடியில் விளங்கித் தோன்றினாற்போல, எங்குமுள்ள இறைவன் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்திருக்கோயிலின் திருவுருவத்தின் கண்ணும் விளங்கித் தோன்றினான் எனறு உண்மையாக எண்ணி வழிபடுவார்க்கு, அவன் அங்கு முனைத்துதோன்றி அருள்புரிதல் திண்ணம். ஆனால், நம்மனோரிற் பலர் தாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதாக வெளியே பெருமை பேசிக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் அவ்விடத்தைக் கோயிலாகவும் அதனுள்ளுரிக்கும் திருவுருவத்தைக் கடவுளின் அருளுருச அடையாளமாகவும் நினைந்து நடக்கின்றார்களென்று நம்மால் நம்பக்கூடவில்லை. ஏனென்றால் அவர்கள் கோயிலின் உட்சென்றால் அடக்க ஒடுக்கமும், ஐயன் திருவடியில் நினைவும் வையாமல், வீண் கதையும் வம்பு வழக்குகளும் மணச்சடங்கு பிணச்சடங்குப் பேச்சுகளும் தமக்கு முன் உபசாரஞ் செய்யவில்லையென்னுங் வீம்புப் பேச்சும் பேசுபவராய் ஒருவரோடொருவர் சிரித்துப் பகடி பண்ணுதலிலும், அன்பர்கள் அருவருக்கத்தக்க இன்னும் பல வீணானவைகளைச் செய்வதிலும் உள்ளத்தை வைத்துப் பெருங் குற்றங்களை மூட்டை மூட்டையாகத் தொகுத்து வைக்கின்றார்கள். ஐயோ! உலகத்திலே அழிந்து போகுஞ் செல்வப் பொருள் சிறிது உடையவர்களைக் கண்டாலும், அவர்கள் முன்னிலையிற் கைகட்டி வாய் புதைத்துச் செல்லும் மாந்தர்கள், அளவிறந்த உலகங்களையும அவ்வுலகங்களில் உள்ள அளவற்ற பொருள்களையும் உடைய எல்லாம் வல்ல தலைவனான நம் ஆண்டவன் முன்னிலையிற் செல்லுங்கால், எவ்வளவு அடக்க ஒடுக்கமும் அன்பும் பணிவும் உடையராக இருத்தல் வேண்டும்! தம் தலைவராகிய கடவுள் இத் திருக்கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்றாரென்று அவர்கள் உண்மையாகவே நினைத்திருந்தால், ஆ! இப்படியெல்லாஞ் செய்வார்களா? இதற்கு முன்னெல்லாம் இவர்கள் இங்ஙனம் அறியாமையாற் குற்றமாக நடந்தாலும், இனியேனுஞ் செருக்கற்று அடக்க்மும் அன்பும் பணிவும் பூண்டு, ஐயன் முன்னிலையில் நெஞ்சம் நெக்குநெக்கு உருக்க் கண்ணீருங் கம்பலையும் உடையவராய் அவன் புகழ்பாடி அவனது திருவருட் பெருஞ் செல்வத்தைப் பெற்றுப் பிழைத்திடுவாராக!
    -------------

    4. சிறுதேவதைகட்கு உயிர்ப்பலியிடலாமா?


      "எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
      தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே"
      - தாயுமானசுவாமி.

    கல்வியறிவும் நல்லோர் சேர்க்கையும் இரக்கமான நெஞ்சமும் இல்லாமையால், நிரம்பவுந் தாழ்ந்த நிலைமையிலுள்ள மாந்தர்கள் தாம் தாம் தமது குலதெய்வமாகக் கும்பிட்டுவருங் காளி பிடாரி மாரி குரங்கணி எசக்கி கறுப்பண்ணன் மதுரைவீரன் முதலான சிறு தெய்வங்களுக்கு அளவிறந்த ஆடு கோழி எருமை முதலான குற்றமற்ற உயிர்களை வெட்டிப் பலி இடுகின்றார்கள். தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் பலரும் இங்ஙனஞ் செய்து வருதலைப் பார்த்துப், ‘பன்றியொடு கூடிய கன்றுஞ்‘ செயல் மாறுபட்ட பான்மைபோற் சைவ வேளாளர் சிலரும் பார்ப்பனர் சிலரும் இச்சிறு தெய்வங்களை வணங்கப் புகுந்து, இவர்களும் மேற்சொன்ன ஏழை உயிர்களின் கழத்தை அறுத்து அவற்றைப் பலி ஊட்டுகின்றார்கள். உயிர்க்கொலையாகிய புலைத்தொழிலைச் செய்யுந் தாழ்ந்த வகுப்பாரைப் போலவே உயர்ந்த வகுப்பாருஞ் செய்யத் தலைப்பட்டால் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் இவர் என்று எங்ஙனம் பகுத்துச் சொல்லக்கூடும்? உயர்ந்தோருந் தாழ்ந்தோராய் மாற உலகம் எங்குந் தீவினையாகிய இருள் அன்றோ பரவும்! மக்களிற் பலர் தாழ்ந்தோர் ஆனதும் சிலர் உயர்ந்தோர் ஆனதும் அவரவர் இயற்கையினாலுஞ் செய்கையினாலும் அறிவினாலுமே என்பது எல்லார்க்கும் எல்லா நூலுக்கும் உடனப்டாம். தெய்வத்தன்மை வாய்ந்த திருவள்ளுவரும் இதனாலன்றோ,

      " மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
      பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்"

    என்றும்,

      "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
      செய்தொழில் வேற்றுமை யான்"

    என்றும்,

      "மேலருந்தும் மேல்ல்லார் மேல்ல்லர் கீழிருந்துங்
      கீழ்அல்லார் கீழ்அல்லவர்"

    என்றும் அருளிச் செய்தனர்? இழிந்த தன்மைகளும் இழிந்த செய்கைகளும் உலகிற் கணக்கற்றனவாய்ப் பெருகி இருப்பினும் அவை எல்லாவற்றுள்ளும் மிக்க் கொடியவை இரக்கம் அற்ற வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலுமே யாகும். உயிர்களைக் கொலை செய்தலும் அவற்றின் ஊனைத் தின்னுதலுமாகிய புலைத்தொழில், எல்லாத் தீவினைத் தொழிலிலும் கடைப்பட்ட தென்னும் உண்மை,
    "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை"
    என்னுந் தமிழ் மறையான குறளினாலும்,

    "உயிர்களைக் கொல்லச் சொன்னவன், கொன்றவன், ஊனை அறுக்கிறவன், அதனை விற்கிறவன், அதனை வாங்குகிறவன், அதனைச் சமைக்கிவறவன், பரிமாறுகிறவன், தின்கிறவன் என்னும் அவர்கள் அனைவருங் கொலைகாரர்களென்று சொல்லப்படுகிறவர்கள்" என்னும் வடமொழி மனமிருதியினாலும் தெளியப்படும்.
    இவ்வளவு இழிந்ததாக இருத்தலினாலேதான் உயிர்க் கொலை செய்பவர்களும் அதற்கு ஏதுவாய் இருப்பவர்களும் இழிகுலத்தவரென்றும், அப் புலைத் தொழிலை விட்டுச் சைவொழுக்கம் பூண்டவர்கள் உயர்குலத்தவரென்றும் வகுக்கப்படுகிறாயினர். கொலையாகிய தீவினைக்கடலைத் தாண்டி அருளொழுக்கமாகிய நல்வினைக் கரைமேல் ஏறின மேற் குலத்தவரை எடுத்து உயர்த்திக் கரைசேர்த்தலே புகழும் அறமும் ஆகும். கொலையையும் புலால் தின்னுதலையும் ஒருவன் அறவே ஒழித்துவிடுவானாயின், அதனால் எத்தனையோ ஆடு மாடுகள் கோழி குருவிகள் மான்கள் மீன்கள் உயிர் பிழைக்கு மல்லவோ? இங்ஙனமே ஒவ்வொருவராய்ப் புலைத் தொழிலைப் பலரும் நீக்க நீக்க எண்ணிறந்த உயிர்களுந் தத்தம் உடம்களில் நிலைபெற்று நின்று இனிது உயிர் வாழும் அல்லவோ? நம்முடைய உயிர் வாழ்க்கை நமக்கு இனிதாய் இருத்தல் போலவே எல்லா உயிர்களுக்குந் தத்தம் உயிர்வாழ்க்கை இனைதாயிருக்கின்றது. எல்லா அறங்களிலும் மேலதாய் விளங்குங் கொல்லா அறத்தைக் கைப்பற்றி ஒழுகும் நல்வினை வாய்ந்து அதனைப் பிறர்க்கு அறிவுறுத்தும் நிலையிலுள்ள சைவரும் பார்ப்பனருந் தமது உயர்வை மறந்து, தாமும் ஆடுமாடு கோழி வெட்டிப பலியிடுந் தீவினைப் படுகுழியில் வீழ்ந்தால், இனி உலகத்தில் நல்லறம் நிலைக்குமோ, சொல்லுங்கள்! கொல்லா அறத்திற்கு ஒரு பாதுகாவலாய் அமைந்த மேற்குலத்தாரே அதனை அழித்தால் அதனினும் பெருந் தீவினை வேறுண்டோ? வேலியே பயிரைத் தின்றால் விளைவதெப்படி?

    ‘இனி இச் சிற்றுயிர்களை நம் பொருட்டுக் கொல்லாமற் சிறு தெய்வங்களின் பொருட்டுக் கொல்விக்கின்றோமாதலால் அது தீவினையாகமாட்டா‘ தெனின், அது பொருந்தாது பிடாரி குரங்கணி எசக்கி மதுரை வீரன் முதலானவை யாவை? தாம் உயிரோடிருந்த காலங்களிற் பல வகையான கொடுஞ்செயல்களைச் செய்து அவற்றிற்காக அரசனாலும் பிறராலும் ஒறுக்கப்பட்டுக் காலம் முதிரா முன்னரே இறந்தொழிந்த மக்களின் பேய் வடிவங்களே யாகும். அவை தாம் செய்த தீவினையால் இந்த நிலவுடம்டிப விட்டுப் பேய் உடம்பிற் புகுந்து இருள் உலகத்தில் அலைந்து திரிகின்றன; தாம் செய்த தீவினை பேய் உடம்பில்தான் அடையும் கொடிய நிரயத் துன்பத்தால் தீர்ந்தவுடன், முழுமுதற் கடவுளின் திருவருளாணையால் மறுபடியும் அவை மக்களுடம்பிற் பிறக்கும். அறிவில்லா மாந்தர்கள் வணங்கிவருஞ் சில்லரைத் தெய்வங்களிற் பல இப்போது செய்யப்படும் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொள்ள மாட்டாதனவாய் இருக்கின்றன. ‘இப்போது இத்தெய்வத்தின் ஆட்டம் இங்கே ஓய்ந்து போயிற்று‘ என்று அவற்றை வணங்குவோர் சிலகாற் சொல்லுஞ் சொற்களே இதற்குச்சான்றாம். மக்களாய் இருந்தபோது கொலை களவு காமங் கட்குடி முதலான தீவினைகளைச் செய்து சடுதியில் இறந்து, கடவுளின் ஆணையாற் பேய் வடிவங்களாய் அலைந்து திரியும் அவ் ஆவிகளை வணங்குதலே குற்றமாகும். ஏனென்றாற், கொலைகாரர்களோடு பழக்கஞ் செய்பவன் அக்கள்வர் கூட்டத்தாலும், வேசிக் கள்வரோடு சேர்க்கையுள்ளவன் அவ் வேசிக் கள்வராலுங், கட்குடியரோடு சேர்ந்தவன் அக் கட்குடியராலுஞ் சூழப்பட்டுப் பெரிதுந் துன்புறுதல் போல, இத் தீய பேய் வடிவங்களைத் தெய்வங்களாக வணங்குவோரும் இவ் ஆவிகளால் எந்நேரமுஞ் சூழ்ப்பட்டு அவற்றால் மிகவுந் துன்புறுத்தப்ப்டுவார்கள். கொலை முதலான தீவினைகளைச் செய்வோர் நல்லோரை அணுகாமல் அஞ்சி விலகிப் போதல்போல, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தை வழிபடும் நல்லோரைக் கண்டு இக்கொடும் பேய்கள் அஞ்சி விலகி ஓடும். இவ் இயல்புகளெல்லாம் யாம் எழுதிய ‘ மரணத்தின் பின் மனிதரின் நிலை‘ என்னும் நூலில் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்; அவை எல்லாம் இங்கு விரிப்பதற்கு இடம் இல்லாமையால் அதிற் கண்டு கொள்க, நம் போன்ற சிற்றுயிர்களிற் சேர்ந்த இப் பேய்களையும் மற்றெல்லா உயிர்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லது சிவம் ஒன்றேயாம். தீவினைகளைச் செய்து பிறப்பிலும் இறப்பிலுங் கிடந்து உழன்று வருந்தும் பேய்கள் எதனையும் ஆக்கவேனும் அழிக்கவேனுஞ் சிறிதும் வல்லன அல்ல. இத்தகைய பேய்களைத் தெய்வஙகளாக வணங்குவது எதுபோலிருக்கிறதென்றால், ஓர் அரசன் கீழ் இருந்து வாழுங் குடிகள் தம் அரசனை வணங்காமல் அவ்வரசனால் ஒறுக்கப்பட்டுச் சிறையில் அடைக்க்ப்பட்டிருக்குங் குற்றவாளிகளை அவ்வரசனாகக் கருதி வணங்குதலையே ஒத்திருக்கின்றது. ஆக்கவும் அழிக்கவும் வல்லவனான இறைவனாற் படைக்கப்பட்டு அவ் விறைவனுக்குப் பிள்ளைகளாய் உள்ள எல்லா உயிர்களுள்ளும், மக்களென்னும் உயிர்கள் மற்ற ஏழையுயிர்களான ஆடு மாடு கோழி பன்றி முதலியவற்றை வெட்டி அவற்றிற்குப் பலியிடுவது எதனை ஒத்திருக்கிற தென்றால் குறைந்த மற்றவர் சிலருடைய கைப் பொருள் களைப் பறித்துக்கொண்டுபோய் அக்குற்றவாளிகளுக்குக் கொடுத்து அவர்களை அரசராகக் கருதி வணங்குவதையே ஒத்திருக்கின்றது. தன்னால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை இங்ஙனம் வணங்குபவர இன்னார் என்று தெரிந்த அளவானே, அரசன் அவர்களைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவது போல, இறைவனுந் தன்னால் ஒறுக்கப் பட்ட பேய்களுக்குத் தான் படைத்த உயிர்களைக் கொன்று பலியூட்டும் அறிவில்லா மாந்தரைக் கூற்றுவனைக் கொண்டு மிகவும் கடுமையாகத் துன்புறுத்துவன் என்பது திண்ணம். சிறு தெய்வங்களுக்கு உயிர்களைக் கொன்று பலியிடுவோர் இம்மையிலே தம் பிள்ளைகளைப் பறிகொடுத்து வருந்துவர்; தாமும் நச்சுக் காய்ச்சல், அம்மை, தொழு நோய், கக்கற்கழிச்சல், பொருட்கேடு முதலான துன்பங்களுக்கு ஆளாகிப் பதை பதைப்பர்; மறுமையிலும்,

      "கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
      வல்லிடி கார்ர் வரிகயிற் றாற்கட்டிச்
      செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை
      நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே"

    என்றும்,

      "கொன்றி லாரைக் கொலச் சொல்லிக் கூறினார்
      தின்றிலாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார்
      பனிறியாய்ப் படியிற்பிறந் தேழ்நரகு
      ஒன்றுவர் அரன் ஆணையி துண்மையே"

    என்றுந் திருமூல முனிவர் திவாய்மலர்ந்தருளிய வண்ணங், கூற்றுவன் தமரால் அனல் நிறைந்த நிரயத்திலும் மற்ற எழுவகை நிரயங்களிலும் அழுத்தப்பட்டு மிக நொந்து திரும்பவும் இந்நிலவுலகத்திற் பிறக்குங்காற் பன்றியாய்ப் பிறந்து நைவார்கள். எல்லா உயிர்களையும் படைக்கும் இறைவன் ஒருவனே அவற்றின் கால எல்லை அறிந்து அவற்றை அழித்தற்கும் உரியவன் அன்றி, மற்ற மக்கள் தம் போன்ற உயிர்களான பேய் வடிவங்களின் பொருட்டு வாய் அற்ற ஏழை உயிர்களின் கழுத்தை வெட்டிப் பலியூட்டுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமுந் தீவினையுமாய் முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள்! முழுமுதற் பொருளான சிவபெருமானை நேரே வணங்கும் நல்வினையும் நல்லறிவும் இல்லாதவர்கள் காளி கூளி எசக்கி கருப்பண்ணன் மதுரைவீரன் முதலான சில்லறை வடிவங்களை வணங்கினாலும், அவற்றிகு ஆடு கோழி மாடு முதலிய உயிர்களைப் பலியிடாமல், வணங்குதலே செயல் வேண்டும்; அங்ஙனம் இன்றி, அவற்றைப் பலியிட்டால் அவ்வுயிர்ப் பலிக் கடனை அவைகள் ஏற்றுக் கொள்ளமாட்டா. ஏனெனில் நிலவுலகத்தில் தாம் செய்த தீவினைகளுக்காக இறைவனால் ஒறுக்கப்பட்டு முன்னமே அலறித் திரியும் அப்பேய்கள், மாந்தர்கள் அறியாமையாற் செய்யும் உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளுமாயின், இறைவன் படைத்த உயிர்களை மக்கள் கொலை செய்யுந் தீவினைக்கு ஏதுவாய் இருந்தமை பற்றி அப்பேய்களை நம் பெருமான் இன்னுங் கடுமையாகத் துன்புறுத்துவன். ஆனதுபற்றி மக்கள் உயிர்ப்பலி இடுங்காலங்களில் எல்லாம் அப்பேய்கள் இறைவனது ஒறுர்ப்புக்கு மிக நடு நடுங்கி அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அப்பால் விலகி ஓடிப்போகும். அதனால் அத் தீவினைக்கு அவைகள் ஆளாவதில்லை; அவற்றைச் செய்யும் மாந்தர்களே அத் தீவினைக்கு முற்றும் உரியவராகின்றார்கள். அப்பேய்கள் மக்கள்மேல் ஏறி நின்று ஆடிய சில நேரங்களில் யாம் அவற்றின் நேரேயிருந்து கேட்டபோது அவை தமக்கு உயிர்ப்பலி ஆகாதென்றே கூறின. பொய்யாக மருள் கொண்டு ஆடும் பொல்லாத மாந்தர்களே உயிர்ப் பலியிட வேண்டும் என்று சொல்லிப் பழிக்குந் தீவினைக்கும் ஆளாகி இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுஞ் சிவபெருமானால் ஒருக்கப்படுகிறார்கள். ஆதலாற் சைவராய்ப் பிறந்த மேன்மக்களே,சிறு தெய்வ வணக்கத்தையும் உயிர்ப் பலியையும் அறவே விடுத்து, மற்றக் கீழ்மக்களும் அவற்றை விடும்படி செய்வித்துப் புகழையும் அறத்தையும் வளர்த்து எல்லாச் செல்வங்களோடும் பொலிந்து நம் முழுமுதற் சிவத்தின் திருவருளுக்கு உரியராய் வாழ்மின்கள்!
    --------------

    5. சீவகாருணியம்


      "கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற்
      குத்திரங் கோள்களவு
      கல்லாமற் கைதவரோ டிணங்காமல்
      சொல்லாமற் சொற்களைக் கேளாமற்
      றோகையர் மாயையிலே
      சொல்லாமற் செல்வந் தருவாய்
      சிதம்பர தேசிகனே"

    "சீவகாருணியம் என்பது இரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும். இதனைப் பிரித்தால் சீவ என்றுங் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும். சீவர்கள் என்பன யாவையோ வென்றால், தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடைய புல் மரஞ் செடி கொடி முதலியனவுந், தொட்டால் அறிவதொடு நாவினாற் சுவைக்குஞ் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர்களான நத்தை சங்கு கிளிஞ்சில் முதலியனவுந், தொட்டறிந்து நாவாற் சுவைத்தலொடு மூக்கால் நாற்றத்தையுணரும் மூன்ற்றிவயிர்களான கரையான், எறும்பு, ஈசல், முதலியனவுந், தொடுதலும் சுவைத்தலும், முகருதலும் என்னும் உணர்வுகளொடு கண்ணாற் காணும் வண்டுந் தேனீயும் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான்கு உணர்வுகளொடு காதாற் கேட்டுணரும் அறிவும் உடைய ஐந்தறிவுயிர்களான விலங்குகள் பறவைகள் காட்டு மிராண்டிகள் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காண்டல் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளொடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடைய ஆற்றிவுயிர்களான மக்களும் என்று சொல்லப் பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையுஞ் சீவர்களென்றே சொல்லப்படும்.

    இனிக் காருணியம் என்பது அருள் அல்லது இரக்கம் என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த குணமானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டுங் காணப்படுகின்றதேயல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐந்து வகைப்பட்ட உயிர்களிடத்துங் காணப்படவில்லை. இவ்வைந்து வகை உயிர்களிற் சில பசியெடுத்த காலங்களிலெல்லாந் தம்மினும் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்மைப் சிதைத்துத் தின்னுகின்றன. ஆதலால், இரக்க குணம் மக்கள் அல்லாத மற்றைய உயிர்களிடத்தில் இல்லை என்பது இனிது விளங்குகின்றதன்றோ?

    இனி, இவ் விரக்க குணமென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாங் கொடிய வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்க குணம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் இனிய மென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன. இந்தக் காரணத்தினாலேதான் இரக்க குணம் இல்லா உயிர்களின் தன்மை விலங்கின்றன்மை என்றும், இரக்க குணம் உள்ள உயிர்களின் தன்மை தெய்வத்தன்மை என்றும் வழங்கி வருகின்றோம். இனி மக்களின்றனமையோ இவ்விரண்டிற்கும் நடுவில் நிற்கும் இயல்பு வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் கொடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின்றன்மையை அடைகின்றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்துந் தம்முயிர்போல் தமக்குக் கிடைத்த காய் கனி கீரை கிழங்கு பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லா வுயிர்களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் தெய்வத் தன்மையுடைய ராகின்றார்கள். எல்லா உயிர்களிடத்தும் உயிர்களிடத்தும் இரக்கம் உடையவரான ஆண்டவனது பேரின்பத்தை நாம் நுகர வேண்டுமாயின், அவர் போல் அளவிறந்த இரக்க குணமாகிய தெய்வத் தன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இடினய இரக்க குணம் உடையவராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல கடவுள் அருள்புரிவான். இது,

      "கல்லால் எறிந்துங் கைவில்லால் அடித்துங் கனிமதுரச்
      சொல்லாற் றுதித்தும் நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம்
      எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான் இனி ஏதுசெய்யேன்
      கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே"

    என்று அருட்பெருஞ் செல்வரான தாயுமான அடிகள் கூறியவாற்றானுந், திருவருட் செல்வரான இராமலிங்க அடிகள்,

      "வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
      மனங்கலந்து மதி கலந்து வயங்கா நின்ற
      என்புகல தூன்கலந்து புலன்களோடும்
      இந்திரிய மவைகலந்துள் இயங்குகின்ற
      அன்புகலந் தறிவுலகந் துயிரைம் பூதம்
      ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
      இன்புகலுந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
      எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே"

    என்னும் அருட்பாவினாற் கொலைக்குண மில்லாதவர்களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிவான் என்று கூறியவற்றானும் நன்கு விளங்கும்.

    இன்னும் பேரிரக்க குணமான கொல்லாமை உடையவர்களுக்கு எல்லா நற்குணங்களுந் தாமே வந்து பொருந்து மெனவும், அவ்விரக்க குணம் இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய குணங்களும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைத் தனி விலங்குகளாக்கி விடுமெனவும் இனிது விளக்கும் பொருட்டே நம் தாயுமான அடிகள்,
    "கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்"
    என்றும்,

      "கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர்மற
      றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே!"

    என்றும் அருளிச் செய்தனர்களாயிற் கொல்லா விரத மாகிய தெய்வத்தன்மையின் மேன்மையுங் கொலைக் குணமாகிய விலகின்றன்மையின் தாழ்மையும் யாம் விரித்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

    இங்ஙனமே இரக்கமற்ற கொடிய கொலைத் தொழிலையும் அதனால் வரும் புலால் உண்ணுதலையும் நாம் பழகி வருவோமாயின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி கரடி சிங்கம் முதலிய விலங்குகளின் இயல்பை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களையும் அக்கொடிய தன்மையை அடையும்படி செய்து விடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் புலால் தின்று பழகுவாராயின் அவரோடு சேர்ந்த அக் குடும்பத்தாரும் நண்பர்களும் அவரைபோற் புலால் தின்று கெட்டுப்போவர். இது பற்றியே,

      ‘கொலையிலான் உதவு மன்னங் கூறிற்பே ரமுதமாகும்
      கொலையுளான் உதவும் அன்னங் கூறிற் பேர் விடமதாகும்.
      புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறுபோலக்
      கொலைஞர்தம் மனையில் உண்போன் கொலைஞனே ஆவன்ன்றே"

    என்னும் திருமொழியும் எழுந்த்து.
    இனி, அன்புருவாய் அருளுருவாயும் இரக்கவுருவாயும் விளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும் அருளும் இரக்கமும் நிரம்பியிருக்கின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான். இரக்கமில்லாமற் பல உயிர்களையுங் கொன்று தின்று வாழும் மக்களிடத்து அன்பு வைத்து அருள்புரிவான் என்பதும் வெளிப்படையாகும்.

    நாம் நம் தாயின் கருப்பையிலே தங்கியிருந்த காலத்தும், நிலத்திற் பிறந்துவளர்ந்து வருகின்ற காலத்தும் நமக்கு வேண்டுவனவற்றை நாம் கேளாமலே தானே அறிந்து கொடுக்கும் ஆற்றலும், நம்ற் சிறிதுஞ் செய்யலாகாத உடம்பின் அமைப்புகளை யெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்துவரும் ஐயன் அருளிவலிமையும் இங்கு என்னென்று எழுதுவேம்!

    இத்தனை இரக்கமுள்ள எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந் தந்தைக்கு அருமைப் புதல்வர்களாய் உரிமை வாய்ந்த எல்லா உயிர்களுந் தம்முள் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றியமையாத கடமையாகும். இதனை நினையாமல் மக்களான நாம் நம்மினுந்தாழ்ந்த உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் சினங்கொண்டு நம்மைக் கொடுந் துன்பத்திற்கு உள்ளாக்குவானென்பது திண்ணம்.

      "கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை"
      வல்லிடி கார்ர் வரிகயிற்றாற் கட்டிச்
      செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை
      நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே"

    என்றும்,

      "பொல்லாப் புலாவை நுகரும் புலையரை
      எல்லாருங் காண இயமன்றான் தூ துவர்
      செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்
      மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே"

    என்றுந் திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளினார். நாம் இப் பிறப்பிற் புலால் தின்றால் மறு பிறப்பிற்றானே ஏதோ கடவுள் ஒறுக்கப் போகின்றார் என்று எண்ணி விடாதீர்கள்! புலால் உண்பதனால் இந்தப் பிறவியிலேயே கோமாரி, அம்மை, கக்கற் கழிச்சல், வயிற்றுவலி முதலிய நோய்களையும், வறுமை, மனக்கவலை, சண்டை, கிறுக்குப் பிடித்தல்முதலான பொல்லாங்குகளையும் ஏவி, நம்மை நம் ஆண்டவன் துன்ப்பப்படுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயனார்ருளிச் செய்த,

      குற்றொருவரைக் கூறைகொண்டு
      கொலைகள் சூழந்த் களவெலாம்
      செற்றொருவரைச் செய்த தீமைகள்
      இம்மையேவருந் திண்ணமே,
      மற்றொருவரைப் பற்றி லேன் மற
      வாதொழி மட நெஞ்சமே.
      புற்றரவுடைப் பெற்றமேறி
      புறம்பயந்தொழப் போதுமே"

    என்னுந் திருமொழியே சான்றாகும். இன்னுங் கொல்லாத வர்களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர் களைத் தின்னச் சொல்லியுங் கட்டாயப் படுத்தினவர் களெல்லாரும் நிரயத்திற் சேர்வார்களென்று காசி காண்டம் கூறுகின்றது.

      "எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்,
      தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!"

    என்றபடி, எல்லா வுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி இரக்கத்தோடு நாம் நடக்கவேண்டும். நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்தி வெட்டுப்பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! நம்மை ஒருவர் வெட்ட வந்தால் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோ மல்லேமோ? இங்ஙனமே ஆடு மாடு கோழி கொக்கு பன்றி மீன் முதலான உயிர்களெல்லாந் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன! ஐயோ! அவற்றில் பால எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடியோர் கத்திகொண்டறுக்கையில் அவைகள் என்ன துடிதுடிக்கின்றன! ஆ! ஆ! அவற்றின் துன்பத்தை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நீராய் உருகவில்லையா? ஐயோ, பாவம்! வாயற்ற அவ் வேழை உயிர்களைக் கொல்லவுங் கொன்றதைத் தின்னவும் பெண்பாலார் அஞ்சிக் கைவிட்டால் ஆடவர்கள் புலால் தின்பது ஒழியுமன்றோ? நெடுநாளாக உயிர்களைக் கொன்று வந்த பாவச் செய்கையை நினைந்து இரக்கமுற்று நம் இறைவனாகிய தந்தையிடஞ் சொல்லி மன்னிப்புக் கேட்டு எந்த உயிர்க்குந் தீங்கு செய்யாமல் இரக்கம் பூண்டு ஒழுகுதலே மக்களுடைய கடமையாகும்.

      " கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க,
      எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே!"

    என்னுந் தாயுமான அடிகளின் திருமொழிப்படி, கொல்லா அறத்தின் மேன்மையை எங்கும் பரவச் செய்து அன்பும் இரக்கமும் உடையவர்களாய்த் தெய்வத் தன்மையை நாம் அடைந்து கடவுளுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும்.
    ---------------

    6. கடவுளுக்கு அருளுருவம் உண்டு

    அன்பர்கள் சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை யென்றும், மக்களுக்குரிய கண் கால் முதலிய உறுப்புகளின் அமைப்புகளை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமா மென்றுங் கூறுகின்றார்கள். ஆயினுங், கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகின்றது.
    உருவமென்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்தலாகாது. உருவம் மூன்று வகைப்படும். அஃது அறிவில்லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின் கண் அமைந்த்தும், அறிவொடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைந்ததும், இவற்றிலெல்லாம் மேலதான அறிவின்கண் அமைந்ததும் என மூன்றாம்.

    அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப் பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையை விட்டு ஓர் ஒழுங்குபட்ட விடத்தே உளதாவது. வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும் போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல்வடிவாயிருந்த ஆவியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்று மண்டிலந் திங்கள் மண்டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பிறகுதான், அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுகின்றன. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பிறகுதான் பெரிதும் பயனுடையவாகின்றன.

    இனி, அறிவுடைய உயிர்கட்கு இருப்பிடமான பல திறப்பட்ட உடம்புளும் ஆவிவடிவில் நின்றக்கால் உயிர்களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும், அவை ஓர் ஒழுங்குப்பட்டு உடம்புகளாய்த் தோன்றிய பின்னரே அவ்வுயிர்களுக்குப் பெரிதும் பயன்படுவனவாய் அமைந்தமையும் உணரற்பாலனவாம். ஆறறிவுடைய மேலான மக்கட் பிறவியெடுத்த நம்மனோர் தத்தம் உடம்புகளில் இருந்து வாழாராயின் அவரெல்லாம் அறிவு விளங்கப் பெறுவாரோ? மக்களுடம்பிலமைந்த கண் செவி முதலான உறுப்புகள் எத்துணை வியப்பான உருவ அமைப்பொடு பொருந்தி மக்கள் அறிவு விளக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றன! இவ்வுருவ அமைப்புளும் உடம்புளும் இல்லாதொழியின் மக்கள் அறிவுநிலை என்னாம் என்பதனை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? கண் பழுதான குருடனுங், காது காளாத செவிடனும், வாய் பேசாத ஊமனுங், கைகால் குறைந்த முடவனும் எவ்வளவு அறிவு விளக்கத்தை யிழந்து எவ்வளவு துன்பத்தை அடைகின்றார்கள். இதனால் உருவ அமைப்புகள் திருத்தமாய் முதிர முதிர மக்கள் அறிவும் முதிருமென்பதும் புலனாகின்றதன்றோ?

    இனி, அறிவின்கண் அமைந்த உருவத்தின் மேன்மையையும் ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும். தாயின் கருப்பையிலிருந்து பிறந்த மகவுக்கு உள்ள அறிவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அதன் அறிவு எவ்வளவு மழுக்கமடைந் திருக்கின்றது! அந்த நிலையில் அதற்கும் அறிவில்லாக் கல்லுக்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லை. கல் ஏதொரு முயற்சியுமில்து கிடக்க, அம் மகவோ வாய் திறந்து அழுதலும் பால் பருகுதலும் ஆன முயற்சி உடையதாயிருத்தலொன்றே அது கல்லின் வேறுபட்ட தன்மை உடையதென்பதை நமக்கு அறிவிக்கின்றது. அக்காலத்தில் எதனையும் நினைக்கவாவது அறியவாவது உணரவாவது அது வல்லதன்று. அங்ஙன மிருந்த அம் மகவு பசியால் உந்தப்பட்டுப் பால் பருகியும், அப் பாலைத்தரும் அன்னையை அறிந்தும், அதன் பின் தந்தையையும் உலகத்துப் பல பொருள்களையும் படிப்படியே அறிவதாகியுஞ் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுகின்றது. அங்ஙனம் அதன் அறிவு விளங்கப் பெறுகின்றது. அங்ஙனம் அதன் அறிவு மழுங்கியிருந்த நிலைக்கும் விளங்கிவரும் நிலைக்கும் வேறுபாடு என்னவென்றால், அழுக்குப் படிந்த கண்ணாடியில் ஏதோர் உருவமுந் தோன்றா திருந்தமையே மழுங்கிய நிலையென்றும், இடின அஃது உலகத்துப் பொருள்களை அறிய அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருக்கும் வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும் அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு அறியற்பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடையதாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கிறது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்கு பட்ட உருவமுடையதாய்த் திகழ திகழ அது மிகவுஞ் சிறப்பெய்துகின்றது.

    இங்ஙனமாக அறிவில்லாப் பொருளும் அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் ஓர் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்கமெய்துதலும் நமது பழக்கத்தில் மறுக்கப்படாத உண்மையாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தாவுரையாம். அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன் மிக உடையனவாய் விளங்குமாயிற், பேரறிவுப் பொருளாய் எல்லாம் வல்லவராய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவங் குற்றமுடையதாகுமோ? நன்கு ஆராய்ந்து பாருங்கள் அன்பர்களே! இனி அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் அறிவுள்ள உயிரோடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தனவாய் இருத்தல் போலவும், பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகமிகச் சிறந்தனவாய் இருக்குமென்பதை யாம் உரைத்தலும் வேண்டுமோ? அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாஞ் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாகலின் அதுபோல் உருவுடைய கடவுளும் அழிவரென்பது பெறப்படுமே எனின், அங்ஙனமன்று; அறிவில்லாப் பொருள்களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமே யல்லாமல், அறிவின்கண் உள்ள உருவம் எஞ்ஞான்றும் அழிய மாட்டாது. கொற்றொழிற்றேர்ந்த ஓர் அறிஞன் சலவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் அழகிய உருவம் அழிந்து போயினும், அதற்கு முதலாய் அவன் அறிவின் நின்ற உருவம் எஞ்ஞான்றும் அழிவதில்லை. அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அதுபோன்ற எத்தனையோ வடிவங்களை அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறிவுருவம் எஞ்ஞான்றும் அழியாமையை நன்குணர்ந்தவர்கள் கடவுளின் அருளுருவம் அழியுமென்று கூற ஒப்பிடுவார்களோ? ஆதலாற், கடவுளின் அருளுருவம் எஞ்ஞான்றும் அழியாத தொன்றா கலின் உருவங்களெல்லாம் அழியுமெனப் பொதுப்படக் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாத தொன்றாம்.

    இனி, உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று. அவை பருப் பொருள்களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும் அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அழியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும். அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரு தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின் கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப்பொருளின் தன்மையால் நேர்ந்த்தன்றி உருவத்தினால் நேர்ந்ததன் றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய இயல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியா இயல் பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொரு ளாகலின் அதன் கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர்வினா எவரல்லார்க்கும் விளங்கற்பால தேயாம்.
    இனி, உலகத்திலுள்ள அறிவில்லாப் பொருள்களும், அறிவுடைய உயிர்ப்பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. ஏனென்றால், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஓர் உருவத்தை அமைத்துக் கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங்களைப் பெறுதற்முன் அறிவு மழுங்கிக் கிடத்தலால் அவைகளும் உருவங்களைச் செய்து கொள்ள மாட்டா. கலங்கிய நிலையில் ஏதோருருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும் உருவங்களைப் பெறுவதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆழ்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும். அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென்னும் உண்மை ஐயமின்றித் துணியப்படுகின்றது. இவ்வுலகத்திற் காணப்படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின்கண் உண்டென்பதும் இதுகொண்டு முடிக்கப்படும். ஓவியக்காரன் வரையும் ஓவியங்களின் உருவங்களுக்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், கொற்றொழில் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டடங்கள் முதலானவற்றின் வடிவங்கட்கெல்லாம் முதல் அவனறிவின்கண் அமந்து கிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவுநூல்கள் முதலிவற்றிலெல்லாம் உள்ள பொருள்களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலனறிவின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம். பருப் பொருளிற் காணும் வடிவங்கள் சில பல காலத்துள் அழிந்துபோதல் போல அறிவுப் பொருளிற் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்குமென்பது மேலே காட்டப் பட்டமையிற், கடவுள் அறிவின்கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒரு காலும் அழியமாட்டா வென்று கடைப்பிடிக்க. பிராஞ்சு தேயத்தில் புகழ்பெற்ற இயற்பொருள் நூலாசிரியராய் விளங்காநின்ற பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிபுகளும் அறவுக்கு உருவமுண் டென்பதையும், அஃது ஏனை உருவங்கள் போல் அழியாது என்றும் நிலைபெறுமென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு உருவமில்லையென எளிதிற் கூறிவிடுவது அறிவு வளர வேண்டுவார்க்கு முறையாகாது. அது கிடக்க.

    இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களின் வடிவங்களும் அவை எத்துணை இழிந்தன வாயினும் அல்லது எத்துணை உயர்ந்தனவாயினும், அவை எத்துணைச் சிறயனவாயினும் அல்லது எத்துணைப் பெரியனவாயினும் – எல்லாம் மக்களாலாவது ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப்பட்டன வல்லவே! அவை யெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப்பட்டன வல்லவோ? அவ்வறிவால் ஆக்கப்பட்ட அவ்வடிவங்கள், அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் கடவுள் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ? ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோடொத்த வடிவங்கள் அக் கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங் கண்ணாடியின் எதரேயுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள் வடிவங்கள் அதன்கண் விளங்கித் தோன்னுமல்லவோ? ஆதலால் மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாமல் அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின் கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம் கடவுள் அருளின்கண் எல்லா உவங்களும் உண்டென்பதற்குக்,

      "குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும்,
      நெறிப்படநிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும்,
      வெறுப்போடு விருப்புத் தன்பான் மேவுத விலாமையானும்,
      நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளினாலே"

    என்னுஞ் சிவஞான சித்தியார்த் திருப்பாட்டே சான்றாகும்.

      எந்த வடிவில் வழிப்படுவார்க்கும் இறைவனருள் உண்டென்பதற்கு,
      "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே,
      எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாமே"

    என்னுந் திருநாவுக்கரசர் திருப்பாட்டே சான்றாகும்.

    இனிக், கடவுளுக்கு உருவமில்லையென்றும், அவர் அருவமாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவரென்றும், அதனால் நிர்க்குணோபாசனையே சிறந்த தென்றும், நன்றாய் ஆராய்ந்து பாராமற் கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழிகளாய் இருக்கின்றன. ஏனென்றாற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட் பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொருளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க, அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமிலாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாத்து பொருளாகுமா? என்று இங்ஙனமேயெல்லாஞ் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்க்வல்லவர்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொருளில்லாத வெற்றாவரா உரைகளோயாம் என்பது தெளிவாக விளங்கும். அங்கனமாயின், அறிவு நூல்கள் சிற்சில இடங்களில் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனென்றாற், சத்துவம் இராசதம், தாமதம் என்னும் வாலாப் பருப் பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லையென்பதை உணர்த்துற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடக்ளிற் கூறின வென்பது சிவஞானபோத மாடிபடியத்தில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது.

    இனிக் கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப்பட்டதானாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் உண்டுபண்ணுவதொன்றாதலால் அவற்றை உண்டுபண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவ் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானுங் கடவுள் அருவாய் இருப்பரென்று முரையும் வெற்றுரையே அல்லது பிறிதன்று. அங்ஙனமாயின், அறிவு நூல்களில் அவர் அருவரென்றும் ஓரோர் இடங்களிற் கூறப்படுதல் ஏனென்றால், மக்களுடைய ஊனக்கண்களுக்கு அவருடைய சொல்லப்பட்டதென்க. அருட் கண்ணுடையார்க்கு அவனது அருளுருவம் விளங்கித் தோன்றுமென்பதற்குத் திருஞானசம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன்றிருவுருவத்தைக் கண்டு பாடியதும்,

      "அவனருளே கண்ணாகக் காணினல்லால்,
      இப்படியன் இவ்வுருவன் இவ்வண்ணத்தன்
      இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே"

    என்று அப்பர் அடிகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க.

    என்ற இத்துணையுங் கூறியவாற்றால் உருவமானது பெரிதும் பாராட்டற்பாலதேய்னறி இழிக்கப் படத்தக்கன்றென்பதும், அறிவுவிளக்க மெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃதழியாத உருவ அமைப்பு வாய்ந்த்தாகவே நிலைபெறுமென்பதும், உலகிற் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் பொருட்டுக் காரணான கடவுளின் எல்லையற்ற கடவுள் அருட்குண முடையாராயும் அறிவுருவ முடையராயும் விளங்குவரல்லாம் நிர்க்குணராயும் அருவராயும் இருப்பரல்லரென்பதும், எவரெவர் எவ்வெவ்வுருவிற் கடவுளை வழிபடினும் அவரவர்க்கு அவ்வவ் வுருவிற் கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக்காட்டப்பட்டன.
    -------------

    7. கல்வியே அழியாச் செல்வம்

    "வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
    வேகாது வேந்தராலும்
    கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
    நிறைவன்றிக் குறைவுறாது
    கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ
    மிக எளிது கல்வியென்னும்
    உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்
    பொருள்தேடி யுழல்கின்றாரே!"

    சிலநாளில் தோன்றிச் சிலநாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம் மக்களுடம்பிற் பிறந்தவர்களான நாம் எந்த வகையான செல்வத்தைப் பெறுதற்கு முயல்ல் வேண்டுமென்றால், என்றும் அழியாத்தாய் நம் உடம்பு அழிந்தாலுந் தான் அழியாமல் நமது உயிரொடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புகளிலுந் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ் செல்வத்தையே அடைவதற்குக் கண்ணுங்கருத்துமாய் இருக்க வேண்டும். ஏன்? அழியாத செல்வத்தையே பெறவேண்டுமென்னும் விருப்பம் நம்மில் ஒவ்வொருவரிடத்தும் இயற்டகையாகவே காணப்படுதலாலும் அவ் விருப்பம் இல்லாதவர்களை எவ்விடத்தும் எக்காலத்துங் காண்டல் கூடாமையானுமென்க. ஒரு திங்கள், இரண்டு திங்களிற் கிழிந்து போகுஞ் சீமைத் துணிகளை வாங்கவிரும்புகின்றோமா? பன்னிரண்டு பதினைந்து திங்கள் கிழியாமல் அழுத்தமாயிருக்கும் நாட்டுப் புடவைகளை வாங்க விரும்புகின்றோம்? விலை சிறிது மிகுதியாய் இருந்தாலும் அழுத்தமாய் நீடித்திருக்கும் ஆடைகளை யல்லவோ வாங்க ஆவல் கொள்கின்றோம்? சிறிது கைதவறினாலும் கீழ் விழுந்து நொறுங்கிப் போகும் மட்பாண்டங்களைப் புழங்க விரும்புகின்றோமா? கீழே தவறி விழுந்தாலும் உடையாத வலுவாயுள்ள செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்களைக் கையாள விரும்புகின்றோமா? விலை ஏறியிருந்தாலும் நீண்டநாட் பயன்படுஞ் செப்புக்கலங்கள் பித்தளைக்கலங்களை யல்லவோ பொருள் கொடுத்து வாங்க விழை கின்றோம்? இங்ஙனமே நாம் நாடோறுங் கையாண்டு வரும் பொருளிகளிலுங்கூட விரைவில் அழிந்து போகாமல் நீண்ட நாள் நிலைத்திருக்கும் பொருள்களையே நாம் அடைய விரும்புதலால், நம்மில் ஒவ்வொருவருக்கும் அழியாச் செல்வத்தையே பெறவேண்டுமென்னும் அவா இயற்கையாகவே வேரூன்றி நிற்கின்றது.

    இங்ஙனம் அழியாச் செல்வத்தையே அடைய வேண்டுமென்னும் அவா நம்மெல்லாரிடத்தும் இயற்கையாக இருந்தாலும், முத்துச் சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும், பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் மறைந்த மதியின் துலக்கமும், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும்போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி, நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முயலாமல் நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைந்து, அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம். பாருங்கள், நம்மவர்களிற் பெரும்பாலார் மாடமாளிகைகளையும் ஆடை அணிகலங்களையும் தட்டு முட்டுகளையுந் தின்பண்டங்களையும் நாடக்க் காட்சிகளையும் வேடிக்கை விளாயாட்டுகளையுமே மேலான செல்வங்களாக்க் கருதி, அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலும் விடா முயற்சியுடையவர்களாய் இருக்கக் காண்கின்றோமே யல்லாமற், சிறிது நேரமாயினும் அடக்க ஒடுக்கத்தோடிருந்து நம்மைப் படைத்த சிவபெருமானை நினைக்கவும், நம்மைப் போலவே அவ்வாண்டவனாற் படைக்கப்பட்ட உயிர்களின் நன்மையைக் கருதவும், அவை பசியாலும் நோயாலும் வருந்துவதைக் கண்டு மனங்கசிந்து இரங்கித் தம்மால் இயன்றி அளவு அவற்றிற்கு ஒரு கைப்பிடி உணவாவது ஒரு காசு மருந்தாவது உதவ அவற்றின் துன்பத்தைப் போக்கவும், தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் ஔவைப் பிராட்டியார் காரைக்கால் அம்மையார் சேக்கிழார் பெருமான் முதலான உயர்ந்த அறிவுடையோரால் அருளிச் செய்யப்பட்டுள்ள அரும்பெரும் நூல்களை ஓதி உணரவும் முயற்சி வாய்ந்தவர்களாய் உள்ள ஆண் பெண்பாலரைக் காண்பது அரிதினும் அரிதாய்ப் போய்விட்டதே!

    ஆ!நாம் நிலையாக நினைத்த மாடமாளிகைகள் ஆடை அணிகலங்கள் தட்டுமுட்டுகள் முதலானவைகள் எல்லாம் நாம் நினைத்த வண்ணம் நிலையாக இருப்பவை தாமா? இல்லை, இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஐதராபாக்கத்திலும் வாணியம்பாடியிலும் நேர்ந்த பெரியதொரு வெள்ளப் பெருக்கினால் எத்தனை வீடுகள், எத்தனை மாளிகைகள் நிலமட்டமாக்த் துடைக்கப்பட்டு இருந்த இடமும் தெரியாமல் அழிந்து போயின! அவ் வீடுகளோடு அவ் வீடுகளில் இருந்த எவ்வளவு பண்டங்கள் எவ்வளவு ஆடை அணிகலன்கள் அழிந்து ஒழிந்து போயின! அப்போது அங்கே பெருஞ்செல்வர்களாயிருந்தவர் களெல்லாருந் தம்மால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏழைக் குடிமக்களைக் காட்டிலும் இழிந்த நிலையை அடைந்தவர்களாகி, உண்ணச் சோறும், உடுக்கத் துணியும் இன்றித் தத்தளித்த தெல்லாம் நாம் கேட்டு நெஞ்சம் நெக்குருகி வருந்தினம் அல்லமோ? ஆயிரத்து தொளாயிரத்து எட்டாம் ஆணடில் மே ற்குத் திசையில் உள்ள சிறந்த நகரமாகிய மெசினாப் பட்டினமானது நில அதிர்ச்சியினால் அழிந்து நீருக்கும் நெருப்புக்கும் இரையானதும், அப்போது அப்பட்டினத்திலிருந்த ஐந்தடுக்கு, ஆறடுக்கு மாளிகைகளும், அவற்றில் இருந்த அரியபெரிய பண்டங்களும், அவற்றில் இருந்து நூறாயிரக் கணக்கான மாந்தர்களும், அளவற்றி செல்வங்களும் நெருப்பில் வெந்து நீரில் அமிழ்ந்திப்போன வரலாறுகளை யெல்லாம் நினைக்கும்போது, செல்வங்களென்று காணப்படுமோ? அவற்றை மதிக்கும் நமது அறிவும் அறிவென்று சொல்லப்படுமோ?

    சில நாட்களுக்குமுன் மேற்கேயுள்ள ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை, ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனஞ் சொல்வேன! எங்னே பார்த்தாலுஞ் செக்கச் செவேலென்ற செந்நீர்க் களறியும், பிணக்காடும், பீரங்கி வெடியுங், கூக்குரல் ஒலியுமாய் இருந்தனவே! அத் தேயங்களிலுள்ள பத்துப் பதினைந்து மாடமாளிகை களுக்குந் தேவகோட்டங்களுக்கும் நமது சென்னப்பட்டினம் முழுதும் ஈடாக வைத்தாலும், அது அவற்றிற்கு ஈடாகாதே! அப்படிப்பட்ட உயர்ந்த கட்டிடக்ளெல்லாம் பீரங்கி வெடிகளால் தாக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கின்றன! எத்தைனை அரசர்கள், எத்தனை செல்வர்கள், எத்தனை போர்மள்ளர்கள், இச்சண்டையில் சாய்ந்து போனார்க்ள! நேற்று ஆடையணிகலன்கள் அணிந்து அறுசுவை யுணவு உண்டு தம்மை மறந்து அங்களித்திருந்தவர்களெல்லாரும் இன்று அவற்றை முற்றும் இழந்து மனைவியொருபுறம் மக்கள் ஒரு புறமாய்க் கையறுந்து காலறுந்து அழிவுகளை அறிந்து வைத்தும், இன்னும் நாம் இவ்வெளி ஆரவாரங்களைச் செல்வங்களென்று எண்ணலாமா? இது பற்றியன்றோ,

      "தெய்வச் சிதம்பரத்தேவர் உன்
      சித்தந் திரும்பிவிட்டாற்
      பொய்வைத்த சொப்பனமாம் மன்னர்
      வாழ்வும் புவியுமெங்கே
      மெய்வைத்த செல்வ மெங்கே
      கை வைத்த நாடகசாலை யெங்கே
      யிது கண்மயக்கே"

    என்று பட்டிணத்துப் பிள்ளையாரும் அருளிச் செய்தார்.

    இங்ஙனம் வெள்ளத்தால் அழிந்துபோவதும் வெந் நெருப்பால் வெந்துபோவதும் அரசர்களாற் கைப்பற்றப் படுவதுங் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போவதுங் கள்வர்க்காக நம்மை அஞ்சுவிப்பதும் பாதுகாப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தருவதுமான இச்செல்வம் நம்மால் எந்நேரமும் விரும்பத்தக்கதன்றென்பது இதனால் இனிது விளங்குகின்றதன்றோ? இவ்வாறு சொல்லுதலைக் கொண்டு நாம் செல்வத்தை வேண்டாமல் வறுமைப்பட்டு இந்த மண்ணுலகில் வருந்தியே காலங்கழிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தல் கூடாது, நமது மண்ணுலக வாழ்க்கை நடப்பதற்கும், பிற உயிர்களின் துன்பத்தைப் போக்கும் ஈகை அறங்களைச் செய்வதற்கும், மற்ற நல்ல முயற்சிகளைச் செய்வதற்கும் இன்றியமையாது வேண்டப்படும் பொருளைச் சேர்த்து, ஆரவாரம இல்லாமலும், எல்லாந் தனக்கே என்று எண்ணாமலும், தனக்கும் பிறர்க்கும் பல வகையால் நல்ல பயன்கள் விளையும்படி அதனைப் பயன்படுத்துதல் வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.

    இன்னும், இவ் வழிந்துபோகும் பொருளைப் படைத்தவர்களும் படையாதவர்களுமாகிய எல்லாரும் வெள்ளத்தால் அழியாதாய் வெந்தழலால் வேகாதாய் அரசர்களாலுங் கைப்பற்றப்படாதாய்க் கொடுக்கக் கொடுக்கக் குறையாதாய் கள்வர்களுக்காக அஞ்சவேண்டுவது இல்லாதாய், நமது அறிவினுள்ளே இருத்தலாற் பாதுகாப்பதற்கு எளிதாய் விளங்கும் அழியாச் செல்வமாகிய கல்விப் பொருளைப் பெறுதற்கு மிகவும் முயற்சியுடைவர்களாய் இருக்க வேண்டும். இதுபற்றியே, "வெள்ளத்தால் அழியாது" என்னும் அரிய பாட்டு இந்தக் கட்டுரைக்கு முதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. செல்வமானது வெளியேயுள்ள பருப்பொருளாதலால் வெள்ளத்தால் அழியும்; வெந்தழலால் வேகும். கல்வியானது நமது உயிரைப் பற்றி உள்ளே இருக்கும் நுண்பொருளாகையால் வெள்ளத்தில் அழியாது; வெந்தழலில் வேகாது. செல்வமானது பொன், நிலம், வீடு முதலிய பருப் பொருளாயிருத்தலால் அரசர்களாற் கைப்பற்றவும்படும். கல்வியானது அறிவுருவான நுண்பொருளாகையால் அவர்களாற் கவரப்படமாட்டாது. செல்வமான பிறர்க்கு எடுத்துக் கொடுக்கக், கொடுக்கக் குறைந்து போகும். கல்வியானது பிறர்க்கு எடுத்துச் சொல்லச் சொல்ல அளவில்லாமற் பெருகும். செல்வத்தை வைத்திருப்பவர்கள் எங்கே கள்வர் வந்து திருடிக் கொண்டு நம்மையுங் கொன்று விடுவார்களோ என்று எந்நேரமும் அச்சத்திலேயே காலங் கழிக்க வேண்டும். கல்வியை வைத்திருக்கும் புலவர்களோ அங்ஙனங் கள்வர்க்குச் சிறிதும் அஞ்சவேண்டுவதில்லை. செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அளவுகடந்த முயற்சி வேண்டும். கல்வியைப் பாதுகாப்பதற்கு அத்தகைய வருத்தம் வேண்டுவதில்லை. இங்ஙன மெல்லாங் கல்வியானது செல்வத்தினுஞ் சிறப்புடைய அழியாச் செல்வமாய் இருத்தலினாலேயே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

      "கேடுஇல் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
      மாடுஅல்ல மற்றை யவை"

    என்றும், ஔவைப் பிராட்டியார்,

      "மன்ன்னும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
      மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்- மன்ன்னுக்குத்
      தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
      சென்றவிட மெல்லாஞ் சிறப்பு"

    என்றும் அருளிச் செய்தனர்.

    ஆனால், சிலர், கல்வியானது ஆண்மக்களுக்குத் தாம் வேண்டுமே யல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லையென்றும், பழைய நாளில் மாதர்கள் எவருங் கல்வி கற்க வேணடுமென்று நூல்களிற் சொல்லப்படவில்லையென்றுங் கூறுவார்கள். உயிர்கள் என்ற பொது வகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களேயாவர்; உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறுதல் என்னுந் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு; மக்களுக்கும் உண்டு. ஆனால், மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவது ஏன் என்றால், நல்லது இது தீயது இது என்று பகுத்துணர்தலானுந், தம்மைப் போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானுங், கடவுளைத் தொழுதலானும், இங்ஙனமெல்லாந் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பல நூல்களைக் கற்றலானுமே மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவராக எண்ணப்படுகின்றனர். இவ்வுயிர்ந்த அறிவின் செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கும் மக்களுக்குஞ் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர்கள் விலங்குகளே யாவர் என்றுங், கல்வி இல்லாதவர்களுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ளமாட்டார்களென்றுங், கல்வியுடையவர்களே கண்ணுடையவர்கள் ஆவார்கள் அல்லாமல் மற்றவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்களே ஆவார்களென்றும் விளக்குதற்கன்றோ திருவள்ளுவ நாயனார்,

      "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
      கற்றாரோடு ஏனை யவர்"

    எனவும்,

      "கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினுங்
      கொள்ளார் அறிவுடை யார்"

    எனவும்,

      "கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
      புண்ணுடையர் கல்லா தவர்"

    எனவுந் திருவாய்மலர்ந் தருளினார்.

    இங்ஙனம் அறிவான் மிக்க ஆன்றோர், மக்களாய் பிறந்த எல்லார்க்குங் கல்வி இன்றியமையாது வேண்டற் பாலதேயாமென்று கூறியிருக்க, அஃது ஆணமக்களுக்குத் தாம் வேண்டுமே யல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லை யென்று உரைப்போர் உண்மை அறிந்தாராவரோ சொன்மீன்கள்! அருமைத் தாய்மார்களே, பெண்பாலார் மக்களினுந் தாழ்ந்த விலங்குகளா யிருந்தாலன்றோ அவர்கட்குக் கல்வி வேண்டாம் என்னலாம்? இவ் வுலக வாழ்க்கையை நன்றாக நடத்தும் முறையில் ஆண்மக்களைக் காட்டிலும் மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் வேண்டிய அவர்கட்குக் கல்வியெனுந் தூண்டா மணிவிளக்கைத் தராமல் அவர்களை அறியாமை என்னும் பேர்இருளிற் போகச் சொல்லுபவர்கள் உண்மை அறிந்தராவாரோ சொன்மீன்கள்!

    இனி முற்காலத்திருந்த ஔவையார், பூதப் பாண்டியன் பெருந்தேவியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலான பெண்மகளெல்லாருங் கல்வியில் மிகச் சிறந்தவர்களா யிருந்தமை தெரிந்தவர், பழைய நாளிற் பெண் மக்கள் எவருங் கல்வி கற்கவில்லை யென்று கூறுவரோ, சொன்மீன்கள்!

      "பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
      பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
      வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
      விருந்து மன்றி விளைவன யாவையே"

    என்று கல்வியிற் சிறந்த கம்பர் கூறியிருத்தலால், முற்காலத்தில் இருந்த பெண்மக்கள் எல்லாருங் கல்வியில் வல்லவர்களாய் இருந்தார்களென்பது இனிது விளங்க வில்லையா?

    இனிப் பெண்பாலார்க்கு ஆடை அணிகலன்கள் முதலான ஒப்பனைகள் அவரவர் அளவுக்குத்தக்கபடி சிறிது சிறிது வேண்டுவதேயாயினுங், கல்வியில்லாதவர்களுக்கு இவ் வாடையணிகலன்கள்ல் உண்டாகும் அழகு அழகாகமாட்டாதாகும். என்னுங் கருத்தோடு,

      "குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
      மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
      நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
      கல்வி யழகே யழகு"

    என்று நாலடியா ரென்னுஞ் சிறந்த பழமையான உயர்ந்த நூலிற் கூறியிருப்பதை உணர்பவர்கள் பெண்மக்களுக்குக் கல்வி வேண்டாமென்று சொல்லத் துணிவரோ கூறுமின் தாய்மார்களே!

    இனி, இங்ஙனமெல்லாம் ஆழ நினைந்து பார்க்குங் கால் ஆண் மக்களுக்குக் கல்வி இன்றியமையாததாய் இருத்தல் போலவே, அவர்போல் மக்கட் பிறப்பினரான பெண்மக்கட்குக் கல்வியானது இன்றியமையாத அழிவில் செல்வமாகுமென்பது நன்கு பெறப்படுகின்றது.

    இனி, அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு, உயர்ந்த நூல்களைக் கற்று வரும்போதே அந்நூல்களிற் சொல்லப் பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். "கற்றரிவார் கண்டது அடக்கம் அடங்க்காதார் பொச்சாந்துத் தம்மைப் புகழந்துரைப்பார்" என்றபடி நம் சிறிதும் பெருமை பாராட்ட்மலுஞ், செருக்கு அடையாமலும், பணநித் சொல்லும் பணிந்த செயலும் உடையவராய், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமுங் காட்டி, நல்லொழுக்கத்தில் வழுவாது எல்லாம் வல்ல முழுமுதுற் கடவுளான சிவபெருமானை மனமொழி மெய்களால் நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உலக வாழ்க்கையை இனிது நடாடத்தி, நாமும் பயனபெற்றுப் பிற உயிர்களையும் பயன்பெறச் செய்து வருதலே நாம் பெற்ற அழியாச் செல்வமாகிய கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும். இன்னும்,

      "யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
      யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
      யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி
      யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே"

    என்னுந் திருமூலநாயனார் திருமொழியை இடையறாது நம நினைவில் வைத்து நம்முள் அவரவர் செயலுக்குத் தக்கபடி இறைவனை வணங்கியும், ஆவினைப் பாதுகாத்தும், ஈகை அறங்களைச் செய்தும், எல்லாரிடத்தும் இன்சொற் பேசியும் ஒழுகுதலே அழியாச் செல்வமாகிய கல்வியாலாய பயனாகும்.
    -------------

    8. கல்வியுங் கைத்தொழிலும்

    இவ்வுலகத்திலுள்ள எல்லா மக்களுந், தம்முயிரையும் உடம்பையும் பாதுகாத்து இனிது வாழ்வதற்கு இன்றியமையாத கருவிகள் இரண்டு. அவை, கல்வியுங் கைத்தொழிலு மாகும். பெரும்பாலும் உலகத்தின்கண் நடக்கும் எல்லா முயற்சிகட்குங், கல்வியானது முதன்மையாக வேண்டப்பட்டு உடம்பைப் பாதுகாப்பதேயாயினுஞ், சிறப்பாக நோக்குங்கால் கல்வி உயிரைப் பாதுகாத்து வளர்ப்பதற்கே கருவியா யிருக்கின்றது. கைத் தொழிலோ எவ்வளவு நுட்பமாகச் செய்யப்படினும் அஃது உடம்பைப் பாதுகாக்கு முகத்தால், உயிருக்குஞ் சிறிது பயன்படுமேயல்லாது, அது கல்வி போல் உயிருக்கு நேரே பயன்படுவதன்றாம். ஆகவே, கல்வி ஒன்றுமே உயிர்க்கு நேரே பயன்படுவதாமென்பதுங், கைத் தொழிலோ உடம்பிற்குமட்டும் நேரே பயன்படுவதாமென்பதும் அறிதல் வேண்டும். எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அதற்கு அறிவு வேண்டியிருக்கின்றது. அறிவில்லாமல் எவரும் எதனையுஞ் செய்தலியலாது. அறிவுடையவன் தானெடுத்த ஒரு தொழிலைச் செவ்வையாகச் செய்து முடித்தலும், அறிவில்லாதவன் தான் துவங்கிய தொன்றை ஒழுங்காகச் செய்யம்ட்டாமற் பிழைபட்டு வருந்துதலும், நாம் நாடோறுங் காண்கின்றமல்லமோ? அறிவில்லான் பிழைபட்டுச் செய்யமாட்டாத ஒரு தொழிலை அறிவுடையான் திருத்தமாக்கி விரைவிற் செய்து முடிப்பதனைக் கண்டு நாம் எவ்வளவு மகிழ்கின்றோம்! அப்போதவன் அறிவின்றிறத்தைக் கண்டு எவ்வளவு வியப்படைகின்றோம்! அறிவின் இன்றியமையாமையை எவ்வளவு மிகுதியாய் உணர்கின்றோம். இத்துணைச் சிறந்த அறிவை எவரும் இயற்கையாகவே பெற்றுக் கொள்ளல் இயலாது. ஏனென்றால், எல்லா உயிர்களினறிவையும் அறியாமை என்னும் ஒரு பேரிருள் மறைத்துக்கொண்டிருக்கிறது. இருளைப் போக்குதற்கு ஒளியினுதவி கட்டாயமாக வேண்டப்படுதல்போல், நமதறிவை மறைக்கும் அறியாமை இருளைப் போக்குதற்குங் கல்வியாகிய விளக்கம் இன்றியமையது வேண்டப் படுகின்றது. கல்வியில்லாதாரிற் சிலரும் அறிவுடையோராக இருக்கக் காண்கின்றோமே யென்றால், அவர் அறிவுடையார் செய்யுஞ் சில அறிவுச் செயல்களைப் பார்த்தும் பழகியுஞ் சிறிது அறிவுடையராக்க் காணப்படினும், அவர் போலியாகப் பெற்ற அச் சிற்றறிவை மேன்மேற் பெருகச் செய்வதற்குக் கல்வியில்லாமையால் அவர் அறிவு பயனின்றாய்க் கழியும். இதுபற்றியன்றோ தெய்வப் பலமைத் திருவள்ளுவ நாயனார்,

      "கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
      கொங்ள்ளா ரறிவுடை யார்"

    என்றருளிச் செய்தனர். மேலும் மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றதோ அவ்வளவு வேறுபாடு கல்வி யறிவு உடையவர்கட்கும், அஃதில்லாதவர் கட்கும் உண்டென்பதும் விளங்கத் திருவள்ளுவ நாயனார்

      "விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
      கற்றாரோ டேனை யவர்"

    என்றருளிச் செய்திருக்கின்றனர். ஆகையால் கல்வி அறிவு இல்லாதவர் அதிற் சிறந்து விளங்குதலும் அறிவிற் சிறந்த தொழில்களைச் செய்து முடிப்பதும் இயலா. உடற் பாதுகாப்பின் பொருட்டு எத்தொழிலைச் செய்தாலுங் கல்வியின்றி அதனைச் செய்தலாகாது. நம் நாட்டவர்களோ வயிறு வளர்ப்பதற்குச் சோறு கிடைத்தால் போதுமென்றும். இப்பிறப்பில் அடைய வேண்டிய இன்பங்களைப் பெறுதற்கு ஏராளமான பொருளைத் தொகுத்துக் கொண்டால் போதுமென்றுஞ் சொல்லிக் கல்வி கல்லாமல் அறியாமையிலேயே தமது காலத்தைக் கழித்து மாண்டு போகின்றனர்! எல்லா அருளும் இரக்கமும் உடைய இறைவன் நமக்கு இநத்ப் பிறவியைக் கொடுத்து வெறுஞ் வோறு தின்பதற்கும், பொருள் சேர்ப்பதற்குந்தானா? மற்று இந்த உடம்பை பாதுகாக்கு முகத்தால் அறிவை வளர்ந்து அறியாமையைத் தொலைத்து அவனது பேரின்பத்தைப் பெறுதற்கன்றோ? இம்மை யின்பங்களை செவ்வையா யடைந்து மகிழ்ந்திருத்தற்குங் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படுவதாகும். உயர்ந்த கல்வியறிவு இல்லாதவன் எவ்வளவு பொருளைச் சேர்த்து வைத்தாலும் எவ்வளவு உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொண்டாலும் அவற்றை நுட்பமாகத் துய்த்து மகிழும் வழியறியாமையால் துன்பத்திலேயே கிடந்துழன்று மாய்ந்து போவன். ஆகவே, இம்மையின்பத்தைப்பெற வேண்டுவார்க்குங் கல்வி யறிவு முதன்மையாகு மென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஆகவே, கைத் தொழிலையே பெரிதாக எண்ணி அதில் புகுந்தவர்களுங் கல்வியறிவைப் பெறுதற்கு இடையறாது முயலல் வேண்டும்.

    ஐரோப்பா முதலான அயல் நாடுகளிலுள்ள மேன் மக்களோ கல்வியறிவுல்லாமல் எத்தகைய தொழிலையுஞ் செய்ய மாட்டார்கள். அவர்களில் எந்தத் தொழிலைச் செய்கின்றவர்களுங் கல்வியறிவிற் சிறந்தவராகவே காணப்படுகின்றனர்.அதனால், அவர்கள் நம்மனோர்க்கு நீண்ட காலம் பிடிக்கும் ஒரு கைத்தொழிலை மிகச்சுருங்கிய காலத்தில் சுருங்கிய செலவில் நேர்த்தியாகவுந் திறமையாகவுஞ் செய்து முடிக்கின்றனர். கல்வியறிவில்லா நம்மனோர் தம்மை வருத்தியும், வாயற்ற மாடு குதிரைகளை வருத்தியுஞ் செய்யும் ஒரு கைத்தொழிலை, ஐரோப்பிய நன்மக்கள் தமக்குள்ள கல்வியறிவால் அருமையான பொறிகளை (இயந்திரங்களை) அமைத்து. அவற்றினுதவியால் தமக்கும் பிற உயிர்க்குந் துன்பமின்றி இனிது முடிக்கின்றனர். இன்னுமிவர்கள் தங்களுக்குள்ள கல்வியறிவின் மேன்மையால் நாளுக்குநாள் எல்லா முயற்சியலும் பிறைபோல் வளர்ந்தோங்கி வருதலையும், அஃதில்லா நம்மனோர் அம் முயற்சிகளில் குறைமதி போல் தேய்ந்துபோதலையும் அறியாதார் யார்? ஆகையால் எத்தகைய முயற்சிகளிற் புகுவோரும் முதலிற் கல்வியறிவைப் பெறுதலிற் கருத்தூன்றக் கடவராக.

    இனிக், கல்வியிறிவின் உதவிகொண்டு செய்யப்படும் எல்லாக் கைத்தொழில் முயற்சிகளும் உழவு, நெசவு, வாணிகம், என்னும் மூன்று பகுதியிலே அடங்கும். அவற்றுள், உழவுத் தொழில் உடம்பைப் பாதுகாத்தற்கு முதன்மையான உணவுப் பொருள்களைத் தருவதொன்றாகையால், அது மற்றை யிரண்டிலுஞ் சிறந்த தென்று ஆன்றோரால் உயர்த்து வைக்கப்படுவதாயிற்று. இவ்வுண்மை.

      "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை"

    என்று திருவள்ளுவ நாயனாரும்,

      ”ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
      வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே – ஏற்றம்
      உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
      பழுதுண்டு வேறோர் பணிக்கு"

    என்று ஔவையாரும் அருளிச் செய்த மெய்மொழிகளால் அறிந்து கொள்ளப்படும். இவ்வளவு சிறந்த தொழிலை நம் நாட்டவர்கள் சிறிதுந் தாழ்வாக நினையாமல் அதனைப் பலவைகயாலும் பயன் மிகத் தரும்படி மேன்மேற் பெருகச் செய்தல் வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா முதலான நாடுகளிலுள்ள மேலோர்கள் நிலத்தை வளப்படுத்துதற்குரிய புதிய புதிய முறைகளைக் கையாண்டு, காலத்திற்கேற்ற பயிர்களை விளைவித்து ஏராளமான கூலங்களையும், மற்றைப் பண்டங்களையும், உணவுப் பொருள்களையும் பெறுகின்றார்கள். மழை பெய்யவேணடுங் காலத்து மழை பெய்யாவிட்டாலும், அதனால் அவர்கள் கேடு உறாமல் மின் ஆற்றலின் உதவியினாலும், வேறு சில முறைகளினாலும் பயிர்பச்சைகளை விளைவித்துக் கொள்ளுகின்றார்கள். நம் நாட்டவர்களோ என்றால் ஒரு மழை தவறினாலும். பயிர் பச்சைகளை வளர்க்கும் வழி தெரியாது கொடுஞ் பஞ்சத்திற் குள்ளாகி மிகவுந் துன்புறுகிறார்கள். மேலும், பலபல பயிர்களின் தன்மைகட் கிசையப் பல திறப்பட்ட எருக்களை அவர்கள் திறமையாக சேர்ப்பது போல, நம்மவர்க்குச் சேர்க்கத் தெரியாது. பயிர்கட்குத் தக்கவாறு செவ்வையான எருச் சேர்க்க நம்மவர்களுங் கற்றுக் கொள்வார்களாயின் இப் போதடையும் ஊதியத்தினும் பதின்மடங்கு மிகுதியான ஊதியத்தைப் பெறுவார்களென்பதில் எட்டுணையும் ஐயமின்று; இங்ஙனமே பயிர்த் தொழிலில் அறியற் பாலனவாய் உள்ள நுட்பங்கள் எண்ணிறந்தன. இவை யெல்லாங் கல்வியறிவின்றி வரமாட்டா. ஆகையால், இவற்றைக் கல்வியறிவால் ஆராயந்தறிந்து உழவுத் தொழிலைச் சிறக்கச் செய்வார்களாயின் நம்மவர்களும் நம் நாடும் மற்ற எல்லாரையும், எல்லா நாடுகளையும்விட மிகச் சிறந்து விளங்கு மென்பது திண்ணம்.

    இனி, உழவுத்தொழிற்கு அடுத்த நிலையில் அகத்தியமாகச் செயற்பாலது நெய்தற் றொழிலே யாகும். நாகரிக வாழ்க்கையுள்ள எத்திறத்தவர்களுந் தமதுடம்பை மறைத்தற்கு ஆடைகள் வேண்டி நிற்கின்றன ரல்லரோ? "ஆடையில்லா மனிதன் அரை மனிதன்" என்ற பழமொழிப் படி மேலே துணியில்தவர் விலங்குகளினுந் தாழ்ந்தவராக்க் கருதப்படுவர். விலங்கினங்கட்காயினும், மேற் போர்வை போன்ற மயிர்க் கற்றைகளுங் குறிகளை மறைத்தற்கு வாற்புறங்களுங் கடவுளருளால் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்களோ பகுத்தறிவு உடையராயிருத்தலால் அவர்கட்கு அவற்றைக் கொடுத்திலர். அவர்கள் தமதறிவுகொண்டு ஆடை நெய்து உடுக்க வேண்டியவர்களாயிருக்கின்றார்கள். உடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாச் சிறப்பினதான உணவைத் தருதல்பற்றி உழவுத்தொழில் எல்லாத் தொழிலிலும் மேலானதென்று சொல்லப்படினுந் தீவினை ஒருசிறிது மில்லாத் தொழில் எதுவென்று ஆராயுமிட்த்து, அது நெய்தற்றொழிலாகவேயிருத்தலால், அவ்வகையில் அஃது உழவுத்தொழிலும் மேலான தென்றே கொள்ளப்படும். இது பற்றியன்றோ, தெய்வப் புலமைத் திருவள்ளு நாயனார் உழவுத் தொழிலையே சிறப்பித்துக் கூறினாராயினுந் தாம் நெய்தற்றொழிலையே செய்துகொண்டு உயிர் வாழ்ந்தனர். உழவு செய்யுங்காற் சிற்றுயிர்கள் சிலபல மாளுதலின் அதிற்சிறிது தீவினை உண்டென்றும், நெய்தற்றொழில் ஓருயிர்க்குந் தீங்கின்மையின் அதிற் சிறிதுந் தீவினை யில்லை யென்றும் அறிதல் வேண்டும். இத்துணைச் சிறந்த நெய்தற்றொழிலை அயல் நாட்டவர்கள் வியப்பான பல பொறிகளமைத்து நிரம்பத் திறமாக நடத்தி அளவிறந்த ஊதியத்தை எய்த, நம் நாட்டவர்களோ, கல்வியறிவின்மையால் இதில் மிகவும் பிற்பட்ட நிலையினை யடைந்து ஏழைகளாயிருக்கின்றார்கள். இனியாயினும், அவர்கள் அங்ஙனங் கல்வியை இகழ்ந்திராது, அதனைத் தாமுங் கற்றுத் தம் மக்கட்கும் நன்கு கற்பித்து நெய்தற்றொழிலைச் செவ்வையாய் நடத்தி வாழ்வாராக!

    இனி, உழவுத் தொழிலானும், நெய்தற்றொழிலானும் உண்டாக்கிய பொருள்களை ஒன்ற்ற்கொன்று தொலைவாகவுள்ள பற்பல நாடுகளிலும் உள்ள மக்கட்குப் பயன்படும்படி சேர்ப்பித்தற்கு வாணிகமானது மிகவும் உதவி செய்வதாகும். இத் தொழில் நடைபெறா தானால் எல்லாரும் எல்லா பொருள்களையும் பெற்று இன்புற்று வாழல் முடியாது. எந்தெந்த நாட்டில் எந்தெந்த பொருள்கள் நயமாய்க் கிடைக்கு மென்பதை ஆராய்ந்தறிந்து, அவற்றை ஓரிடத்திற்றொகுத்துப் பலர்க்கும் பயன்படுத்தித் தாமும் பயனடைதற்குக் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படும். வாணிகம் நடாத்துவார்க்குக் கல்வியறிவு அகத்தியமாய் வேண்டப்படுமென்பதை உணர்ந்த அயல் நாட்டவர்கள் கல்வியறிவிற் சிறந்தவராயிருக்கின்றார்கள். நம் நாட்டில் வாணிகம் நடாத்துகின்றவர்களோ எழுதப் படிக்கச் சிறிது தெரிந்தாற் போதுமென்று மனப்பால் குடித்துக் கல்வியில்லாதவர்களாய்க் காலங் கழிக்கின்றனர். இவர்களில் எவ்வளவு பணம் படைத்தவர்களாயிருந்தாலும், இவர்களில் கல்வியறிவிற் சிறந்த அயல் நாட்டு வாணிகர்கள் ஒரு பொருட்படுத்துவதேயில்லை. இங்ஙனந் தாம் கல்வியறிவுடைய பிறரால் இகழப்படுதல் உணர்ந்தாயினும், இனிமேல், தாமுந், தம் மக்களுந், தம்மினத்தவருங் கல்வியில் மேம்பட்டு விளங்க முயன்று, அதனால் வாணிக வாழ்க்கையை எவ்வாரும் புகழும்படி நடாத்திச் சிறப்பெய்துவராக!
    --------------

    9. பகுத்துணர்வும் மாதரும்

    மாதர்களுடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் நாடி, அவர்களுக்கு முதன்மையாக வேண்டுஞ் சில சிறந்த பொருள்களை இங்கே சிறிது விளக்கிச் சொல்வாம் நமது தமிழ் நட்டைத் தவிர, மற்ற நாடுகளிலிருக்கும் பெண்மணிகள் கல்வியிலும் கடவுள் வணக்கத்திலும் நாகரிக ஒழுக்கத்திலும் நாளுக்குநாட் பிறைபோல் வளர்ந்து மிகவும் இனிதாக உயிர் வாழ்க்னிற்ர்கள். நமது தமிழ் நாட்டு மாதர்களோ சிறந்த கல்வி உடையவர்களும் அல்லர்; உண்மையான கடவுளை வணங்கத் தெரிந்தவர்களும் அல்லர். உண்ண உணவும், உடுக்கத் துணியும், இருக்க இடமும் கிடைத்தாற்போதும் என்றும், இவைகளுக்கு வறுமைப்படாமல் வாழ்வதே இன்ப வாழ்க்கை என்றும் நினைத்து உணவு, உடை, இருப்பிடம் என்னும் இவைகளைத் தேடிக்கொள்வதிலும், தேடிய இவற்றை உண்டு உடுத்து உறைவிடமாக்கி உறங்கிக் கழிவதிலுந் தான் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள். உயர்ந்த அறிவாவது உயர்ந்த நோக்கமாவது நம் பெண்மணிகளுக்குச் சிறிதும் இல்லை; அல்லது உயர்ந்த அறிவையும் நோக்கத்தையும் பெறல் வேண்டுமென்னும் விருப்பமாவது இவர்களுக்கு இருக்கின்றதோ வென்றால் அது தானும் இல்லை. உண்டு. உடுத்தி உறங்கி வாழ்நாட் கழிப்பதைவிட மக்களால் அடையத்தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள்.

    அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச் சிற்றுயிர்களுங்கூடப் பசியெடுத்தபோது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேட உட்கொண்டும், மலையருவி ஆறு ஏர் குளங் கூவல் முதலியவற்றின் நீரைப் பருகியும், பசி தீர்ந்தபின் மரங்களின் அடியிலோ செடிகளின் நடுவிலோ மலைப் பிளவுகளின் இடையிலோ கிடத்துங் கவலையின்றி உறங்கிக் காலங்கழிக்கின்றன. மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும். இச் சிற்றுயிர்களுக்கோ அடையும் வேண்டுவதில்லை. மழையில் நனையாமலும் பனியிற் குளிராமலும் வெயிலில் வெதும்பாமலும் அவ்வுயிர்களைப் பாதுகாக்கத் துடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான். வெப்பமிகுந்த நமது தமிழ் நாட்டிலுள்ள ஆடுமாடுகளுக்குக் குளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமையால், அவைகளின் உடம்பின்மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால் வடக்கே இமயமலையிலும், அம் மலைச்சாரலில் உள்ள இடங்களிலும், அடர்ந்து நீண்ட மயிர்களிருத்தலைக் காணலாம். ஏனென்றால், போய்ப் பார்த்தால் அங்குள்ள ஆடுமாடுகளுக்கு அம்மலை நாடுகளில் தாங்க முடியாத பனியுங் குளிரும் மிகுந்திருக்கின்றன; அவ்வளவு பனியிலுங் குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளனவாயிருந்தால், அவை உடனே விறைத்து மாண்டுபோகும். ஆதலால் அவ்வாடு மாடுகள் அங்குள்ள பனியிலும் குளிரிலும் மாண்டுபோகாமல் அவற்றைப் பாதுகாப்பதற்காகவே எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின் மேல் நீண்டு அடர்ந்த மயிரை வளரச் செய்திருக்கின்றான்.

    ஆகவே, உணவின் பொருட்டும் உடையின் பொருட்டும் இருப்பிடத்தின் பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற் றாழ்ந்த சிற்றுயிர்களுக்குச் சிறிதும் இல்லை. வேண்டும்போது இரைதேடித் தின்றும். உறக்கம் வந்தபோது உறங்கியும், ஆணும் பெண்ணுமாய்க் கூடி தம் இனங்களைப் பெருக்கியும் அவைகள் கவலையின்றி காலங்கழிக்கின்றன. இப்படிப்ப்ட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கையும, உணவுக்கும், உடுப்புக்கும், இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு, மனைவியாற் கணவனுங், கணவனால் மனைவியும், பெற்றோராற் பிள்ளைகளும், பிள்ளைகளாற் பெற்றோர்களும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் குடும்பத்தாரும், ஓர் ஊராரால் அவர் தம் அரசரும் ஓர் அரசரால் அவர் தம் ஊராரும் ஆக எல்லாருமாய்ப் பலவகை துன்பங்களுக்கு ஆளாகி நோயிலுங் கவலையிலும் இடையறாது உழன்று வருந்திவரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்ப வாழ்க்கையைவிடச் சிற்றுயிர்களின் இன்ப வாழ்க்கை எத்தனையோ மடங்கு சிறந்ததாய் காணப்படுகின்றதன்றே? நம்மைப் படைத்த உண்மையான கடவுளை நினையாமல் நம் போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியுந் தம்மையே தாம் பெரியராக நினைந்தும் வாழ்நாள் முதிரா முன்னரே கவலையாலும் நோயாலும் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட் பிறவியைவிட இறைவனது பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர் வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்த்தா யிருக்கின்றதன்றோ? அங்ஙனம் இருக்க, உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறுதல் என்னும் இவைகளாலேயே மக்கள் வாழ்க்கை யானது சிறந்த்தாயிருக்கின்றதென நினைப்போமாயின் அஃது எவ்வளவு பேதமையாக்க் காணப்படுகின்றது!

    அப்படியானால், எல்லாப் பறிவிகளையும்விட மக்கட் பிறவியே சிறந்ததென்று அறிவுடையோர்களும் அவர் செய்துவைத்த நூல்களுஞ் சொல்வது ஏன் என்றால், எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்தாயிருக்கின்றது எனப்தை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்து தெளிதல் வேணடும். மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாயிருக்க, மற்றைச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனாலேதான் நமது பிறவியானது மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிற்ந்த்தாகுமென்று அறிகின்றோம். விலங்குகளுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. அவை வழக்கமாய்த் திண்ணும் தீனியையே உட்கொள்ளும்; பெரும் புதர்களிலும் மலைக்குகைகளிலும் மர நிழல்களிலும் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றுக்கு மேல் அவை ஒன்றையும் அறியமாட்டா; மேன்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழிவகைகளும் அவை தெரிந்து கொள்ள முடியாது; பிற உயிர்களுக்கு நன்மையாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவதில்லை. இந்த உலகத்தில் நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கின்றோம்? இந்த உடம்பு ஏன் நிலையாயிருப்பதில்லை? சிறிது காலத்தில் இந்த உடம்பு அழிந்து போக உயிர் எங்கே போகின்றது? இந்த உடம்பின் உறவால் வந்த பெற்றோரும் மனைவி மக்களும் உடன் பிறந்தாரும் நேசரும் சுற்றத்தாரும் சூழ்ந்து கொண்டிருக்கவும் இநத் உயிர் திடீரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப் போகும் உயிரை இவர்கள் ஒருவரும் தடுக்க மாட்டாதவர்களாய் அலறி வீழ்ந்து அழுவதேன்? எவராலுந் தடுக்க முடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்தவனது நோக்கம் யாது? பெருந்துன்பத்துக்கு இடமான இப்பிறப்பு இறப்புகளை நீக்கும் வழி யாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கக்கூடிய உணர்ச்சியும், அவ் வுணர்ச்சியால் அடையத்தக்க பெரும் பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை. மக்களாகிய நாமோ இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவ் வாராய்ச்சியால் வரும் பயனை அடையத்தக்க, உயர்ந்த நிலையில் இருக்கின்றோம். கிடைத்தற்கு அரிய இவ்வுயர்ந்த நிலையில் இருந்தும், இவ்வுண்மைகளை ஆராய்ந்துப் பாராமல், விலங்குகளைப் போல் உண்பதிலும் உறங்குவதிலும் காலங்கழித்து, வகை வகையான உடைகளை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்குநாள் வளரும் புதுமைகளைக் காண்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப்பண்டங்களைமோப்பதுங், கற்க்க் கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட்பிறவியினால் அடையத்தக்க பெரும்பயன்கள் என்று நம்மவர் நினைப்பார்களாயின் ஐயோ! அவர்கள் விலங்கினங்களினுங் கடைப்பட்டவர்கள் ஆவார்கள் அல்லரோ?

    ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத்துணர்ச்சியை நாம் பலவகையான உயர்ந்த வழிகளிலும் வளரச் செய்து அதனால் அழியாப் பெரும் பயனை அடைதல் வேண்டும். இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும் அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா. நாவுக்கு இனியைன பண்டங்களை நாளுக்குநாட் புதிய புதியவாகச் செய்யக் கற்று வருகின்றோம்; கண்ணுக்கு அழகான உடுப்புகளையும் நகைகளையும் வகைவகையாகச் செய்வித்து அணிந்து வருகின்றோம்; பார்க்கக் பார்க்கக் கவர்ச்சிதரும் ஓவியங்களை (சித்திரப்படங்களை) எழுதுவித்தும், பாவைகளைச் செய்வித்தும் அவற்றை நம்முடைய இலக்கியங்களில் வைத்துப் பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன் மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப் பசிய தோட்டங்களையும் அமைப்பித்து அவ் வீடுகளிற் களிப்புடன் குடியிருந்தும் அத் தோட்டங்களில் மனக் கிளர்ச்சியோடு உலவியும் வருகின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவ முதலான இசைக்கருவிகளின் இனிய ஓலிகளையும், அவற்றோடு சேர்ந்து பாடுவார்தம் இசைப் பாட்டுகளையுங் கேட்டுப் பெருங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணங் கமழும் பலவகை மலர்களைச் சூடியும், அம் மலர்களிலிருந்துஞ், சந்தனக் கட்டை அகிற் கட்டை முதலியவற் றிலிருந்தும் பெற்ற நெய்யையுங் குழம்பையும், பூசியும் இன்புறுகின்றோம்; மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவைகளின் தூவிகளாலும் அமைக்கப்பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த மருப்புக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின்மேற்படுத்து, இனிது உறங்குகின்றோம். இன்னும், ஏவற்காரரால் வீசப்படும் வெட்டிவேர் விசிறிகளாலுந்தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற்கால வியர்வையினையும் புழுக்கத்தினையும் மாற்றி மகிழ்ச்சியடைகின்றோம்; தறமைமிக்க புலவர்களால் எழுதப்படும் புதியபுதிய கதைகளைப் பயின்று உள்ளங்களிக்கின்றோம். இங்ஙனமாக, நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் உதவியைக் கொண்டு நாளுக்குநாள் நாம் அடைந்து வரும் இன்பங்களை முற்ற எடுத்து முடித்து உரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு இடங் கொள்ளாது.

    மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன் பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிய புதியவாகக் கண்டு பிடிக்கப்பட்டு பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால், நாம் எல்லையில்லாத இடர்க்கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் புதுப்புது நலங்களை அடைந்து, இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம். நீராவி வண்டிகள் ஏற்படாத அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முந்தி நம் முன்னோர்கள் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்ல நேர்ந்தால் அப்போது அவர்கள் எவ்வளவு துன்ப்ப்பட்டார்கள்! அக் காலங்களிற் செவ்வையான பாட்டைகள் கிடையா. இருந்த சில பாட்டைகளோ கல்லுங் கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக் கால்நடையாய்ச் செல்வார்க்கும் மாட்டு வண்டிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்தத்தையுங் காலக்கழிவினையும் பணச்செலவினையும் உண்டாக்கின. அப்பாட்டைகள் காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள் இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச் செல்வோர்கள் புலி கரடி ஓநாய் பாம்பு முதலான கொடு விலங்குகளாலும் கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும், பொருள் இழந்து அரிதாய உயிர் தப்பியுந் துன்புற்றார்கள்; வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்து விட்டால், ஓடம் விடுவார் இல்லாதபோது, அக்கரையி வந்து சேர்ந்தார் அங்கேயும் இக்கரையிற் போய்ச்சேர்ந்தோர் இங்கேயும் ஆக, வெள்ளம் வடியும் நாட்கள வரையிற் கவலையொடு காத்திருந்தார்கள்.

    கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள பிறிது ஓர் ஊர்க்குச் செல்ல இத்தனை துன்பங்களை அடைநத்ர்களென்றாற், கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களும் பெருங் கடல்களுக்கு அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) முதலான நாடுகளிலிருந்த மாந்தர்களும் இப் பாரதநாட்டுக்கு (இந்தியாவுக்கு) வரவும் இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல் நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும்!

    அக்கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத்திலிருந்த முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்வதில்லை. முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்க மாட்டாதவர்களே தாம் இருந்த ஊரை விட்டு, வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச் சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங்களிலேயே தத்தமக்கு வேண்டிய உணவுப் பண்டங்க்ளைப் பயிர் செய்துகொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே காலங்கழித்தனர்.

    அக்காலத்தில், ஓர் ஊரில் உண்டாக்கப்பட்ட பண்டங்கள், பிறிதொரு சிறிய ஊர்க்குச் செல்வதில்லை. காவிரிப்பூம்பட்டினம். உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலூர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப்படுத்த வரும். நிரம்பப் பாடுபட்டு அப்பண்டங்களை அந் நகரங்களிற் கொண்டு போய்ச் சேர்ப்பிக்க வேண்டியிருத்தலால், வணிகர்கள் அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர்; கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும்பண்டங்கள் கப்பல்களின் வழியாக வரவேண்டியிருந்தமையாலும், அக்காலத்துப் பாய்கட்டிக் கப்பல்கள் கடலிலுள்ள சூழல்களுக்கும் அங்கே வீசுஞ் சூறைக் காற்றுகளுக்குந் தப்பிப் பிழைத்துச் சென்று, அயல் நாடுகளிற் கிடைத்த அவ் அரும்பண்டங்களை ஏற்றிக் கொண்டு திரும்பி இங்கு வந்து சேரப் பல திங்களும் பல ஆண்டுகளும் கடநது போனமையாலும் அவ் அரும்பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தார்கள். அதனால் மிகச் சிறந்த செல்வர்களாய் உள்ளவர்களே அவ்வுயர்ந்த பண்டங்களை வாங்கத்தக்கவராய் இருந்தார்கள். மற்றவர்க ளெல்லாரும் அவைகளை வாங்குதற்கு ஏலாமல் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர்.

    இவைகளே யன்றி, அக் காலத்தில் இன்னும் ஓர் பேரிடர் இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழை பெய்யவேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் மறுத்து விட்டால், அவ்வூர்களின் விளைபொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊல்களிலுள்ள உணவுப் பொருள்களை விளையாத ஊர்களுக்கு விரைவிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை; அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர்களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர்.

    ஆனால் இக்காலத்திலோ முற்கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன. எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவனுக்குப் பின்வந்த ஆங்க அறிஞர் பலர் அந் நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையும் இடர் நேராமல் மிகு விரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து கொண்டதனாலேயேயாம். ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேரவேண்டும் ஊர்களை இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களில் போய்ச் சேர்கின்றோம்; முன்னே ஐந்நூறு ரூபாய் ஆயிர ரூபாய் செலவழித்துக் கொண்டு போய்ச் சேர வேணடிய இடங்களை, இப்போது நாற்பது ஐம்பது ரூபாய்ச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின் இடக்காலும், கொடிய விலங்குகளாலுந், தீய கள்வர்களாலும் நேர்ந்த கொடிய இடுக்கண்களெல்லாம் இப்போது இல்லையாயின. பெருங் கடல்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய நாடுகளை யெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்த காலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ப் போய்ச் சேர்கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும் பண்டங்களை யெல்லாம் நாமிருக்கும் நாடுகளுக்கும் நம் நாட்டிலுள்ள விளை பொருள்களை அந்நாடுகளுக்குமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு அவைகளை கொண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிற நாடுகளிற் புதியன புதியனவாக ஆக்கப்பட்டு வரும் நேர்த்தியான அரும் பண்டங்களைச் செல்வர்களேயன்றி, ஏழை மக்களும் வாங்கத்தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமோ! ஒரு நாட்டில் மழை பெய்யாது பஞ்சம் வந்தால் அயல் நாடுகளில் விளைந்த உணவுப் பண்டங்களை நீராவி வண்டிகளாலும், நீராவிக் கப்பல்களாலும் உடனுக்குடன் அங்கே கொண்டு வந்து சேர்ப்பித்து அங்கு உள்ள பஞ்சத்தைத் தீர்த்துப், பல்லாயிரம் மக்களை உயிர் பிழைக்கச் செய்கின்றார்கள். இவைபோலவே இன்னும் எண்ணில் அடங்காத எத்தனையோ நலங்களெல்லாம், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஆங்கிலப் பேரறிவாளிகள் கண்டுபிடித்த நீராவிப் பொறிகளால் நாம் அடைந்து வருகின்றனம் அல்லமோ?

    இவை மட்டுமோ! இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பவ்ர்களோடும், இந்தியாவில் உள்ளவர்கள் இலங்கையி லிருப்பவர்களோடும், ஒரு வீட்டிற்குள்ளிருப்பவர்களைப்போல் பேசிக்கொள்வதற்கு வாய்த்திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப் பாருங்கள்! இஃது எதனால் வந்த்து? மின்வடிவின் இயக்கத்தையும், அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமது பகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டு பிடித்தமையால் அன்றோ? இலங்கையில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடிதத் துண்டில் எழுதி மின் கம்பிச்சாலைக்கு விடுத்து, அதற்குரிய சிறு கூலிக் காசையும் கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் இருப்பவர்க்கோ இலங்கையிருப்பவர்க்கோ அச் செய்திகள் உடனே தெரிவிக்கப் படுகின்றன; அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறு மொழியும் வருகின்றது இந்தப்படியாகவே, இந்தியா இலங்கைக்கு ஆறாயிரங்கல் எட்டியுள்ள சீமை முதலான இடங்களுக்குஞ் சில மணி நேரத்திற் செய்திகள் தெரிவித்தலும் ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளுதலும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடந்துகொண்டு இருக்கின்றன. ஆராயிரங்கல் எண்ணாயிரங்கல் அகன்றுள்ள நாடுகளுக்கெல்லாம், இங்ஙனம் முற்காலத்திற் செய்திகள் விடுத்தல் முடியுமா? சிறிதும் முடியாதே. இவ்வளவு வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர்கள் இடைவிடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின் வடிவு முதலான கட்புலனாகா நுண் பொருள்களின் இருப்பையும் வலிவையும் இயக்கத்தையும் பயனையுங் கண்டுபிடித்தமையால் அன்றோ?

    இன்னும் ஒரு புதுமையைப் பாருங்கள்! ஒரு நூற்றாணடுக்குமுன் இருந்த நம் முன்னோர்களிற், பட்ட மரமுந் தளிர்க்க்க் கேட்ட பறவைகளும் மயங்க இன்னிசை பாடுவதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இறந்ததும் அவர்களின் தேன் போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்களோடு கூடவே இறந்து போய்விட்டன! அவற்றை நாம் மறுபடியும் செவிகொடுத்துக் கேட்பது இனி எக்காலத்தும் இயலாது! ஒரு நூற்றாணிடிற்கு முற்பட்டிருந்தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசை வல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத்தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப்போனாலும், அவர்களுடைய அருமைக் குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மைவிட்டு நீங்கிப் போகவில்லை. எப்படியென்றால், அமெரிக்கா தேயத்திற் பகுத்தறிவிற் சிறந்து விளங்கும் எடிசன் என்னுந் துரை மகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramphone) என்னும் பொறியானது, அப்பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலி களையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டுக் கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றனம் அல்லமோ! அவ் இசைவாணர்கள் இறந்து போயினும் அவர்கள் பாடிய இசைகள் இறந்து போகாமல், நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்ல்வோ? இது மட்டுமா! எந்தெந்தத் தேயத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப்பாட்டுகளை எவ்வெவர் எப்படியெப்படிப் பாடினார்களோ, அவ்வப்படியே அப்பாட்டுகளையெல்லாம் நாம் இருந்த இடத்திருந்தே கேட்டு இன்புறும் பெரும்பேற்றை இவ்விசைக் கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ! இத்தனை இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன் என்னுந் துரைமகனார் தமது பகுத்துணர்ச்சியைச் செலுத்தி எவ்வளவோ அரும் பாடுபட்டு இவ் இசைக்கருவியைக் கண்டுபிடித்தனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப்போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலுந் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அவ்வருமந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம் முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப் பாட்டுகள், அயல்நாட்டு இசை வாணரின் பலதிற வரிப்பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ?

    இன்னும் பாருங்கள் நாம் படிக்கும் புத்தகங்களையும், அவ்வவ் வூர்களில் நடக்குஞ் செய்திகளை யறிவிக்கும் புதினத்தாள்களையும் அச்சுப் பொறிகள் சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப் பொறிகள் இல்லா முன்நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது. பழைய நாட்களில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனையேடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடங் கல்விகற்கவரும்ட மாணாக்கர் சிலர் மட்டுந் தம்மிடத்துலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக்கொள்ளும்படி அவர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ்வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிற் கொடார். அல்லது அப்படி கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை ஒரே காலத்திற் பற்பலர் எப்படி எடுத்துக் கற்க முடியும் மேலுந் தமிழ் மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை. ஓர் அருமையான நூலைக் காண வேண்டுமானால், எத்தனையோ ஊர்களுக்குப் போய் அலைந்து திரிந்து தேடிப் பார்க்கவேண்டும். இப்படித் தேடித் திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்? எவ்வளவு பொருள் செலவாகும்! எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்! இத்தனை இடர்பாடுகள் இருந்தமையினாலேயே பழையகாலத்திற் கற்றவர் தொகைமிகு தியாயில்லை; கல்வி பரவவும் இல்லை; ஆனால் இக்காலத்திலோ வெள்ளைக்காரர் கண்டு பிடித்த அச்சுப் பொறிகளின் உதவியாற் பலவேறு நூல்களும் பலவேறு புதினத்தாள்களும் ஒவ்வொரு நொடியுங் கோடி கோடியாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையாயிருப்பவர்களுஞ் சிறிது பொருள் செலவு செய்து தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். இதனாற் கல்வியானது எங்கும் பரவுகின்றது; கற்றவர் தொகை மிகுதிப்படுகின்றது; நாகரிகம் எங்கும் அறிவு மணம் கமழ்ந்து இன்ப ஒளி வீசுகின்றது. இத்தனை பெரும் பேறுகளுங் காக்ஸ்டன் (Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுபொறியைக் கண்டுபிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ?

    இன்னுங் இங்ஙனமே வெள்ளைக்காரத் துரைமக்கள் அல்லும் பகலுந் தமது அறிவைச் செலுத்தி இதுகாறுங் கண்டுபிடித்திருக்கும் பொறிகளால் விளைந்த விளைந்திருக்கின்ற நலன்கள் அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்துவிடாமல், இன்னுந் தமது உணர்வினைப் பல துறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமைகளை நாடோறுங் கண்டறிந்து வருதலால், இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலன்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவையெல்லாம் அப்போது யாரால் அளிவிட்டுச் சொல்லமுடியும்! ஆகவே, பகுத்துணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம், விலங்கினங்களைப் போலே வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், அப் பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி, அதனாற் பல புதுமைகளையும் அவற்றார் பல சிறந்த இன்பங்களையுங் கண்டறிந்து, அவ்வாற்றால் தாமும் பயன் பெற்று மற்றோரையும் பயன் பெறச் செய்து வருதல் போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும்மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப்பட்டிருக்கின்றோம் அல்லமோ? ஆகையால் அடுத்த கட்டுரையில் மக்கட் பிறவியைப் பெற்ற நாம் நமது பகுத்தணர்ச்சியைக் கொண்டு இன்னம் அடைய வேண்டிய ஒரு சிறந்த பொருளைப்பற்றிப் போசுவோம்.
    -----------

    10. தமிழ்த்தாய்

      பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
      மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
      எண்ணிடைப் படக்கிடந்த்தா எண்ணவும் படுமோ"
              - திருவிளையாடற்புராணம்.

    தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசி தீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ? சிறு குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் நாம் இந்த உலகைவிட்டு அகன்றுபோகும் வரையில் நம் தாய் தந்தையரோடும் உடன் பிறந்தவரோடும் மனைவி மக்களோடும் நம்நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடிப் பேசுவதும் நமதருமைத் தமிழ்மொழியலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து நமதறிவைத் தன்வண்ணம் ஆக்கிக், கனாக் காணுங் காலத்துங் கனாவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப் பேச்சோடும் உடன் வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும் போதும் நமக்கு உற்ற துணையாய் நம்மோடு உடன் வந்து நிற்பது தமிழ் மொழியேயாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றது அன்றோ? இவ்வாறு இம்மை மறுமையிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து உதவுவது தமிழ் மொழி ஒன்றுமே யாகையால், நடுவே நாம் கற்கும் ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவுயுந் துணையும்ய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க.

    நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் ஸமஸ்கிருதம் முதலான மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்க வேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருடு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் வைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் துளுங்கி வழியுங் கொழுந்தேனையும் அகற்றிவிட்டு, அவற்றிற்கு மாறாய் அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழநீர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைகூடாமல் அத்தாமரை மலர் அழிந்து போவதைப் போல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த பொருளும் உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும், தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப்பெற்ற நமதுயிரை அவ்வியற்கையினின்றும் மாற்றி அம் மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன்றன்மை இழந்து அழிந்து போகும். தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றையேனுந் தனது குழந்தைப் பருவந் தொட்டுப் பேசிவருபவர் தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலுங் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளையே பழகி வருவாராயின், அவர் நீண்ட நாள் உயிர் வாழார். இதனாலன்றோ; தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் ஆரியம் முதலிவற்றையே கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுக்குட் பலவை நோய்களாற் பீடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்! தன்னியற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒரு தூணின் மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் அது முறிந்து விழுவதுபோலத், தமக்குரிய மொழியைக் கற்று வலிவுபெறாத ஒருவனது அறிவின்மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்க மாட்டாமல் அது பழுது பட்டுப் போமன்றோ? தாய்ப்பால் நிரம்பவுண்டு வளர்ந்த பிள்ளை ஆண்டு முதிரமுதிர அரிய பெரிய முயற்சிகளையெல்லாம் எளிதிற் செய்து நீண்ட நாள் உயிர் வாழ்தல் போலத் தமிழ்ப்பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பர். தமிழ்நாடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்ட காலம் உயிர் பிழைத்திருத்தலுந், தமிழைவிட்டு அயல் மொழிகளை மட்டும் பயில்கின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கையாய நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம் கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும்.

    அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கிலமொழியை நன்றாக்க் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான், அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதோடு, தாம் கற்கும் வேறு மொழிகளிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி, நீண்டநாள் உயிர் வாழ்ந்து உலகத்திற்கு அளவிறந்த நன்மைகளை யெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலும், சிறிது கற்றாலுந் தமிழ் நூற்பயிறிச் நன்கு நிரம்பாமலும், வயிற்றுப்ப்பிழைப்பிற்குரிய ஆங்கிலம் முதலான அயல்மொழிகளையே மிகுந்த பொருட் செலவு செய்து, பல ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள். கற்றும் என்? நம் தமிழ் நாட்டிற்குரிய தென்னங்கன்றைப் பெயர்த்துக் கொண்டு போய்ப் பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்து போவது போல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழிகளையே தம் காலமெல்லாங் கற்ற அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக்கே இடையூறு விளைத்து வருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமது வாழ்வில் அருகிப்போவது நினைக்குந் தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமையைச் சிறிதாயினு கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ் மொழிப்பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தா மென்பதை உணராமற் போவரோ?

    இது மட்டுமோ? இத் தென்னாட்டின்கண் நமது தமிழ்மொழியானது இருநூற்று மூன்று நூறாயிரத்துத் தொண்ணூற்றையாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத் தென்னாட்டில் மட்டுமேயன்றி, இலங்கையிலும் பர்மாவிலும் சிங்கப்பூர் பினாங்கு முதலான மலாய் நாடுகளிலும், மோரீசு தென்னாப்பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ் மொழியைப் பேசுவார் பெருந்தொகையாய் இருக்கின்றார்கள். இவ்வளவு பெருந்தொகையாய் உள்ள தமிழ் மக்களெல்லாரும் அறவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்க வேண்டுமாயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ் மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆதல் வேண்டும். மிகுந்த பொருட் செலவும் காலக் கழிவும் வருத்தமுமின்றி அவர்களைக் கல்வியில் வல்லவராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து அவர்கட்குப் புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான சொற்களைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டுமென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம் மெண்ணத்தை நிறைவேற்றமாட்டார். ஆதலால், நம் தமிழ் மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள் அவர்களுக்குரிய தமிழ்க் கல்வியின் வாயிலாகவே அதனைச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மற்ற மொழிகளில் நாடோறும் புதியனவாய் வெளிவரும் அரும்பொருள் நூல்களை யெல்லாந் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கத் தலைப்பட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆங்கில மொழியை மிக வருந்திக் கற்று ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்களெல்லாம், தமது செந்தமிழ் மொழியில் ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாக்க் கற்றுத்தேறலாம், ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத் தேறினாலும், தாம் அம்மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ் மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச் சொல்லிப் பயன் படுத்தல் இயலாது. தமிழ் கற்றவரோ தாம் அறிந்தவைகளைத் தமிழ் மக்களெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச்சொல்லப் பெரிதும் பயன்படுவர். இதனால் தமிழ் நாட்டவர் தமிழ் கற்பதொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதற்கு ஏதுவாம் என்க.

    இனி, ஏழெட்டு நூற்றாடுகளாய்ப் புதிது முனைந்தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கி வரும் பல வேறு மொழிகளையும் போல்வதன்று நமது மொழி; இஃது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலும் கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாகும். இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிதுங் குன்றாதாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையனவென்று சொல்லத்தக்க ஆரியம் கிரேக்கு இலத்தின் ஈபுரு சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ் மொழி ஒன்று மட்டுமே எல்லாம் வல்ல இறைவனைப் போல் என்றும் இறவாத இளமைத் தன்மை வாய்ந்து இலங்குகின்றது. இவ்வுண்மையை மனோன்மணீயத்தில்,

      "பல்லுலகும் பலவுயிருந்
              படைத்தளித்துத் துடைக்க கினும்ஓர்
      எல்லையறு பரம்பொருள் முன்
              னிருந்தபடி யிருப்பதுபோற்
      கன்னடமும் களிதெலுங்கும்
              கவின் மலையாளமுந் துளுவும்
      உன்னுதரத் துதித் தெழுந்தே
              ஒன்று பல ஆயிடினும்
      ஆரியம் போல் உலகவழக்
              கழிந்தெழிந்து சிதையா நின்,
      சீரிளமைத் திறம் வியந்து
              செயன்மறந்து வாழ்த்துது

    என்றுவந்த தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டு கொள்க.

    பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையோடு விளங்குவது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளெல்லாம் மக்கள இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கண முடிபுகளும் காணப்படுவதால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லாமல் நாளடைவில் மாய்ந்துபோகத் தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து, இஃது ஓதுதற்கு எளிதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமை குன்றாமல் நடைபெறுகின்றதென்று உணர்ந்துகொள்க. ‘க்ருதம்‘ ‘த்ருஷ்டி‘ த்வரிதம்‘ ‘ச்ருஷ்டி‘ ‘ஹ்ருதயம்‘ முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! அவை பேசுவதற்கு எவ்வளவு வருத்தமாய் இயற்கைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் ‘கிருதம்‘ ‘திருட்டி‘ ‘துரிதம்‘ ‘சிருட்டி‘ ‘இதயம்‘ என்று சொல்லிப் பாருங்கள். அப்போது அடிவ பேசுதற்கு எவ்வளவு எளியனவாய் வருத்தமில்லா தனவா யிருக்கின்றன! இனி, இவற்றிற்கு நேரான ‘இழுது‘ ‘பார்வை‘ ‘விரைவு‘ ‘படைப்பு‘ ‘நெஞ்சம்‘ முதலான தூய தமிழ்ச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள! இவை அவற்றைக் காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியவாய் இனியவாய் இருக்கின்றன! இங்ஙனமே ஆரியம் முதலான மற்ற மொழிகளின் இலக்கணங்கள் இயற்கைக்கு மாறாய் இருத்தலும், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற்கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் நாம் எழுதிய ஞானசாரக முதற்பதுமத்திலும், பண்டைக் காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டு கொள்க. இங்கே அவையெல்லாம் விரித்துரைப்ப9தற்கு இடமில்லை. அது நிற்க.

    இனி, மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்படி விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப் பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும் பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம் மொழியிலேனும் உளவோ? உலகவியற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய தமிழ்ப் பாட்டுகளுக்கு நிகரானவை வேறு எந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை, தேவாரம், பெரியபுராணம், என்னும் தெய்வத்தமிழ் நூல்கள், கன்னெஞ்சமும் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்தி இன்புருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள எந்நூலேனுஞ் செய்தல் கண்டதுண்டோ? மக்கள் முடிவாய் தெரியவேண்டும் மெய்ப்பொருள்களையெல்லாந் தெளித்துக் கூறி முடிவுகட்டிய சிவஞான போதம், சிவஞானசித்தி போனற் மெய்த் நூல்களும் அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞானமுனிவர் நுண்ணுரை போன்ற உரை நூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவ துண்டோ? இந்நூற் பொருள்களென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் திக்திக்க்க் குழைத்தூட்டும் நம் தமிழ்த் தாயை மறவாது பேணும் பெரும் பேற்றை நம் தமிழ் மக்கள் எல்லாரும் பெற்றுச் சிறந்திடுவாராக!
    ------------

    11. தமிழிற் பிறமொழிக் கலப்பு

    இந்நிலவுகிற் பழமைக் காலந்தொட்டு இன்று காறும் வழங்கி வரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்ர் ஒரு முறை விளக்கிக் காட்டினோம், மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்து போயின. பல சின்னூறாண்டுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன; பல புதுமையுற்றுப் பிறந்தன. பழஐமயும் புதுமையும் ஒருங்குடைய ஒரு மொழியை அவற்றினடத்தே காணல் இயலாது. மற்றுத் தமிழ் மொழியோ பழமைக்குப் பழமையுமாய் புதுமைக்குப் புதுமையுமாய்த் தன் இயல்பு பிறழாது, ஏறக்குறைய முந்நூறு நூறாயிரம் மக்களினிடையே உலாவி வருகின்றது. இங்ஙனம் இது பண்டுதொட்டே உயிரோடு விளங்கி வருதலின், முற்காலத்தில் வழங்கிய மொழிகளின் சொற்கள் சிலவும் பிற்காலத்தில் நடைபெறும் மொழிகளின் சொற்கள் சிலவும் இதன்கண்ணே கலந்து காணப்படுதல் இயற்கையேயாம். யாங்ஙனமாயின், நீண்டகாலம் உயிரோடிருக்கும் ஒருவன் பல நாடுகளிலும் சென்று முயலுந் தொழின் முயற்சியும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையனாயிருந்தால், அவன் தனதிளமைக் காலத்தில் தன்னோடிருந்து இறந்து போனவர் வைத்த பொருள்களிற் சிவற்றையுந், தனது பிற்காலத்தில் தன்னோடிருப்பவர் வழங்கு பண்டங்களில் சிலவற்றையுங் கையாள நேர்வதுபோல, உயிரோடு சுறுசுறுப்பாய் உலவிவருந் தமிழ்மொழியுந் தான் வழங்கிய பண்டைநாளில் வழங்கியிருந்த ஆரியம் இலத்தீன் முதலா மொழிகளின் சில சொற்களையும், இஞ்ஞானறு தன்னொடு சேர்ந்து உலாவும் ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளின் சில சொற்களையுந்தான் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றது. இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு சுனையிலிருந்து இடையறாது ஓடி வரும் ஓர் அருவி நீருக்குத் தமிழ் மொழியை ஒப்பிட்டுச் சொல்லலாம். இனி இவ்வருவிநீர் ஓடிவரும் வழியின் இடையிடையே காப்பின்றிச் சேரும் நீருமாய் நிற்குங் குளங்குட்டைகட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ் வழியின் கீழே இருபாலும் ஆங்காங்கு புதிதுத் தோன்றி தனித்தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியோடு கலக்குஞ் சிறு சிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுஞ் காலமாக வற்றாது ஓடிவருந் தமிழ் அருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளம் கூவர்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னோடுக் கலப்பித்துப் புதியவாக்கிப், பின்னும் இடையிடையே தன்கண் வந்து கலக்கும் பின்றைக் காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுருவாக்கித் தன்னை வழங்கும் மக்கட்கும் பெரிதும் பயன்பட்டு வருகின்றது.

    இனி, ஒருமொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னையென்று வினவினால், ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையுந் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின் கண்ணே பிறமொழி பேசும் பிறாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல் மொழிச்சொற்கள் வந்து கலப்பதற்கு இடைமேயில்லை, அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந் நாடுளிலுள்ள பலிதிறப்பட்ட மக்களையும் போய்க் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலை கொண்டும், தம்நாட்டுப் பண்டங்களை அவர்க்கு விற்றும், அவர் தம் வழக்கவொழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர் கைப்பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரித்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களாயிருந்தால், அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச் சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம் முறையால் நோக்குமிடத்துப் பல வகையாலும் உயர்ந்த நாகரிக தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும்.

    அங்ஙனமாயிற், பழைய காலத்திற் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையவராயிருந்தா ரென்பதற்குச் சான்று முன்னரே என்னையென்னி, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றா மென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ்வொரு நூலை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும், இந்நூல் எவ்வளவு பழமையுடையதாய் இருக்க வேண்டுமென்பதும், மிகப் பழைய நாளிலே இவ் வுயர்ந்த நூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவரா யிருந்திருக்கவேண்டு மென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற் போகா. இந்நூலின்கண் உள்ள, "முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை" என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ் மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டு கடல் வழியே மரக்கலன்களில் ஏறித் தொலைவான நாடு நகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல் தாண்டிச் சென்று வேற்று நாடுகளிற் போய் பொருள் முயற்சி செய்ததுப் போலவே, வேற்று நாட்டவரும் தமிழ் நாட்டிற் போந்து பல முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுரு மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் எளிதிற் விளங்குகின்றதன்றோ? காவிரிப்பூம்பட்டிணத்திற் கரிகாற் சோழன் என்னும் வேந்தர் பெருமான் அரசாண்ட போது, பலவேறு மொழிகள் வேழங்கிய பலவேறு தேயத்தாரும் அந்நகரத்தினடத்தே போந்து கலந்திருந்து பல தொழிற் முயற்சி நடத்தினமையும், கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும், இமயம் மேரு முதலிய மலைகளிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலைகளிலிருந்து சந்தனக்கட்டை அகிற்கட்டைகளுந், தென்கடலிலிருந்து முத்துகளுங், கீழ்கடலிலிருந்து பவழங்களுங், கங்கை யாற்றிலிருந்து அதன் பொருள்களும் இலங்கை பர்மா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளை பொருள்களும் அந்நகரத்தில் வந்து விலையானமையும், இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பட்டினப்பாலை யிலும் அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன வல்லவோ? கிரேக்க நாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற் போந்து தமிழக அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப் பாட்டுகளில் நன்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டை நாளில் தமிழ்நாட்டார் அயல் நாடுகளிலும் அயல்நாட்டார் தமிழ்நாடுகளிலும் போந்து ஒருவரோடு உருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்றுதொட்டே தமிழிற் புகுந்து வழங்குவதாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக் காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்து விளங்கினாரென்பது புலனாகும்.

    அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேய மொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமே யெனின், ஆம், தமிழ்ச் சொற்கள் பல பழைய மொழிகளிலும் புதிய மொழிகளிலுங் கலந்து வழங்கவே படுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கல குடம் முதலான பல சொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன் எல்லாம் மேன்மை முகில் முதலான பலசொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர் எருமை சினம் செவ்வை முதலான பலசொற்கள் காலடி ஈபுரு முதலான மிகப் பழைய மொழிகளிலும், இன்னம் பல மற்றும் பல மொழிகளிலுமாக ஒருங்கு கலந்து காணப்படுகின்றன. அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியுமாதலின் அவை தம்மை நுண்ணிய ஆராய்ச்சியாற் பல நூலுதவி கொண்டு அறிந்துகொள்க.
    இவ்வாறு மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப்பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகம் வழியாயிருத்தலால், நாகரிகம் வாயந்த் எந்த மொழியும் மக்களியற்கையினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க்கல்லாமல் மற்றவர்க்கு ஒருசிறிதும் விளங்கமாட்டாது. தமிழ் மக்கள் பண்டு தொட்டே நாகரிகத்திற் சிறந்தவராயிருந்ததனால் அவரொடு பல மொழிபேசும் பல நாட்டவருங்கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிழிலுங் காணப்படு ஆயின. இங்ஙனம் காணப்படுதல் தமிழ் மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளப்பத்தினையுங் காட்டுகின்றதேயல்லாமல் அதற்கு அது தாழ்வாதலைக் குறிக்கின்றதில்லை. உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும் உணரமாட்டாமல் சுவாமிநாத தேசிகர் என்பார் தாம் இயற்றிய இலக்கணக் கொத்தில், அன்றியுந் தமிழ் நூற்களவிலை அவற்றுள் ஒன்றே யாயினுந் தனித் தமிழுண்டோ" எனக் கூறியது வெற்றாரவார வுரையாமன்றிப் பிளிதென்னை?

    மேலும், நெடுங்காலம் உயிரோடிருந்து திகழும் ஒரு மொழியிற் பிற சொற்கள் கலத்தல் போலச் சின்னாள் உயிரோடிருந்து பின்னர் இறந்துபடும் ஒரு மொழியிற் பிறசொற்கள் மிக நுழைந்து நிலைபெறுதற்கு இடமே யில்லை. இதனாலேதான், ஆரிய மொழியிற் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்து காணப்படவில்லை. ஆரியம் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே எவரானும் பேசப்படாமல் இறந்துபட்டமையின், அதன்கட் பிறசொற்கள் புகுதற்கு வழியில்லாமற் போயிற்று. இதுகொண்டு ஆரிய மொழி உலக வழக்கிற்குப் பயன் படாமையோடு, அது நாகரிக வளர்ச்சிக்கு இசைந்தாகாமையும் நன்கு பெறப்படும். ஒருவர் ஒருமொழி பேசுகின்றவராய் இருந்தால்மட்டும் அவர் மற்றமொழிச் சொற்களை எடுத்தாள நேருமல்லது, அவர் ஏதுமே பேசாத ஊமையாயிருந்தால் அவர் பிறவற்றை எடுத்தாளச் சிறிதும் இடமுண்டாகமாட்டாது. ஆதலால் உலக வழக்கிலின்றி இறந்துபட்ட ஆரியமொழி பிற மொழிச் சொற்களை ஏற்கவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படவும் மாட்டாதாயிற் றென்க.

    இனி, உலக வழக்கின்கண் உள்ள ஒரு மொழியிற் பிறசொற்கள் வந்து சேருமாயின், அஃது இயற்கையாக நிகழவேண்டுமே யல்லாமற் கல்வியிறிவுடைய சிலரால் அவர் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் அவை செயற்கையாக வலிந்து புகுத்தப்படுமாயின் அவை அம்மொழியில் நிலை பெற்று உயிர் வாழா. இருவர் தமக்குள் தோன்றிய நேசத்தால் ஒருங்கு ஒட்டி உயர் வாழ வேண்டுமெயல்லாமல், பிறரால் வலிந்து பொருத்தப்பட்டு அவர் ஒன்றுபட்டிருத்தல் இசையாது. இவ்வியல்பு மொழிகளின் சேர்க்கையிலும் பிறழாமல் அமைந்திருப்பதொன்றாம். ஒருமொழி வழங்கும் ஒரு தேயத்தில் உள்ளார் புதிதாக ஒரு பண்டத்தைக் கண்டுபிடித்துச் செய்து அதற்குத் தமது மொழியிற் பெயரும் இட்டுப் பிறகதனை வேறு தேயங்களிற் கொண்டுபோய் விலைப்படுத்துங்கால் அப்பண்டத்தின் பெயர் வேறுமொழியிற் கலத்தல் இயற்கையேயாம். இத்தகைய நிகழ்ச்சிகளிலுங்கூடப், புதுப் பண்டங்கள் வாங்கும் மற்ற நாட்டவர் நாகரிகமும் உயர்ந்த அறிவும் உடையவராயிருந்தால், அவற்றிற்குத் தமது மொழியிலே புதுப்பெயரிட்டும் வழங்குவர். மேல் நாட்டிலிருந்து வந்து இத் தென்னாட்டில் விலையாகுந் தெளிவான ஒருவகை மட்பாணட்த்தைக் கிளாசு என்றுங் கோப்பை என்றும் வழங்குகின்றனர். கிளாசு கோப்பை என்னும் இச்சொற்கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும். இப்பாண்டங்கள் மேல்நாட்டிற் செய்யப்பட்டனவாய்த் தமிழ்நாட்டிற்குப் புதியனவாய் இருத்தலால், இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல் பொருத்தமேயாம்; இப்பாண்டங்களையுங் கூட தமிழறிவு மிக்கவர்கள், கண்ணாடிக் குவளை ‘பீங்கான் கிண்ணம்‘ என்று தமக்குரிய தமிழ்ச் சொற்களாலேயே வழங்குவர். ‘எஞ்சின்‘ ‘டிரெயின்‘ ‘டிக்கட்டு‘ ‘டிராம்‘ ‘ஸ்கூல்‘ ‘கமிஷன் ஏஜெண்டு‘ ‘ஷாப்பு; ‘மார்க்கெட்டு. முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே ‘பொறி‘ ‘வண்டித் தொடர்‘ ‘சீட்டு‘ ‘மின்சாரவண்டி‘, பள்ளிக் கூடம்‘, ‘தரகன்‘, ‘கடை‘, ‘அங்காடிக்கடை‘ முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே ‘பொறி‘, ‘வண்டித் தொர்‘ ‘சீட்டு‘, ‘மின்சாரவண்டி‘, ‘பள்ளிக்கூடம்‘, ‘தரகன்‘, ‘கடை‘, ‘அங்காடிக்கடை‘, முதலான தமிழ்ச் சொற்களையே இட்டு வழங்குவர். கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள் இங்ஙனம் பிறாட்டுச் சொற்களை எடுத்து வழங்க வேண்டிய இடங்களிலும் அவற்றிற்கு ஈடாகத் தமது மொழியிலுள்ள சொற்களையே நடைபெறவிட்டு வாழ்வர். இவ்வாறு செய்தல் அவர்க்குள்ள முயற்சியின் திறத்தையும் நாகரிகச் சிறப்பினையுந் தமது மொழியில் வைத்து பற்றினையும் வெளிப்படையாகக் காட்டுவதாகும்.

    முயற்சியும் உண்மையான பற்றும் இல்லாதவர்கள் பிற மொழி பேசுவோருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களை விட்டுப் பிறசொற்களையே எளிதில் எடுத்தாளத் தலைப்படுவார்கள். தமக்குரிய மொழியை வளம்பெறச் செய்யும் முயற்சியும் அதன்பாற் பற்றும் இல்லாமற் போதல் எதனால் என்றாற், பிறிதொரு மொழியிலுந் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயர்வு படுத்திக்கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலியே நோக்கம் வைத்து அதற்கேற்றது பிறமொழிப் பயிற்சியே என்ற பிழைபட்ட கருத்துங் கொள்ளப் பெற்றிருத்தலாலேயாம். இதற்கு இத் தென்றமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன மாந்தரும், அவரைப் பின்பற்றின வரும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் ஒழுகலாறே ஒரு பெருஞ் சான்றாகும். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பொருள்களை வழங்குவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பவும், அவற்றை விடத்து இத் தென்னாட்டிற்கு உரியவல்லாத வடமொழிச் சொற்களாலும், இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலச் சொற்களாலும், அவற்றை அவர் வழங்கி வருகின்றனர். தமிழ் மக்கள் எல்லாருந் தண்ணீர் என்று வழங்கிவர, அவர்கள் அதனை ஜலம் என்று கூறுகின்றார்கள். ‘எனக்கு ஓர் ஏனத்திலே குளிர்ந்த நீர் கொண்டுவா, வறட்சியாயிருக்கின்றது‘ என்று சொல்ல வேண்டுவதை, ‘நேக்கு ஒரு பாத்திரத்திலே குளுந்த ஜலங்கொணடா, தாகமா இருக்கு‘ என்று வடசொற்களைச் சேர்த்தலோடு இடையிடையேயுள்ள தமிழ்ச் சொற்களையுஞ் சிதைத்துப் பேசுகின்றார்கள். இன்னும் ‘பயனற்ற செயல்‘ என்பதைப் ‘பிரயோஜனமற்ற காரியம்‘ என்றும், வெயில், வெளிச்சம், வானம், காற்று, நெருப்பு, உணவு, உழவு, அலுவல், தூய்மை, நாடோறும், கல்வி என்பவற்றை முறையே சூர்ய ப்ரகாசம், ஆகாசம், வாயு, அக்நி, ஆகாரம், விவசாயம், உத்யோகம், பரிசுத்தம் திநே திநே, வித்தை என்றும் வடசொற்களால் அவர்கள் வழங்கி வருதல் எவரும் அறிவர். இவ்வாறு இன்னும் நூற்றுக்கணக்கான வடசொற்களை அவர்கள் தமிழ் பேசுங்கால் இடையிடையே வேண்டா கூறலாய் வழங்கி வருகின்றனர்.

    இங்ஙனடஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களை யேனும் உலகவழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்ப்டுதலாகாதெனின், இறந்து போன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்த பன்னூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி உயிரோடு உலாவிவருந் தமிழ் மொழியின் சொற்களை இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருளை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொறக்ளைக் கைநெகிழ விட்டு வடசொற்களை வருந்திச் சொல்ல முயல்வார் திறத்திற்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடையதென்று சொல்லாம். அங்ஙனஞ் செய்ய இயலாது அதன் சொற்கள் சிலவற்றை மட்டும் உயிரோடுலவுஞ் சிறந்த மொழியில் வலிந்து புகுத்தி அம் மொழிக்குக் கேடு சூழ்தல் பெரிதும் இழிக்கத்தக்க தொன்றாகும். இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்றுயாங் கூறவில்லை, பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் இருக்கையில் அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரிய தொரு குற்றமாக நினைக்கிறோம். பிற சொற்களை எடுத்து வழங்குதற்கு இன்றியமையா இடங்கள் என்பன, புதுப் பொருளைக் கூறுதற்குத் தமிழில் உள்ள சொறக்ளை எவ்வளவு முயன்று பார்த்தும், அதற்கு அவை இசையாத நேரங்களேயாம். முயற்சியும் அறிவும் உடையவர்கள் கருத்து வைத்தால் எத்தகைய புதுப் பொருள்கட்குந் தமிழிலேயே பெயரமைக்கலாமென்பதை நமது கொள்கை. உயிரோடுலவிவரும் மொழிகள் எவையாயிருப்பினும் அவை எத்துணை ஏழைமை யுடையவாயினும். அவற்றிற் குரியோர் உண்மைப் பற்றுடையராய் அவற்றை அங்ஙனம் வளம்பெறச் செய்து வருகுவராயின், அதனால் அவர் உயரமான அறிவும் நன்முயற்சியும் மேன்மேல் மிகப் பெற்றுத் தாமுந் தம்மினத்தவரும் உயர்வர்.

    இனி, இவ்வாறன்றி இக்காலத்துப் பார்ப்பன மாந்தர் போல் வடமொழிச் சொறக்ளையும் ஆங்கிலம் முதலான ஏனை மொழிச் சொற்களையுந் தமிழின் இடையிடையே கலந்து பேசுவோர், தூய தமிழ்ப் பேசும் மற்றைப் பெரும்பாலாரின் வேறாகப்பிரிந்து, அவர்களொடு தொர்பில்லாதவராய், அவர்களால் தாமுந் தம்மால் அவர்களும் பெறும் பயன் வரவரக் குறையத், தாமுந் தம்மினத்தாருஞ் சில நூற்றாண்டுகளில் தமிழுக்கு முற்றும் புறம்பாய் வேற்றினமாய் மறைந்துபோரென்பது திண்ணம். இஃது இவர்க்கே தாழ்வாய் முடியுமல்லாமற், பன்னூறாயிரம் மக்களிடையே பரவியிருக்குந் தமிழுக்கு அதனாற் சிறிதுஞ் சிறுமை வராது. அங்ஙனமன்று, பார்ப்பன மாந்தரும் அவர் போல்வார் பிறரும் வடமொழியையே தமக்குரிய மொழியாகக் கருதி அதனையே மிகவும் பயிலுதலின் அதன் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுகின்றாரெனின், அங்ஙனம் வடமொழியினடத்து மிகுந்த பற்றுவைத்து அதனையே பயிலும் அவர்கள் அம்மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள் முதலான எல்லார்க்குங் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன்பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்குப் பொருத்தமாகும். தமிழருடன் தமிழிற் பேச விருப்பம் இல்லாத அவர்கள், தாம் தமிழரோடு உண்ணல் கலத்தல்கள் செய்யாது அவரின் வேறுபிரிந் தம்மை உயர்வுபடுத்திக் கொண்டது போலவும், அவர்களுள் வடமொழியை நிரம்பக் கற்றோர் சிலர் தமிழரொடு தாம் நேரே பேசுதலும் ஆகாதென்று ஓர் ஏற்பாடு செய்து கொண்டிருத்தல் போலவுந் தாமுந் தமிழையே முற்றும் பேசாதொழிதலே பொத்த முடைத்தாம். அவ்வாறு தங்கொள்கைக்கு ஏற்ப நடத்தலை விடுத்து, வடசொற்கள் சிலவற்றைத் தமிதொடு கலந்து பேசுதலால் மட்டுமே அவர் வடமொழிக் குரியராய் விடுவரோ? அவருட் சிலர் இப்போது ஆங்கிலங் கற்று ஆங்கிலச் சொற்களையுந் தமிழிற் சேர்த்துப் பேசுகின்றார். அதனால் அவர் ஆங்கில மொழிக்கு உரியவராவரோ? ஆகாரென்றே. அது போலவே, வடமொழியைத் தஞ்சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர் அதன்பாற் பாராட்டும் பற்றும் வெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாக்க் காணப்பட வில்லை. ஆகவே, உலக வழக்கிற்குப் பயன் படாத வடமொழிமேல் வைத்த போலிப்பற்றால் வளம் நிறைந்த தூய தமிழைக் கெடுக்க முந்துதல் பார்ப்பன மாந்தர்க்கும் அவரைப் பின்பற்றினார் பிறர்க்குஞ் சிறிதும் முறையாகாது.

    அவ்வாறன்றி, வடமொழி உலக வழக்கிற் பெண்டிரானும் பிள்ளைகளானும் பேசுதற்குப் பொருந்தி வராத உரத்த ஓசைகளுங் கனைக்கும் ஒலிகளும் உடையதாய்ப், பெயர் வினைகளில் உயர் தினை அஃறிணைப் பாகுபாடுகள் உலக இயற்கையில் அமைந்தபடியாக இல்லாமற் செயற்கையாக வலிந்து வகுக்கப்பட்டு, ஊன்றிப் பயல்வார்க்கும் பேருழைப்பினையும் பெருவருத்தத்தினையும் தருவதாயிருத்தலின், அஃது எல்லாரானும் பேசப் படாததனை ஒரு குற்றமாக சொல்லுதல் ஆகாதெனின் இது குற்றமோ அன்றோ என்பதனை இங்கு முடிவு கட்டப் புகுந்திலம். உலகவழக்கிற் பெண்டிர் சிறார் முதலான எத்திறத்தாரானும் பேசுதற்கு இயைந்த எளிய தன்மையுந், தன்னைக் கற்பார்க்கு இனியவாய்க் காணப்படும் இயற்கைப் பொருத்தமுள்ள சொன்முடிபும் பொருண் முடிபுகளும் வாய்ந்து, பல்லாயிர ஆண்டுகளாக இளமை குன்றாமல் வழங்கி வரும் அருமை பெருமை மிக்க செந்தமிழ் மொழியில் வேண்டா கூறலாய் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கொண்டு வந்து நுழைத்தல் பெரிதும் குற்றமாவதாம் என்பதனையே இங்கே விளக்கப் புகுந்தோம்.

    இனி, இன்றியமையாது வேண்டப்பட்டுத் தமிழில் வந்து கலக்கும் அயல்மொழிச் சொற்கள் தமிழிற் பொருந்துதற்குரிய இயல்பினையுஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவாம். தமிழில் வந்து கலக்கும் ஆரியம் ஆங்கிலம் முதலான அயல் மொழிச் சொற்கள் தம் தன்மை திரிந்து தமிழோடொத்துத் தமிழினுருவத்தைப் பெற்று இயல்பாக வழங்கி வருகின்றன. ஜ்ஞாநம், ம்ருகம், ஸ்தலம், ரங்க, கஷிரம், ப்ரகாசம், ப்ராசி, சக்தி, ஈசுவர முதலான வடசொற்கள் தமிழில் முறையே ஞானம், மிருகம், தலம், அரங்கம், கீரம், பிரகாசம், பாசி, சத்தி, ஈசுவரன் முதலியனவாகத் திரிந்து தமிழோடொத்து நடைபெறுகின்றன. க்ளாஸ், கப், பாட்ல், பம்ப், பைபிள், ஐயோநியன்ஸ், கிரைஸ்ட், ஜான் முதலான ஐரோப்பிய மொழிச் சொற்கள் தமிழில் முறையே கிளாசு, கோப்பை, போத்தல், வேம்பா, விவிலியம், யவனர், கிறித்து, யோவான் முதலியனவாகத் திரிந்து தமிழோடொத்து நடக்கின்றன. இங்ஙனமே ஆரியம் தமிழ் முதலியவற்றின் சொற்கள் ஆங்கில மொழியிற் பலவாறு திரிந்து அம்மொழியின் தன்மைக் கேற்ப உலவுதலை, இவ்விந்தியாவிலுள்ள ஊர்ப்பெயர்கள் ஆங்கிலத்திற் சொல்லப்படுங் கால் திரிபடையும் வேறுபாடு ஒன்று கொண்டே நன்கு தெளியலாம். இன்னும் இவ்விந்தியாவில் இப்போது வழங்கிவரும் பல மொழிகளுள் ஒன்றன் சொற்கள் மற்றொன்றில் கலக்குங்கால் அம்மற்ற மொழியின் தன்மைக்கு இசையவே அவை திரிந்து வழங்குதலை அவ்வம் மொழியிலும் ஆராய்ந்து பார்த்துத் தெரியலாம். இவ்வாறு ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழியிற் அதன் றன்மைக்கேற்பத் திரிந்து வழங்கும் இயற்கை கண்கூடாய் அறியப்பட்டுக் கிடத்தலின், தமிழிலும் பிறமொழிச் சொற்கள் தமிழுக்கேற்றவாறு திரிந்து வழங்கல் பெரிதும் பொருத்தமாவதேயாம். ஒரு மொழிச் சொற்கள் வேறொரு மொழியில் அங்ஙனந் திரிந்து வழங்க வேண்டுவதுதான் என்னை? அவற்றைத் திரிபுபடுத்தாமல் உள்ளபடியே வைத்து வழங்குதலால் வரும் இழுக்கு என்னை? எனின், உலக வழக்கில் நடைபெறும் ஒவ்வொரு மொழியும் உயிரோடு உலவும் உடம்பு போல்வதாகலானும் உடம்பு நிலைபெற்றிருந்த்து வளர்தற்பொருட்டு அதற்கு இடும் பல்வேறு உணவுப் பொருள்களுந் த்ந்தன்மை திரிந்து அவ்வுடம்பின் றன்மையோடு ஒத்து ஒன்று பட்டால் அல்லாமல் அவ்வுடம்பு நிலைபெற்று வராமை போல உயிரோடு உலவும் ஒரு மொழியிற் போந்து கலக்கும் பிறமொழிச் சொற்கள் அம்மொழியோ டொத்துத் திரிந்து அதனோடொனறுபட்டு நின்றால்ல்லது அம் மொழி வளராமையானும், ஒரு மொழியில் ஏனை மொழிச் சொற்கள் திரிந்து காணப்பட வேண்டுவது இன்றியமையாத இயற்கையேயாம் என்க. இவ்வியற்கைக்கு மாறுபாடு இல்லாமலே தமிழ் மொழியின் கண்ணும் வேற்று மொழிச் சொற்கள் தமிழிற்கேற்பத் திரிந்து காணப்படுகின்றன.

    இஃதிங்கனமாகவும், இப்போது சில ஆண்டுகளாகப் பார்ப்பனரில் தமிழிலே நூல் எழுதுவார் சிலரும் அவரைப் பின்பற்றின வேறு சிலரும் வடமொழிச் சொற்களையுந் ஆங்கிலச் சொற்களையும் மிகுதியாகக் கொண்டு வந்து தமிழில் வலிந்து புகுத்துவதோடு, அவற்றித் தமிழுக் கேற்பத் திரிபுபடுத்தாமல் அம்மொழியில் உள்ளபடியே எழுதுகின்றார்கள். ஜ்ஞானம், ம்ருகம், ப்ரசாதம் முதலியனவாக மேலெடுத்துக் காட்டிய வடசொற்களையும், க்ளாஸ், பாட்ல், க்ரைஸ்ட் முதலான ஆங்கிலச் சொற்களையுந் தமிழுக்குப் பொருந்தத் திரிபுபடுத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச் சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால், அவை, தமிழின் இனிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அவருப்பாய்த் தோன்றுகின்றன! தேனும் பலாச்சுளையுங் கல்ந்து அருந்துவார்க்கு, அவற்றிடையே முட்கள் விரவியிருந்து நாவிற்றைத்தால் அஃது எவ்வளவு துன்பத்தினையும் வெறுப்பினையுந் தருமோ, அதுபோலவே வேண்டா வழக்காய் உருவுத் திரியாமல் தமிழில் வரையப்படும் வேற்று மொழிச் சொற்கள் உண்மைத் தமிழ் அறிஞர்க்குப் பெரியதொரு வருத்தத்தினையும் அருவருப்பினையும் விளைக்கின்றன. எவ்வகைப் பொருளையுஙம் எத்தகைய கருத்தையுந் தெரிவித்தற்கு எண்ணிறந்த தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவற்றைப் புறந்தள்ளி மற்றை மொழிச் சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தலே ஒரு பெருங் குற்றமாம்; அதன் மேலும், இயற்கைக்கு மாறாய் வருந்திச் சொல்ல வேண்டும் அவ்வயல்மொழிச் சொற்களை, இயற்கையோடொத்து மெல்லென நடக்குந் தமிழ்ச் சொற்களிடையே சேர்த்துக் கூறுதல் அதனினும் பெரிய தொரு குற்றமாகும். அஃதடல்லாமலும், வயிற்றிற்கு இடப்பட்ட உணவுப்பொருள்கள் தமது உருவு திரிந்து உடம்பிற்கு வேண்டும் பாலாக மாறாமல், அவை அங்ஙனமே வயிற்றினுட் கிடந்தால், அவை அவ்வுடம்பிற்குச் சிறிதும் பயன்படாமையோடு அவ்வுடம்பினையும் பழுதுபடுத்துமன்றோ? அதுபோலவே தமிழின் தன்மைக்கு ஏற்ப உருவு திரியாமல் எழுதப்படும் வடசொற்கள் முதலியனவும் பயன்படாது போதலொடு தமிழின் அழகையுஞ் சிதைவு படுத்தா நிற்கின்றன. மேலும் இயற்கையழகாற் சிறந்த ஒரு நங்கைக்கு அவளது இயற்கையழகு ஒன்றுமே அமையும்; அன்றி அவட்கு வேறு ஆடையணிகலன்கள் அணிந்து பார்க்க வேண்டினும், அவளது அழகிற்குப் பொருத்தமான சிலவற்றைத் தெரிந்தெடுத்து அவளை ஒப்பனை செய்வதே வாய்ப்புடைத்தாம். அங்ஙனமின்றி அவளது நலத்திற்குப் பொருந்தாவற்றையும், பொருந்துமெனும் அளவிற்கு மேற்பட்ட ஆடையணிகலத் தொகுதிகளையும் அவள்மேல் இடுதல் அவளது ஒப்புயர்வற்ற அழகைக் குறைப்பதொடு காண்பார்க்கும நகையினைத் தரும். நலம் நிரம்பிய தமிழுக்கு அதன் நலம் ஒன்றுமே அமையும்; அன்றி இன்றியமையாதது வேற்றுமொழிச் சொற்களைச் சேர்க்க் வேண்டி வந்தக்கால், அதன் இயல்புக்குப் பொருந்தினவற்றையே சேர்த்தல் அழகுடைத்தாம் அவ்வாறன்றி அதன் இயற்கைக்கு மாறானவற்றையும் மாறாகவிடினும் அளவுக்குமஞ்சிய அயல்மொழிச் சொற்களையும் அதன்கண் வலிந்து புகுத்தல், அதன் நலத்தைக் குறைப்பதோடு தமிழறிவு மிக்க சான்றோர்க்கு நகையினையும் விளைக்கும். ஆதலால், அயல்மொழிச் சொற்களை உருவு திரியாமற் சேர்த்தலும், உருவு திரிந்தவற்றையும் அளவுக்கு மிஞ்சித் சேர்த்தலும் ஒரு சிறிதும் பொருந்தா வென்று கடைப்பிடித்துணர்க், அங்ஙனமாயின், தமிழ்ச்சொற்கள் இயற்கைக்கு மாறான செயற்கையொலி யுடையவாதலும் எவ்வாறெனின், அவ் வேறுபாட்டைத் ‘தமிழின் ஒலி யெழுத்துக்கள்‘ என்ற கட்டுரையில் விளக்கிக்காட்டியிருக்கின்றோம், ஆண்டுக் கண்டுகொள்க.
    ----------------

    12. தனித்தமிழ் மாட்சி

    பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக. கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுங் கொடுஞ்செயலினுங் கொடியதாக இருக்கின்றது.
    இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித்தமிழ் எழுதுவாரைக் "குறுகிய மனநிலை" "அறியாமை", "பேதமை" யுடையரென இகழ்ந்துபேசி விடுகின்றனர். கொள்கையளவில் ஒருவரோடு ஒருவர் மற்ற்றொருவர் மாறுபட்டிருப்பது பற்றி, அவர மற்றவரைக் "குறுகிய மனநிலையுடையவர்" எனவும், "அறியாமை", "பேதமை" மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடையோர்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங்கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து. இதனைத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் "அறிதோ ற்றியாமை கண்டற்றால்" என நன்கு தெருட்டியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர் "அறியாமையுடையர்" என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாத்து யாது உளது! தாந்தாம் உண்மை யெனக் கண்டவைகளைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப்போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க. இனி, நமது செந்தமிழ்மொழ்யில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல. நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால். ஒருசாரர், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின், அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் நன்றேயாமென்றும் வரைந்த்ருக்கின்றார். இனி ‘மாறுதல்‘ என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின் இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம். முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒரவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முட்ம்பின் நலை குறைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில்ல உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன. மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும. இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர் மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடு மாடு முதலான எல்லா வுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் கொருள்களை உட்கொண்டு த்த்தமக்கு இசைவான இடங்களிலிருந்து நாடோறும் மாறுதல எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப் பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்றுநோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் சேர்க்கையால் தமது தன்மைகெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றனவென்பது எல்லார்க்கும் புலனாம், தமக்கு ஏலாத பொருள்களோடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவ தில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்றுபோய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்த்தேயாம். இடம் விட்டுப் பெயராத புல்மரம் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோ டிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப்போதலும் எல்லாரும் அறிவர்.

    ஆகவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப்பார்த்து, அப்பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்துபாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைபியைய் பிடித்துக் கொண்டு, அதன்பை நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ? எல்லாப்பொருள்களும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரா? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங் கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்திருவர்களுந் கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபதாதவாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும்மேலும் அதனை நலமுறைவைத்து வாழ்நாளைப் பெருக்கதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவர்களுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்பப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்களுக்கு அறிவும் இன்பமும் வாயா.

    அது போலவே, நமது செந்தமிழ்மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப் படுமானால் அஃது இன்னும் பலநூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும், சிலருடம்பு தமக்கு இயற்கையிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மையுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமஸ்கிருதம் இலத்தீன் கிரீக் ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியோர் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானும் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ்மொழியோ தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறவுமுயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத் தன்மை குன்றாது இன்னும் உலவி வருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும் வேறு சிலர் முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்ததில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டுவருதல் போலவே, நமது தனித்தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ளளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ்மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதா மன்றி, அது குன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பற்பாலதன்று.

    இனித், தமிழ் வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடத்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும்பொருட்டுக் கோலுங் குறடும் எழுத்தும் போலி கை கால்களுஞ் செயற்கையாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும், இயற்கையிலேயே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளேமற்றை மொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டிநிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ்மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை. மக்கள் இம்மை மறுமை பற்றி அறிய வேண்டுவனவெல்லாம் முற்றும் எடுத்துக்கூறுந் ‘தொல்காப்பியம்‘ ‘திருக்குறள்‘ என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்ற தென்றால், உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகள்போற் செய்து அவற்றை அதன்கண் ஒட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச்சொற்களை விடுத்து ‘ரோமம்‘ ‘சிகை‘ என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலியவற்றை நீக்கிச் ‘சரீரம்‘ ‘சிரசு‘ ‘வதனம்‘ என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு ‘நயனம்‘ ‘கர்ணம்‘ ‘நாசி‘ என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் ‘கண்டம்‘ என்னுஞ் சொல்லையுந் தோள் கை முதலியன இருக்கப் ‘புஜம்‘ ‘கரம்‘ என்பவற்றையும், வயிறு அகடு இருக்க ‘உதரம்‘ ‘குஷி‘ என்பவைகளையும், கால் அடி என்னுஞ்சொற்களுக்குப் ‘பதம்‘ ‘பாதம்‘ என்பவற்றையுங், கொண்டுவந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ற் சொற்களாகிய உறுப்புகளை வெட்டியெறிந்துவிட்டு, அவை போன்ற ஏனை மொழிச்சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலையே போல்கின்றதன்றோ? பொருள்களை ‘வஸ்துகள்‘ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் ‘பிரகாச‘ மென்றும், ஓசையைச் ‘சப்தம்‘ என்றுஞ் சுவையை ‘ருசி‘ என்றும், மணத்தை ‘வாசநை‘ என்றுந், திதித்திப்பு இனிப்பை ‘மதுரம்‘ என்றுந். தண்ணீர் சோறு உணவு என்பவற்றை ‘ஜலம்‘ ‘அந்நம்‘ ‘ஆகாரம்‘ என்றும், ஆடையை ‘வஸ்திரம்‘ என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்‘ எனறுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை ‘மாதா‘ ‘பிதா‘ ‘புத்ரன்‘ ‘புத்ரி‘ ‘பந்துக்கள்‘எனறுந், துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் ‘கஷ்டம்‘ ‘நஷ்டம்‘ ‘சம்ஸாரம்‘எனறுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை ‘ஸ்நாநம்‘ ‘பூஜை‘ ‘ஆயாசம்‘ ‘நித்திரை‘ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை ‘ஞாபகம்‘ ‘பாவநை‘ ‘வசனித்தல்‘எனறுந், தூய தமிழ்ச்சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ்மொழியை வளர்த்தல? அறிவுடையீர் கூறுமின்கள்! இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிறமொழிகளினின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்த்தை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டுமென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழிதேடுவதுதானா தமிழ்கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்க்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்குவீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்!

    ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி? டெனிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச்சொற்கள் விரவாத தூய ஆங்கிலநடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதாக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த டெனிசன் தமதுகாலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து வழங்கி அவற்றை வழங்கவிட்டமைக்காக, அவர் சுற்றறவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! ஜான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக் முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரை நூல்களில் விரவைத் தெழுதினமைக்காக அவர்களை அந் நனமக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கிலநூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ? ஆங்கிலமொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்ஜான் என்னும் ஆசிரியர், "பழைய நாளில் ஆங்கிலமக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானே பலமொழிபேசும் பல்வகைநாட்டாரும் அவர்மேற் படையெடுத்து வந்து அவர்தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுக்க கலந்துவந்தனர்" எனவும், "அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப் பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கிலமொழியிற் கலந்து நிலைபெறலாயின" எனவும் " மொழிக்கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டியபின், "பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச்சொற்களை மிக்க் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. ‘உரோம் அரசியலின் இறக்க்முஞ் சிதைவும‘ என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய ஜான்சன் என்பவரும் இலத்தீன் மொழிச்சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர், கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், ஜான்சன் இருபதெட்டு விழுக்காடுமாக அயன் மொழிச் சொற்களை விரவ்விட்டனர். ஆனால், உள்ளுர் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன் மொழிச்சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். ஜான் முனிவரது நூலின் மொழிப் பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச்சொற்கள் ஒன்று கூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்" என்று கூறிப் பின்னும் "பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச் சொற்களைத் தொகுதியாய்க் கொண்டு வந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது. அங்ஙனமே அவை உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்ட்டையுந், தாம் வேலை செய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அதுமுதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குருமுதல்வரான ஜெரிமிடெய்லர் Sportiveness என்னும் ஆங்கிலமொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்நது வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகையநடை பெருகி வரவே, இத் தன்மையவான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கிலமக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந் தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்துதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான்." என்று எழுதி, அதன்பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக்காட்டி "ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒருநடை எழுதமாட்டான்" என்று அதன பிழைகளை எடுத்துக் கூறிச், "சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும அயலான் ஒருவன் அச் சொற்கள் வழங்கும நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்கவேண்டும்" என்றும், "நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடிய மட்டும் விலக்குகின்றார்கள்" என்றுங். "கோல்ட்சிமித், ஜேன், ஸ்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரியகாலத்தே நல்ல தூய ஆங்கிலநடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவன்" என்றும் முடித்துக் கூறுகின்றனர்; (Prof. J.M.D. Meikle John’s The Art of Writing English. ப்ப. 121 132). இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் "வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டுபண்ணுகின்றன; ஆதலால், அவைகளுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டுகொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடையெழுதப் பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ் வுண்மையைச் சொல்வது நல்லதென எண்ணுகின்றேன். நடையெழுதக் துவங்குவோர் தாம் உயர்நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும் விட உண்மையான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப்படுதற்கு பல ஆண்டுகளின் பழக்கம் இன்றியமையாதது வேண்டப்படும்". (Quoted in Meikle John’s The Art of Writing Enlighs, ப, 128), என்ற ஆங்கலிமொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்தி பேசியிருக்கின்றார்.

    ஆங்கிலமக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழையநாளில், ஐரோப்பாவின் வடமேற்கு மூலையிற் றோன்றிய சுடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானிய தீவின்கண் வந்து புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில் வென்று அவர்தம்மை தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்கு பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கள் கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச்சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் வந்தகாலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்குமேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந்திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்தநிலையி லிருந்து பின்னர்க் காலந்தோறும் பலமொழிக் கலப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப் பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலாதென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கமாட்டாதது என்று எனவுந் தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பல மொழிச் சொற்களோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.

    இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்றமட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்கவேணடுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்து வருகவராயிற், பண்டைக்காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த், தாம் ஒருவர்கீழ் அடங்கி வழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கைவைத்துத், தமது செந்தமிழ்மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் கால் வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்க வேண்டும்! அதற்காக நாட் எவ்வளவு எடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றை மொழிச்சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டுகின்ற தன்றோ? பண்டைநாளில் ஆரியப் பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கியிருந்து தமிழைவளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார்போற் றம்மைதத்மே உயர்த்துக்கொண்டு, தமிழரைக் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிகமுயன்றும் அதுமுற்றுங் வைகூடமையின், தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப்பெரிதும் மாசுபடுத்திவருகின்றார். அப்பார்ப்பனர் வலையில் சிக்கிய தமிழ்ப்புலவர் சிலரும் அச்சூழ்ச்சியை பகுத்துணர்ந்து பாராது ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பு‘ போல், அவ்வாரிய பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித்தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றனர்! ஐயகோ! பண்டுதொட்ங்கி புனிதமாய் ஓங்கிநிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச்சொற்களென்னுங் கோடாரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப்புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப்புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும் எம்போல்வராது நல்வினைச்செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமையாகாதென்று உணர்மின் நடுநிலையுடையீர்!
    -------------

    13. அறிவுநூற் கல்வி

    கல்வியானது இருதிறப்படும் அவை உலக நூற் கல்வி, அறிவு நூற்கல்வி என்பனவாம். இவற்றுள் உலகநூற் கல்வி உடம்மைப்ப பற்றிக்கொண்டும் அறிவுநூற் கல்வி உயிரைப் பற்றிக்கொண்டும் நடைபெறுவனவாகும். உயிரின் அறிவு விளக்கத்திற்கு உடம்பு இன்றியமையாத் துணையாய் இருத்தல்போல, அறிவுநூற் கல்வியைத் தருதற்கும் உலகநூற் கல்வி இனிற்யிமையாக் கருவியாய் இருக்கின்றது. அறிவு விளக்கம் இல்லாத உயிருக்கு உடம்பிருந்தும் பயன்படாத்துபோல, அறிவுநூற்கல்வி பெறாதவர்களுக்கு உலகநூற் கல்வி இருநதும் பயன்படுவது இன்றாம். நறுமணங்கமழத் தேன்ஒழுகி இனிய பழங்கள குலைகுலையாய்த் தொங்கும் ஒரு தேமாந் தோப்பிற்குச் செல்ல விரும்பினான் ஒருவன், அங்கே போவதற்கு இசைந்த வழியைத் தெரிந்து அதனூடே சென்று அவ்விடத்தைச் சேர்வானானால், தான் நீண்டவழி நடந்துவந்ததனால் உண்டான பயனைப் பெற்றுப் பசயுங் களைப்புந் தீர்ந்து மகிழ்ந்திருப்பான்; அவ்வாறன்றி அவ் வழியில் உள்ள சில புல்லிய காட்சிகளையே கண்டுகொண்டு உடம்பிலுள்ள வலிமை குறையும் நேரம்வரையில் வழியிலேயே காலங்கழித்துவிடுவானாயின், மிகுந்த பசியுங் களைப்பும் வந்து மூடிக்கொள்ள மேற்சொல்ல மாட்டாதவானய் அவ்வழியினிடையே சோர்நது விழுந்து உயிர் துறப்பான். அதுபோலவே, அறிவுநூற் கல்வியைப் பெறுதற் பொருட்டாகவே வந்த இம்மக்கள் யாக்கையி லிருந்தும், முடிவாக அதனை அடைதற்கு முயலாமல் உலகநூற் கல்வியளவில் ஒருவன் நின்று விடுவனானால், அவனெடுத்த இம் மக்கட்பிறவி வெறும் பாழேயாவது திண்ணம் உயிரானது தன்கண் உள்ள அறியாமை முற்றுந் தொலையப் பெற்றுப் பேரறிவு விளக்கம் உடையதானவுடனே பிறவி எடுத்தலும் நின்றுபோகும். உயிர்கட்கு உடம்புகள் அடுத்தடுத்து வருவதெல்லாம் அவ்வுயிர்களைக் கவிந்து நின்ற அறியாமையை நீக்கி அறிவை எழுப்புதற் பொருட்டாகவே யாகலான், அறியாமை தேய்ந்து அறிவு எழும் வரையில் அவை பிறவிகளிற் சுற்றிச் சுற்றி வரும். ஆகவே, அறிவுநூல்களைக்கற்று அறியாமையை நீக்காதவன் மேன்மேற் பிறவியெடுப்பவனாய் இருத்தலின், அவன தனக்கு உடம்பு களைப் படைத்துக் கொடுப்பதான ஓயாத வேலையைக் கடவுளுக்குத் தருபவன் ஆவன்; இது குறித்தன்றோ பட்டினத்தடிகளும்,

      "மாதாஉடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
      வேதாவுங் கைசலித்து விட்டானே – நாதா,
      இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக்
      கருப்பையூர் வாராமைக் கா"

    என்று அருளிச்செய்தனர்.

    மேலும், உயிர்க்கு உறுதிதரும் அறிவுநூற் கல்வியைக் கல்லாது, உடம்பைப் பாதுகாத்தற்குமட்டும் பயன்படும் உலகநூற் கல்வியைப் பயில்வது வெறுங் கூவுதலாகவே முடியும். ஏனென்றால், நிலையாயுள்ள உயிரின் நன்மையை நாடாது, நிலையின்றிச் சில நாளிலோ சில திங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ மறைந்து போகும் உடம்புக்கு உணவு தேடிக் கொடுத்தற்கு மட்டும் பயன்படுகின்ற உலகநூற் கல்வியை வாய்ஓயாது கூவிக் கற்றல் நிலையான பயனைத் தராமையின் அது வெற்றொலியேயாய்ப் போவதன்றி வேறு அது தரும் பேறு என்னை? இவ்வுண்மையை உணர்த்துகற்கன்றே,

      "அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
      துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
      கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
      போஒந் துணையறிவார் இல்"

    என்று நாலடியார் கூறுவதாயிற்று.

    இனி, அறிவுநூற்கல்வியைப் பெற்றவர் மறுமையில் இன்பத்தை அடைவரென்று பலருங் கூறக் காண்கின்றோமே யல்லாமல், இம்மையில் மற்றவர்க்கில்லாத சிறப்பினைப் பெறக் காண்கின்றோம் இல்லையே; எல்லாரும் உண்டு உடுத்து உறங்கிச் சாதல் போலவே அவரும் உண்டுத் துறங்கிச் சாகின்றனர்; இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்க்குங்கால் உலகநூற் கல்வியில் மிக்கவர்களே இம்மையில் எல்லாச் சீருஞ் சிறப்பும் இன்பமும் பெறுகின்றனர் கட்புலனுக்கும் நமது நினைவுக்கும் எட்டாத மறுமையில் இன்பத்தை அடையலாமென நினைந்து அறிவுநூற் கல்வியிற் காலத்தைக் கழிப்பவர் கடைசியில் ஏமாறி இறப்பதற்கே இடமாகிறதென்று அதனை இழித்துக் கூறுவாரே பலர். என்றாலும், அறிவின் ஏற்றத்தாழ்வுகைளச் செவ்வையாக ஆராய்ந்துபார்த்தால், அறிவுநூற் கல்வியால் வருஞ் சிறப்பும் இன்பமும் வேறெதனாலும் வரமாட்டா என்பது நன்கு புலப்படும். எங்ஙனமென்றால், உலகத்தின்கண் எத்தகைய அரும்பெருந் தொழில்கள் நடைபெறுதற்கும் அறிவும் அறிவுமுயற்சியுங் கட்டாயமாய் வேண்டியிருக்கின்றன. அறிவில்லாமல் எந்தத் தொழிலையுஞ் செய்தல் முடியாது, எந்த நலத்தையும் அடைதல் இயலாது. அறிவில்லாதவர்களும் அறிவுடையாரைக்கண்டால் அவர்க்குச் சிறப்புச் செய்து பணிகின்றனர்; அவரை விரும்புகின்றனர். ஒருவர் பலருதவி கொண்டு ஓர் அரிய பெரிய முயற்சியை நடைபெறுவிக்குங்கால், அம்முயற்சி அறிவில்லாதவர் செய்கையால் முட்டுப்படுதல் கண்டு எவ்வளவு வருந்தி அவரை வெறுக்கின்றனர்! அப்போது அறிவுடையான் ஒருவன் மற்றையோர் செய்த பிழைகளை யெல்லாந் திருத்தி அதனைச் செவ்விதாக்கி முடிக்குங்கால் அதனைக்கண்டு வியந்து அவன்மேல் எவ்வளவு உவப்படைந்து அவனை விரும்புகின்றனர்! இங்ஙனமே மிகச் சிறிய முயற்சிமுதல் மிகப்பெரிய முயற்சி ஈறாக அறிவில்லாதவர் செய்வன பெரிதும் பிழைபட்டுத் துன்பத்தைத் தருதலும், அறிவுடையார் செய்வன பெரிதுந் திருத்துமுற்று இன்பத்தைத் தருதலுஞ் சிறிதேனும் ஆழ்ந்து நினைப்பார்க்கு விளங்காமற் போகா. இதுபற்றியன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்


      "அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
      என்உடைய ரேனும் இலர்"

    என்று அருளிச் செய்தனர்.

    இனி, இத்துணைச் சிறந்த அறிவுங் கல்வியாலன்றி உண்டாகாது. கல்வியில்லதாரிலும் அறிவால் முற்பிறவிகளிற் பயின்ற கல்வியின் பயனாலேயே அங்ஙனம் அறிவு கூடப் பெறுகின்றனர். அங்ஙனக் கூடப்பெற்ற அறிவும் இப்பிறவியில் மேலுமேலுங் கல்வியாற் பணப்டுத்தப் பட்டாலன்றி, அது பாசி மூடிய பளிக்குமணிபோல் திரும்பவும் அறியாமையால் அகப்பட்டு கல்வியில்லாதவன் எவ்வளவு உயர்ந்த அறிவு கூறினாலும், அதனை அறிவால் நிறைந்தோர் ஏற்றுக் கொள்ளமாட்டார். இதனைக்

      "கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
      கொள்ளார் அறிவுடை யார்"

    என்று திருக்குறளுங் கூறுகின்றது.

    இனிக், கல்வியுள்ளும் உலகநூற்கல்வி நிலையில்லாத பொருள்களையே உணர்த்துவதால், அதனால் விளையும் அறிவும் நிலையில்லாத இயல்பினதாய் நிலையான இன்பத்தைத் தரமாட்டாதாய் ஒழியும். அறிவுநூற் கல்வியோ, உலகநிலை, உயிரின்நிலை, உயிரோடு ஒன்றாய் நிற்கும் அறியாமையின் நிலை, இருவினைத் தோற்றம், உயிர் மூவகைக் குற்றமும் நீங்கும் வகை, முழுமுதற் கடவுளின் இயல்பு, அது செய்யும் உதவி, அதனோடொன்றாயிருந்து இம்மை மறுமை இரண்டிலும் நுகரும் இன்பநிலை முதலானவற்றை ஆராயும் உயர்ந்த ஆராய்ச்சியில் அறிவைத் தோயவைத்து, அவ் வழியால் அதனைத் தூயதாக்கிப், பேரொளியோடு துலங்கவைத்தலின், அறிவுநூற் கல்விகற்றார்முன் உலகநூற் கல்விமட்டும் உடையார் விலங்கினம்போல் எண்ணப்படுவர். இவ்வுண்மை,

      "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
      கற்றாரோ டேனை யவர்"

    என்ற தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு அறியப்படும்; இத்திருக்குறளில் ‘இலங்குநூல்‘ என்றது அறிவுநூலேயாம். வெளிப்பார்வை யளவில் உயிர்கள் எல்லாம் ஒத்த செயலும் மாறுதலும் உடையனபோற் காணப்படினும், நுணுகி ஆராய்ந்தால் அவற்றின் அறிவும் முயற்சியும் ஏற்றத்தாழ்வாகவே யிருக்கும். உண்ணல் உறங்கல் மருவல் சாதல் எல்லாவற்றிற்கும் பொதுவாயிருப்பினும் விலங்கினங்களில் இழிந்த பன்றியும் மக்களில் அறிவுடையான் ஒருவனும் ஒப்பாவார் என எவரேனுங் கூறுவரோ? மக்களில் அறிவுடையான் ஒருவனும் அறிவிலான் ஒருவனும் அங்ஙனமே உண்ணல் உறங்கல் முதலான தொழிலளவில் வேறுபாடில்லாதவர்போற் காணப்படினும், அறிவுடையான் தனக்குள்ள அறிவின் சிறுமையால் தாழ்ந்தோனாதலும் எல்லார்க்கும் உடன்பாடேயாகும்.

    அஃது உண்மையேயென்றாலும், உலக நூற்கல்வியால் விளங்கும் அறிவுகொண்டு இம்மையில் எல்லா நலங்களும் பெறுவதாயிருக்க, இதற்கு மேலும் அறிவு நூற்கல்வி ஒன்று வேண்டுமென்பது எதன்பொருட்டோவெனின், உலக நூற்கல்வி ஒன்றேகொண்டு இம்மையிலும் மிகச் சிறந்த நலங்களைப் பெறுதல் இயலாது; இப்பிறப்பிற் பெறுதற்கரிய இன்பங்களையும் அறிவு நூற் கல்வியுடையார் எளிதிற் பெறுவர். கண்ணாற் கண்டுஞ் செவியாற் கேட்டும் வாயாற் சுவைத்தும் மூக்கால் முகந்தும் மெய்யால் தொட்டும் ஐம்பொறிகளால் துய்க்கும் இன்பங்களிலும்கூட அறிவுநூற் கல்வியால் உயர்ந்த அறிவு வாய்த்தவனுக்கு வரும் இன்பம், ஏனை உலகநூற் கல்விமட்டும் பெற்றவனுக்குத் தோன்றாது. மிக்க் கூரிய முனையையுடைய ஓர் இருப்புக்கோல் ஆழ்ந்ததோர் இடத்தையுந் துளைத்துச் செல்லும்; முனை மழுங்கியதோ அதைப்போல ஆழ்ந்து செல்ல மாட்டாதாகும். உலகநூற்கல்வி சிறிது அறிவை விளக்குமேனும், அதனாற் செய்யப்படும் உலக முயற்சிகள் பலவும் மக்களுக்குப் பலவகைக் கவலைகளையுந் துன்பங்களையும் விளைவித்து அவரது அறிவை அலுப்படையச் செய்து மழுக்கு மாதலின் அவர் ஐம்பொறி இன்பங்களையுங்கூடக் கூர்ந்து பார்த்துத் துய்க்க மாட்டார். அறிவுநூற்கல்வி யுடையார்க்கு நிகழும் அறிவும் முயற்சியும் அத்தகைய அல்லல்களை வருவியாமல் மேன்மேல் உள்ளக் கிளர்ச்சியினைத் தருவனவாய் இருத்தலின், அவரது அறிவு பெருவிளக்கம் உடையதாய், அவர் துய்க்கும் எவ்வகை யின்பங்களையும் மிகவுங் கூர்மையாய்த் துய்த்தற்குரிய வழிதுறைகளைக் காட்டி அவரை எக்காலும் பெருமகிழ்ச்சியில் தோய்ந்திருக்கச்செய்யும். இனிய ஓசையையேனும் அழகிய காட்சிகளையேனுந் தீஞ்சுவை உணவையேனும் நலஞ்சிறந்த வேறு பிறவற்றையேனும் இவ் விருதிறத்தாரும் ஒருகாலத்து ஒருங்கே துய்க்கும்போது, அறிவுநூற்கல்வி யுடையார் அவற்றின் நுணுக்கங்களை நிரம்பத் தெரிந்து மிக மகிழ்தலும், உலகநூற்கல்வியுடையார் அவற்றை அங்ஙனம் உணரமாட்டாமையின் அவர் சிறிதே மகிழ்தலுங் கண்கூடாய்க் கண்டறியலாம்.

    மேலும், அறிவுநூற்கல்வி யுடையார் பெரிதுங் கூர்மையான அறிவுடையராதலின், அவர் தாம் விரும்பினால் தம்மினுந் தாழ்ந்த உலகநூற்கல்வி யுடையார் செய்யும் எத்திற முயற்சிகளையும் அவரைவிட எளிதாகவுஞ் செவ்விதாகவுஞ் செய்து முடிக்கமாட்டுவர். உலகநூற் கல்வி யுடையாரோ தாம் எத்துதணதான் விரும்பினாலும் , தம்மினும் மேற்பட்ட அறிவுநூற்கல்வியார்க்குள்ள அறிவைப் பெறவாவது அவர் செய்யும் முயற்சிகளிற் றினையளவேனுந் தாஞ் செய்யவாவது மாட்டுவாரல்லர்; எதுபோல வெனின், அரசியலை திறம்பட நடத்தும் மேலோனான ஓர் அமைச்சன் தன்கீழ் அலுவல் பார்ப்பார் செய்யும் முயற்சிகளைத் தான் செய்யவேண்டினால் அவரினும் அதனைத் திறமையாக செய்து முடிப்பன்; அவன் கீழுள்ள ஊர்காவற்காரன் ஒருவன் அவ் வமைச்சன் தொழிலைத் தான் செய்ய விரும்பினால் அது முடியுமோ? அதுபோலவென ற்றிந்துகொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், எல்லா உயர்ந்த பொருள்களும், உயர்ந்தோரும், உயர்ந்த இனப்ங்களுந் தமக்கு இசையாத உலகநூலறிவி முயற்சியுடையாரை விட்டகன்று, தமக்கு இசைந்த அறிவுநூலறிவு முயற்சியுடையாரைத் தாமே வந்து அணுகுமாதலின் அறிவுநூற் கலைஞரே இம்மையிலும் எல்லா உயர்ந்த நலங்களையும் பெறுவர், மறுமையிலும் ஏனையோர்க்கு எட்டாத பேரின்பத்தைப் பெறுவர். ஆதலால், மக்களாய்ப் பிறந்தோர் உலகநூற்கல்வியிலேயே தமது காலத்தை முற்றுங் கழித்துவிடாது அறிவுநூற் கல்வியையும் மிக முயன்று பெற்றுப் போரறிவையும் பெரு நலங்களையும் எய்துவாராக! அவிறநூல் உலகநூல் இவ்விவை என்பதைப் பின்னர் விளக்கிக்காட்டுதும்.
    --------------------

    14. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்

    நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப் பலவகைக் குழப்பங்களையும் பலவகை துன்பங்களையும் உயிரழிவு, பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன. போர் அல்லலுக்கு இடமான இப்பிழைபாடான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல், அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே, எமது அறிவுரையை இங்கெழுதுகின்றோம். இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து, எமதுரை பொருந்துமாயின் அதனைக் கைப்பற்றி யொழுகி நம்மவர் நலப்படுவாராக!

    முதலில் நம் நாட்டவர்பால் உள்ள பெருங்குறை என்னென்றால், எதனையும் ஆய்ந்து ஓய்நது பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியாராயிருந்தாலும், அவரைப் பத்துப்பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங் கொண்டாட மாட்டார்; அதுவேயுமன்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக்கேட்டால், அது தகுமா தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசிவிடுவர்; அவர்க்குத் தீங்கும் இழைப்பர். இனி மற்றொருவர் கல்வி அறிவு ஆராய்ச்சிகள் சிறிம் இல்லாராயினும், அல்லது அவை சிறிதே உடையராயினும், பத்துப் பேர் அவர்பால் வைத்தப் பற்றினாலே அல்லது அவர்பால் தாம் பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவாராயின், அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாட வேண்டுமென்று சிறிதேனும் ஆராய்ந்து பாராமல் உடனே அவரைக் கண் கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக் கொண்டாட்டத்தால் வருந் துன்பங்களையும் தாம் அடைவர். பெரும்பாலும் நம் நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச்சிகள் உடைய பெரியாரைக் கொண்டாடுவதும் இல்லை; அவரால் தாம் அடைதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளி மினுக்கும் வெற்றாரவாரமும் உடையாரைப் பின்பற்றித் தமது நலனையுந் தம் நாட்டவர் நலனையும் இழந்து விடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்துவிட்டது.

    இனி, மேல்நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங் குணம் என்னவென்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும், அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து, எது தழுவத்தக்கதோ அதைத் தழுவுவர்; தழுவத்தகாததை விலக்குவர். வெறும் வெளிமினுக்கையும் வெற்றாரவாரத்தையும் கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும் ஆராய்ச்சியிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருதலால், அவர்கள் பால் வீணான எண்ணங்களும் வீணான பேச்சுக்களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் ஆராய்வதில்லை; பிறர் பாலுள்ள குணங்களை மட்டும் ஆராய்ந்து, அவற்றுக்காக அவரைப் பாராட்டுவதுடன், அவரால் தாமும் உலகமும் பயன்படுதற்கான ஒழுக்கங்களெல்லாஞ் செய்வர். அதனால், மேல் நாட்டவரில் நற்குணமும் நல்லறிவும் நன்முயற்சியும் உடையவர்கள் சீருஞ் சிறப்பும் எய்தித் தாமுந்த தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும் கவலையும் இன்றி உயிர்வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும் ஆயிரக்கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளையும் ஆயிரக்கணக்கான கல்விச்சாலைகளையும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங்களையும் ஆயிரக்கணக்கான கலையரங்குக் கழகங்களையும் இன்னும் இவை போல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலன்களையும் தாமிருக்கும் நாடுகளிற் பரவச் செய்து வருவதோடு, தாஞ்செல்லும் பிற நாடுகளிலும் அந்நலன்களை யெல்லாம் பரப்பி வருகின்றனர்.

    இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்ச்சி யில்லாமையோடு ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குக் தம் மனைவிமக்களும் நெருங்கிய உறவினருமே உரிய்ரென்வும்,மட்ரையொரெல்லாந்த் தமக்கு வெரான்வ்ரென்வுந்த் தாமுந்த் தம்மினித்தவ்ரும் ந்ன்ராயிருத்தலே த்மக்கு வேண்டும்,த்ம்மவ்ரல்லாத் பிரர் எக்கேடுகெட்டாலென்ன் எத்தெருவே போனாலென்ன் என்வும் நினைந்த்து பிறா நலத்தைச் சிறிதுங் கருதாதவர்களாய் இருக்கின்றனர். தன்னலங் கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத் தமிழ் நாட்டவர்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளுங் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதி கெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எஙக்ள சாதி உயர்ந்த்து, எங்கள சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரர்களோடு தாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள்கையில் தண்ணீர்கூட வாங்க மாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள் தேடும் வகைகளைப் பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் நமக்கு பொருள் சேருங் காலத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும், எந்த இடத்திற் போனாற் குறிகேட்கலாம்? எந்தத் தெய்வத்திற்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரைவீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிடலாமா? என்னுஞ் சிறு தெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானவனைப் பலவகையால் இழித்துத் தன்னைப் பலவகையால் உயர்த்துச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம். புகை வண்டிகளிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரையிலும் இந்தப் பேச்சே.

    இதைத்தவிர, நாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? நாம் இப்பிறவியிற் செய்ய வேண்டுவன யாவை? நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) உள்ள வேற்றுமை என்னை? நம்மையும் மற்ற எண்ணிறந்த உயிர்களையுந் தோற்றுவித்த்து யாது? இந்த உலகங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? இவைகளை யெல்லாம் படைத்த பேரறிவுப் பொருளின் நோக்கம் யாதாய் இருக்கலாம்? நாம் இறந்தபின் எந்த நிலையை யடைவோம்? பொருள் தேடுவதும், உண்பதும், உறங்குவதும், மருவுவதுந்தவிர, வேறு நாம் செய்யத்தக்கதும் தகாததும் இல்லையா? என்று இவ்வாறெல்லாம் எண்ணிப்பார்க்கத் தக்கவர்கள் நம்மில் நூறாயிரவரில் ஒருவரைக் கூடக் காண்பது அத்தி பூத்தாற்போல் இருக்கின்றதே!

    ஆனால் மேல்நாட்டவர்களிலோ இவைகளை யெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவரும், ஆராய்ந்து எழுதுபவரும், ஆராயுங் கழங்களும், அவர்களாலும் அக் கழகங்களாலும் எழுதி வெளியிடப்படுகின்ற நூல்களும், நாள் வெளியீடுகள் கிழமை வெளியீடுகள் திங்கள் வெளியீடூகளும், அவை தம்மைக் கற்பாரும் கற்பிப்பாரும், இவ்வகைகட்கெல்லாம் கோடிகோடியாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக்கையிலும் அடங்குதல் இல்லை. மேல்நாட்டவர்கள் பசியெடுத்த வேளையில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அங்கே அதனைப் பெற்று மகிழ்ச்சியோடு உண்பர்; தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெளியப்படுகின்றனரோ, அவரை அங்கே மணந்துகொள்வர். உடம்பைப் பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக்கொண்டு, அதற்குமேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத்தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மேன்மேற் பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும் புதிய புதிய பொறிகளையும் புதிய புதிய உண்மைகளையுங் கண்டு பிடிப்பதிலும், அவற்றைப் பயன் படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி வருகின்றனர். மற்று, நம் நாட்டவரோ, மேலே காட்டியபடி, நிலையில்லாமல் அழிந்துபோகுந் தமது உடம்பைப் பற்றியும், அவ்வுடம்பால் வந்த தொடர்புகளைப் பற்றியுமே எந்நேரமும் பேசியும் நினைந்தும் வருவல்லாமல், என்றும் நிலையாக இருக்கத்தக்க தமது அறிவு விளக்கத்தைப் பற்றியாதல், தம் அன்பையும் அருளையும் வளர்க்குங் கடமைகளைப் பற்றியாதல் பேசியும் எண்ணியும் வரக் காண்கின்றோம் இல்லையே!

    இன்னும், நமது வாழ்க்கைககு இன்றியமையாது வேண்டப்டுவன கல்விப் பொருளும் செல்வப்பொருளும் என்னும் இரண்டுமேயாகும். கல்விப் பொருளைப் பெற்றவர்கள், தமக்கும் பிறர்க்கும் நன்மையைத்தருந் துறைகளை ஆய்ந்து பார்த்துக், காலத்தின் நிலைக்கும் இடத்தின் நிலைக்கும் ஒத்த முயற்சிகளைச் சோம்பாது செய்வர்காளயின், அவர்கட்குச் செல்வப் பொருள் தானேவரும். வெறுஞ் செல்வம் மட்டும் தமது பழவினைப் பயத்தால் வாய்க்கப் பெற்றவர்கள் அங்ஙனங் கல்விப் பொருளை எளிதிலே பெற்றுக் கொள்ளுதல் இயலாது. மேலும் கல்விப் பொருள் என்றும் அழியாது; செல்வமோ சிலகாலத்தில் அழிந்துபோம்; கல்விப் பொருள் ஒருவனது அறிவைப் பற்றிக்கொண்டு எழுமை எழு பிறப்பும் அவனுககும் உற்ற துணையாய்ச் செல்லும்; செல்வமோ அதனை யுடையானுக்கு இந்தப் பிறவியிலேயே துணையாகாமற் பிராற் கவரப்பட்டு, ஒரேவொருகால் அவனுயிரையுந் தொலைத்தற்கு ஏதவாயிருக்கும். கல்விப் பொருள் இந்த உலகத்திலும், இங்குள்ள உயிர்களிலும் உள்ள வியப்பான உண்மைகளை விளங்கச் செய்வதுடன், இவற்றிற்கு அருளுண்மைகளையும் விளங்கச் செய்து நமக்குப் பேரின்பத்தைத் தராநிற்கும்; செல்வப் பொருளோ தன்னையுடை யானைப் பெரும் பாலுந் தீயதுறைகளில் புகுத்திச், சில காலத்தில் அவன் சிற்றின்பத்தினையும் நுகரவொட்டாமல் அவனை நோய்வாய்ப்படுத்து, அவனை விட்டு நீங்கி, அவனை விரைவில் மாய்க்கும். ஆகையாற் கல்விப் பொருள் சிறந்ததோ செல்வப் பொருள் சிறந்ததோ என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! கல்விப் பொருள் ஒன்றுமே நமக்கும் நம்மைச் சேர்ந்தார்க்கும் நலம் பயப்பதன்றிச் செல்வப் பொருள் அங்ஙனம் நலம் பயப்பதன்றிச் சிறிதுணர்வுடையார்க்கும் விளங்குமன்றோ? ஆகவே, கல்விப் பொருளின் பொருட்டுச் செல்வப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமே யல்லாமற், செல்வப் பொருளைப் பெறும் பொருட்டே கல்விப் பொருளைப் பயன்படுத்துதல் ஆகாது.

    ஆனால், நம் நாட்டவர் நிலை எத்தன்மையதாயிருக்கின்றதென்பதை எண்ணிப் பாருங்கள்! நம்மவரிற் பெரும்பாலார்க்குக் கல்வி கற்பதிற் சிறிதும் விருப்பமே யில்லை. கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுந் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாற் போதுமென்றும், அதுவும் வேண்டாங் கையெழுத்துப் போடத் தெரிந்தாற் போதுமென்றும் எண்ணி அங்ஙனமே நடப்பவர்களாய் இருக்கின்றார்கள். இன்னும் பலர், "தமிழ்ப் படித்து என்ன வாரிக் கொள்ளப் போகின்றான்? படியாதவர்களில் எத்தனையோ பேர் பொருள்தேடிச் செல்வர்களா யில்லையா? என்று வாய் கூசாது பேசிப் போகின்றனர். இன்னும் பலர், "ஆங்கிலம் படித்தாலும் பெரிய வேலை கிடைக்கும்; ஆங்கிலம் படித்துப் பட்டம் வாங்கின மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரத்துடன் பெண் கிடைக்கும்" என்று எண்ணுவதுஞ் சொல்லுவதுஞ் செய்து, இவைகளுக்காகவே தம் மக்களை ஆங்கிலம் பயிலச் செய்கின்றார்கள்.

    துவக்கத்திலிருந்தே இந்த எண்ணத்தோடு ஆங்கிலங் கற்கின்ற பிள்ளைகள், அதனில் தேர்ச்சி பெற்றுப் பட்டங்கள் வாங்கினவர்களாய் வெளிவந்தவுடன், பொருள் வருவாய்க்கு இசைந்த வேலைகளைப் பெறுவதிற் கண்ணுங் கருத்தும் உடையராகின்றார்களே யல்லாமல், மேலும் மேலும் கல்வியறிவைப் பெருக்க வேண்டுமென்னும் எண்ணம் உடையராகக் காணபப்டவில்லை. அரசியற்றுறைகளிலோ, நீராவி நிலையங்களிலோ, ஆங்கி வணிகர்தந் தொழிற்சாலைகளிலோ, இன்னும் இவைபோன்ற பிறவற்றிலோ பெரிய பெரிய அலுவல்களில் அமர்ந்து பிறர்க்கு ஊழியஞ்செய்து பொருள் ஈட்டுவதிலேயே பெருமுயற்சி யுடையவர்களாய் இருக்கின்றார்கள். இவ்வலுவர்களைப் பெறும் பொருட்டு, அவற்றிற்குத் தலைவர்களா யிருப்பவர்கள் கேட்கும் அளவெல்லாந் தாழ்ந்து கைக்கூலியுங் கொடுகிக்கின்றார்கள். அதுமட்டோ, அத்தலைவர்கள் விரும்புகிறபடி யெல்லாம் மானக்கேடான செயல்களைச் செய்வதற்கும் முன் நின்கின்றார்கள்! பொருள் வருவாயையுந் தலைமையையுமே பெரியவாக நினைத்து, இவ்வாறெல்லாம் பெரும்பாடுபட்டுத் தாம் விரும்பிய வேலைகளை அடைந்த பிறகாவது, இவர்கள் எண்ணம் கல்விப் பயிற்சியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்வதிலும் நாட்டுக்கு நலந் தேடுவதிலுந் திருப்புகின்றதோ வென்றால், இல்லை, இல்லை. தாமிருக்கும் வேலையினளவிற்கு வருஞ் சம்பளத்தில் மனநிறைவு பெறாமல், தாம் தமக்கு மேலுள்ளவர்கட்குக் கைக்கூலி கொடுத்தது போலவே, தாமுந் தமக்குக் கீழுள்ளவர்பாலுந், தமது தலைமைக்குக் கீழ் அடங்கி நடக்கும் ஏழை யெளிவர்கள் பாலுமிருந்து ஓயாமற் கைக்கூலி வாங்கின வண்ணமாயிருக்கின்றார்கள்.

    அங்ஙனம் ஏழை எளியவர்கள் அழஅழ அவர்கள் வயிற்றில் அடித்துச் சேர்க்கும் பொருளையாவது அவர்கள் நல்வழியிற் செலவு செய்கிறார்களோ வென்றால் அதுவுமில்லை. இரப்பவர்க்கு ஒரு கைமுகந்த அரிசி தானுந் கொடுக்க இசையார்; கற்பவர்க்குங் கற்றவர்க்கும் ஒரு காசு தானுங் கொடார். மற்றும், தம் மனைவி மக்கட்குஙப் பொற் சரிகை பின்னிய பட்டாடைகள் வாங்கிக் கொடுப்பதிலும், வைரம் இழைத்த உயர்ந்த அணிகலன்கள் செய்வித்து அணிவதிலும், அவர்கள் புழங்குதற்குப் பொன் வெள்ளிகளிற் சமைத்த ஏனங்கள் வாங்கிச் சேர்ப்பதிலும், அவர்களுந் தாமும் ஏறி ஊர் சுற்றுவதற்குக் குதிரை வண்டிகள், இவற்றினும் விலையுயர்ந்த உந்துவண்டிகள் (motor cars) அமைத்துக் கொள்வதிலும், நாடகசாலைகள் குதிரைப் பந்தயங்கள் வட்டக்காட்சிகள் (circus) சென்று காண்பதிலும், இன்னும் இவைபோன்ற வெற்றாரவாரங்களிலுமாகத் தாம் ஏழைக் குடிமக்களிடமிருந்து பகற் கொள்ளையடித்த பெருந்தொகையான பொருளைச் செலவு செய்து விடுகின்றார்கள். இன்னும் பலர், சாராயங் குடித்தும், ஊன்தின்றும், வேசியரை மருவியும் அப்பொருளைப் பாழாக்குகின்றார்கள். மற்றும பலர் அப் பொருளைக் கடன் கொடுத்து வட்டி மேல் வட்டி வாங்கியும், அம் முகத்தால் ஏழை எளியவர்களின் நிலங்கள் வீடுகள் பண்டங்களைக் கவர்ந்துத் தமது பொருளை ஆயிரம் நூறாயிரங் கோடி என்னும் பேரளவாகப் பெருக்குவதிலேயே முனைந்து நிற்கின்றார்கள்.

    இவ்வாறாக, ஆங்கிலக் கற்கும் இந் நாட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாங் கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக் குடிமக்களைப் பாழாக்குகின்றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ஒத்தவர்களாகவே யிருக்கின்றார்கள். தந்நலந் தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள், அவைக் களங்களில் மேடைமேலேறிப் பேசும்போதுமட்டும் ஏழை மக்களுக்க்க்க் கண்ணீர்விட்டுக் கதறுகின்றார்கள்! இஃது எதனை ஒத்திருக்கிறதென்றால், "ஆடு நனைகிறதேயெறு ஓநாய் குந்தி யழுததையே" ஒத்திருக்கின்றது. மேடை மேல் இவ்வளவு இரக்கங்காட்டிப் பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழையிரவலர்கள் சென்றால் அவர்களை ஏசித் துரத்துகின்றார்கள். இந்த வகையிற் பார்ப்பனரை விடப் பார்ப்பன ரல்லாதாரே மிக்க் கொடியராயிருக்கின்றார்கள். யாங்ஙனமென்றால், உயர்ந்த நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள், தம்மினத்தவரல்லாதார்க்கு ஏதோருதவி யுஞ் செய்யாவிடினுந், தம்மினத்தவர்களில் ஏழைகளாயிருப்பவர்க்கு எல்லாவகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர்நிலைகளிலிருப்பவர்களோ ஏழைக்குடிகட்கு ஏதொரு நன்மையுஞ் செய்யக் காண்கிலேம்; நன்மை செய்யாதொழியினுந் தீமையேனுஞ் செய்யாதிருக்கின்றார்களோ வென்றால், அப்படியுமில்லை; எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் "தோலிருக்கச் சுளை விழுங்குவது" போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்!

    செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச் செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின், அங்கும் நடுவிழந்து ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஓர் ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்தவரும் முறையாக வழக்குத் தீர்க்கப்பட்டுத் தங்குறை தீர்க்கின்றனர். நம் நாட்டவர் அந்நிலையில் இருப்பிற் பெரும்பாலும் அவரால் நடுவாக வழக்குத் தீர்க்கப்படுதல் இல்லை; அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது. இதனினும் பெருங் கொடுமை யாதிருக்கின்றது! காவலாக இட்ட வேலியே பயிரைத் தின்றால் பயிர் விளைவதெப்படி?

    இங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கிலங் கற்ற நம்மனோர், பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு இவ்வாறெல்லாந் தீங்கிழைப்பினும், பார்ப்பனர் காலில் விழுவதற்கும் அவர்க்குத் தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகின்றாரில்லை. இவர்கள் ஆங்கிலங் கற்றது வயிற்றுப்பிழைப்பிற்கும் பெருமைக்குமே யல்லாமல் ஆங்கிலத்துள்ள விழுமிய அறிவாராய்ச்சியைப் பெறுதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் ஆராய்ச்சியில்லாப் பேதைகளான தம் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வரவழைத்து, அவர்க்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின்றார்கள்! ஒருவேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாராமற், பேதைமை வயப்பட்டு, வறுமையறியாத பார்ப்பனடர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டுகட்குஞ், சிறு தெய்வ வெறியாட்கட்கும், அழிவழக்குகட்குந் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை, எண்ணுந்தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!

    இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும், பழைய நல்வினைப் பயனாற் பெருஞ் செல்வர்களாகவுஞ், சிற்றர்சர்களாகவும் வாழ்வார் நம்நாட்டிற் பெருநதொகை யாய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச் செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழைமக்கட்குச் செய்யுங் கொடுமைகளையுங் நாம் எண்ணிப் பார்ப்போமானால், நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங்களில் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடைகளிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லிழைத்த நகைகளிலும், அவர்கள் புழங்கும் பொன் வெள்ளி ஏனங்களிலும், அவர்கள் ஏறிச் செல்லும் ஊர்திகளிலும், இன்னும் இவை போன்ற வெளி மினுக்குகளிலும் அவர்கள் செலவு செய்திருக்கும் பொருளைக் கண்க்கிடப் புகுந்தால் அவை நூறாயிரக் கணக்காயிருக்கும்.

    இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன்தார்களின் அரண்மனைகளிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணிகலங்கள் முதலியவற்றிலும் மடங்கி வறிதே கிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை கணக்கில் அடங்கா.

    இங்ஙனமே சைவவைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக் கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங் கணக்கில் அடங்கா.

    இவ்வாறெல்லாம் இவர்கள் கையில் முடஙகிக் கிடந்து அவியும் பெரும்பொருட் குவியல்களெல்லாம் இவர்கள் விட்டு நீங்கிப், பொதுமக்கட்குப் பயன்படும் நிலைமையை யடையுமானால், இவ் விந்திய நாட்டில் வறுமையும் நோயும் அறியாமையுந் தலைக்காட்டுமா? இப் பெரும் பொருள் கொண்டு நூறாயிரக் கணக்கான கல்விச் சாலைகளை நாடெங்குந் திறப்பிக்கலாம். மிக வறியராயிருப்பவர்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவுகொடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழை எளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத்தொழில் கைத்தொழில்களை அறிவராய்ச்சிகளோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு மடங்கு ஆயிரம் மடங்கு மிகுதியான பயனைப் பெறலாம். வாணிகத்திற் பொய்யும் புரட்டுங் கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேரூதியத்தை யடையச் செய்யலாம். இவை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தொடர்கள், மின் வண்டிகள், வானவூர்திகள் முதலியன வெல்லாம் அமைத்துக் கொள்ளலாம். நீர்வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் நீர்ப்பீலிகள் எடுப்பிக்கலாம். பொதுமக்கட்கு அறிவு ஊட்டுங் கழகங்கள் நிலைபெறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்தலாம்; அவர்கள் கடவுளைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும் உலகங்களைப் பற்றியும் உலகியற் பொருள்களைபு பற்றியுங் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலையாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந்தெழுதும் நூல்களுக்குத் தக்கபடி பொருளுதவி புரிந்து, அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம். ஆண்டுகடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளைகொண்டு போகுங் கொடிய நோய்களை வராமற் றடைசெய்து மக்கள் வாழ்நாளை நீளச்செய்து அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம். எல்லா உயிர்களையுந் தோற்றுவித்து உயிர்கட்கு ஓயாமற் பேருதவி செய்து வரும் ஒரே முழுமுதற் கடவுளான ஒரு பெருந் தந்தையை அறியாமற், பிறந்து பெருந்துன்பப்பட்டு இறந்த மக்களையும், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையுந் தெய்வங்களாக நினைத்து வணங்கும் பெருங் குற்றஞ் செய்வதொடு, வாயற்ற தீங்கற்ற ஏழையுயிர்களாகிய ஆடு மாடு கோழி முதலியனவைகளைத் துடிதுடிக்க அறுத்து, அவற்றை அத் தெய்வங்களுக்குப் பலியாக ஓட்டி மீளா நரகத்திற்கு ஆளாகும் நம் பொதுமக்களை அத் தீமையினிறு விடுவிக்கலாம். சாதியென்றுங் குலமென்றும் வரையறுத்துக்கொண்டு சிறுவர் சிறுமிகளை அளவிறந்த துயரக் கடலில் அமிழ்த்தி வரும் கொடிய செயல்களை யொழித்து, அறவிவும் நற்குணமும் நற்செயலும் அன்பும் உடையாரை ஏதொரு வேற்றுமையும் இன்றி ஒருங்குகூட்டி வாழச் செய்யும் மக்கட் கூட்டுறவு மன்றங்கள் (Social Serivce Leagues) எங்கும் நிலை பெறுத்தலாம். ஒரு முழுமுதற் கடவுளை எல்லாருந் தடையின்றிச் சென்று வழிபட்டு மகிழுந் திருக்கோயில்கள் எங்கும் எடுப்பிக்கலாம். இன்னும் நம் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய இன்னும் எத்தனையோ உயர்ந்த ஏற்பாடுகளை யெல்லாம் செய்விக்கலாம்! இவ்வளவி நலங்களுக்கும் பயன்படுதற்குரிய கோடி கோடியான பெரும்பொருட் குவியல்கள், நம் நாட்டுச் செல்வர்களிடத்துஞ் சிற்றரசர்களிடத்தும் அரசர்களிடத்தும் மடத்தலைவர்களிடத்துஞ் சிறிதும் பிறர்க்குப் பயன்படாத வாறாய் மடங்கி மங்கிக் கிடக்கையில் அப்பொருட்டிரளை அவர்கள்பால் நின்றும் விடுவித்துப், பொதுமக்கட்குப் பய்னபடுத்துந் துறையில் இறங்கி முயலாமல், நம் நாட்டுத் தலைவர்கள் "நம் நாட்டுப் பொருள் மேல்நாட்டிற்குப் போய்விடுகின்றதே!" என்று சொல்லி, ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத, சாதி வேற்றுமை சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு, இந்நாட்டுக்குப் பலவாற்றாற் பெருந்தீமைகளை உண்டுபண்ணுதல் நன்றாகுமா? என்பதனை எண்ணிப் பாருங்கள்; நம் நாட்டவர் கையில் பொருள் கிடைத்தால் அது நம் பொது மக்கட்குப் பயன்படப்போவதில்லை! நகைக்கும், துணிக்கும், ஊர்திகட்குஞ் சாதியறுமாப்பு சமய இருமாப்களைப் பெருக்குதற்கும், ஏழை எளியவர்களைக் கொடுமையாக நடத்துதற்குந், தீயவொழுக்கங்களை மிகுதி செய்தற்கும், பார்ப்பனர்க்குக் கொடுத்தற்கும், ஆங்கி மருத்துவஞ் செய்வார் செலவிற்கும், அழிவழக்காடுதற்கும், இன்னும் இவைபோன்ற தீயவற்றிற்குந்தாம் அவரது பொருள் பயன்படும்; அல்லது அவர் பொருள்மேற்பொருள் சேர்த்து வைத்துவிட்டுச் சாகப் பின்வந்தோர் அவற்றையழித்துப் பாழாக்குதற்கே பயன்படும்! இவைகளைத் தவிர வேறெந்த நல்ல துறையிலாயினும் நம் செல்வர்கள் தமது பொருளை மனம் உவந்து பயன்படுத்தக் கண்டதுண்டோ சொல்லுங்கள்!

    மற்று, நமக்குப் புறம்பான மேல்நாட்டவர் கையிற் பொருள் சேர்ந்தால் அஃது எத்துணை நல்ல துறைகளிற் சென்று பயன்பட்டு, உலகத்திற் பரந்து விரிந்திருக்கும் எல்லா வகையினரான மக்களையும் இன்ப அறிவு வாழ்க கையில் வாழக்செய்கின்ற தென்பதைச் சிறிதுணர்ந்து பாருங்கள், மேல்நாட்டவர் ஒரே முழுமுதற் கடவுளை வணங்குவதோடு, அவ்வொரு கடவுளை வணங்காமல் இறந்துபோன உயிர்களையும், மரங்கள் விலங்குகள் கட்டைகள் கற்கள் முதலானவைகளையும் அறியாமையால் வணங்கிப் பிழைபடும் ஏனைத் தேயமக்களிடத்து இரக்கமு முடையவர்களாய்க், கோடிகோடியாகத் தமது பொருளைச் செலவு செய்து, கல்வி அறிவு ஆராய்ச்சியிற் சிறந்த தம் குருமார்களை நூறாயிரக்ணக்காய் அத்தேயங்களுக் கெல்லாம் அனுப்பி, ஆங்காங்குள்ள மக்களுக்குச் சமய அறிவையும் புகட்டி வருகின்றார்கள். இங்ஙனம் மேல் நாட்டவர் மற்றைக் கலையறிவுகளுடன் சமய அறிவிலுந் தாம் மேம்பட்டு விளங்குவதோடு, மற்றை நாட்டவரும் அதிற் சிறந்து விளங்க வேண்டுமென்னும் பேரிரக்கமு முடையவர்களாய், அதற்கென்று தமது பொருளைக் கணக்கில்லாமற் செலவு செய்து வருதல் போல நம் நாட்டவர் தமக்கேனும், பிறர்க்கேனும் அங்ஙனஞ் செய்யக் கண்டதுண்டா? நம் நாட்டிலுள்ளவர் ஓரினத்தவர் தமது சமயக் கல்விக்கேனுந், தம்மோடு உடன் உறையும் மற்றையினத்தவர் சமயக் கல்விக்கேனும் ஒரு காசாயினுஞ் செலவு செய்யக் கண்டதுண்டோ? அது மட்டுமா! ஒரு சில இனங்களைச் சேர்ந்தவர்கள் தாம் வணங்குங் கோயில்களில், தம்மோடு ஓர் ஊரில் ஒருங்கு உறையும் வேறுசில இனத்தவர்களை உள்ளே நுழையவிடாமற் கிட்ட அணுகினால் அவர்களை வெட்டிச் சாய்க்கின்றார்களே! இவர்கள் தாமா ஒரு நாட்டவர்? இவர்கள் தாமா அருளொழுக்கத்திற் சிறந்தவர்களாக நூல்களிற் புலனாகுஞ் சைவ்வைணவ சமயாசிரியர் மரபில் வந்தவர்கள்! இத் தமிழ் நாட்டில் இவ்வொருசில இனத்தார்க்க்குள்ள இறுமாப்பும் மனக்காழ்ப்புங் கொடுமையும் வேறெங்கேனும் இருக்கக் கண்டதுண்டோ? இத்தகையவர்கள் கையிற் பொருள் மிகுதியாய்ச் சேர்வது எதற்கு? அவர்களின் கொழுப்பையுங் காழ்ப்பையுங் கொடுமையையும் மிகுதிப்படுத்துதற்கன்றோ? இக் கொடியவர்கள் கையைவிட்டு நீங்கி அப்பொருள் மேல் நாட்டவர் கையை அடைந்தால், அதனால் உலகிற்கு நன்மையே விளையுமல்லாது தீமை சிறிதும் உண்டாகாதென்பது நன்கு புலனாகவில்லையா?

    இனிச் சமயக் கல்வியிலே யல்லாமற் பிற கல்வித் துறைகளிலும் மேல்நாட்டவர் தமது பொருளை எத்தனை கோடிக்கணக்காய்ச் செலவு செய்கின்றார்களென்பதைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! மேல்நாட்டவர் இத் தமிழ் நாட்டில் வருவதற்குமுன் இங்கே உயர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றாயினும் இருநத்தா? திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சிலவே எங்கோ சில இடங்களில் வயிற்றுப் பிழைப்புக்கு இல்லா வாத்தியார்களால் நடத்தப்பட்டன; அவ் வாத்தியார்களிற் பொரும்பாலாருந் தமிழ் நன்கு கற்றறியாதவர். ஒரு சிறுவன் தமிழ் எழுத்துக்கள் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதற்கே நாலைந்து ஆண்டுகள் செல்லும். அக்காலத்தில் அச்சுப் புத்தகங்களே இல்லாமையால், உயர்ந்த தமிழ் நூல்களை எளிதிற் பெற்றுப் பயில்வதற்கே இடமில்லாமற் போயிற்று. இவ் வொட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலுந், தாழ்ந்த குலத்தவராக எண்ணப் படுவோர் சேர்ந்து படித்தல் இயலாது. அஞ்ஞான்றிருந்த தமிழ்ப் புலவர் சிலரும் பொருள் வருவாய்க்கு வழியில்லாமையாற், செல்வர் சிலரை யடுத்து அவரைப் பல வகையாலெல்லாம் புகழ்ந்துப் பாடிக் காலங் கழித்து வந்தார்கள். இவ்விரங்கத்தக்க நிலை இப்போதும் முற்றும் ஒழிந்து போயிற்று என்று சொல்லுதல் கூடாது. ஆனாலும், மேல்நாட்டவர் இந்நாட்டிற்கு வந்தபின், தமிழ் மக்கட்கும் பிறர்க்கும் விளைந்திருக்குங் கல்வி எவராலும் மறுக்க முடியா! அவர்கள் இன்னார்க்குக் கல்வி நலங்கள் கற்பிக்கலாம், இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாகாது என்னும் வேற்றுமை சிறிதும் பாராதவர்களாய்க், கல்வி யெனும் ந்ந்தாமண விளக்கை எல்லார் கையிலும் கொடுத்து, அறியாமை யென்னும் பேரிருளைக் கடந்து அறிவுலகத் துக்குச் செல்லும் ஒப்புயர்வற்ற வழியைக் காட்டி வருகின்றார்கள் அல்லரோ? பார்ப்பனக்குடி வேளாளக்குடிகள் இருக்கு மிடங்களிலே யன்றிப், பள்ளச்சேரி பறைச்சேரைகளிலும் அவர்கள் நெடுகப் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்வியை யூட்டி எல்லார்க்கும் அறிவுக் கண்ணைத் திறப்பித்து வருதல் எல்ரும் அறிந்த தன்றோ?

    இனி, நன்செய், புன்செய்ப் பயிர்களை விளைத்ற்குங், குளங் கூவல் கிணறுகள் வெட்டுதற்கும், வீடுகள் கட்டுதற்கும், ஆடு மாடுகள் மேய்த்தற்கும், இன்னுந் தமக்கு வேண்டிய எத்தனையோ வேலைகளெல்லாஞ் செய்வித்துக் கொள்ளுதற்கும் இவ்வேழைக் குடிமக்களைப் பயன்படுத்தி, அவ்வழியால் திரண்டு செல்வத்தை யடைந்து இனிது வாழும் நம் நாட்டு அரசர்களுங் குறுநில மன்னர்களும் மடாதிபதிகளுஞ் செல்வர்களுமோ வென்றால், அவ்வேழைகளுக்கு ஒருவேளை நல்லுணவாவது அவர்கள் உடுத்துக கொள்ளுவதற்கு ஓர் ஆறுமுழத் துண்டாவது கொடுக்கின்றார்களா? இல்லை, இல்லை. அவர்கள் தமிழ் கற்பதற்கு ஒரு சிறு பள்ளிக்கூடமாவது வைத்து நடத்துகின்றார்களா? இல்லை, இல்லை. இது மட்டுமோ! அவ்வேழைகள் நம்மூர்த் தெரு வழியேயுஞ் செல்லல் ஆகாது, தாம் புழங்குத் தண்ணீர்த் துறைகளிலுந் தண்ணீர் முகக்கல் ஆகாது. "நான் பெரியவன், அவன் தாழ்ந்தவன். எனக்கு முதலில் திருநீறு துளசி கொடுக்க் வேண்டும்; அவனுக்கு அப்புறங் கொடுக்க் வேண்டும்" என்று தமக்குள்ளேயே தம் பெருமையைக் காட்டிக்கொள்ளத் தாம் செல்லுங் கோபுரவாயிலிலும் அவ்வேழை மக்கள் அணுகுதல் ஆகாது என்று அவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கின்றார்கள். ஏதொரு தீங்குஞ் செய்யாது, எல்லா வகையிலும் நலங்களே செய்து, தம்மையுந், தம்மவரையும் இனிது வாழ வைக்கும் அவ்வெளிய மக்களுக்கு, மேற் குலத்தவராகத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லிக்கொள்ளும் மக்கட்போலிகள் எத்தகைய கைம்மாறு செய்கின்றார்கள்! பார்த்தீர்களா? அருளிரக்கமுடையார் சிலர், இம் மக்கட் போலிகளைப் பார்த்து, "உங்களுக்கு நன்மையே செய்யும் இவ்வேழைகளை ஏன் இங்ஙனம் வருத்துகின்றீர்கள்?" என்று கேட்டால், ஊரார் எவர்க்குந் தெரியாத வடமொயிற் பார்ப்பனர் தமது நன்மையையே கோரி, மற்றைப் பிறரை யெல்லாம் இழித்து, அவர்க்குத் தீது செய்யுந் தீய எண்ணத் தோடு எழுதி வைத்திருக்குங் கொடிய மிருதி நூற் கட்டளைகளையெல்லாம் எடுத்து வந்து முழுநீளங் காட்டிக, "கடவுளே வேத்த்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார், அப்படிச் சொல்லியிருக்கிறார். அவரவர் முற்பிறவியிற் செய்த வினைப்படிதானே இப்பிறவியில் மேற்குல கீழ்குலங்களிற் பிறந்து துன்புறவேண்டும்! அதற்கு நாம் என்ன செய்யலாம்!" என்று எளிதாகச் சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள்.

    "வடமொழி நூல்கள் நமக்கு உரியவைகள் அல்ல. நமக்குரிய எந்தப் பழைய தமிழ் நூல்களிலாவது இத்தகைய கொடுமையை நம் போன்ற மக்கட்குச், செய்யும்படி ஏதேனும் சொல்லியிருக்கின்றதா? நம் சைவசமயாரியர்க ளெல்லாஞ் சாதி வேற்றுமை சிறிதும் பாராது நடந்தும் பாடியும் இருக்கின்றனரே; நம் ஆசிரியர் செய்த படியுஞ் சொல்லியபடியும் அல்லவா நாம் நடத்தல் வேண்டும?" என்று அவ் வருளாளர் கேட்டால், "அவையெல்லாம் ‘பக்தி மார்க்கத்தில் உள்ளார்க்குத் தகும்; ‘கர்ம மார்க்கத்திலுள்ள நமக்கு அவை தகா" என்கின்றார்கள். அதன்மேற், "பக்தி மார்க்கம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? அன்புநெறி அருள் நெறியைப் பரப்பிய நம் சமயாசரியர் கடைப்பிடித்து ஒழுகிய முறைப்படி நாம் நடப்பது நன்றா? தீதா? என்று வினவினால், அச்சாதி வெறி பிடித்த போலிகள், "சமயாசிரியர் எய்திய நிலை வரைக்கும் நாம் அவர்போல் நடத்தல் தீதாகும்" என்று விடை கூறுகின்றனர். அதுகேட்டு மீண்டும் அவ்வருட்செல்வர், "ஒற்றுமையின்மையால் வரும் பகைமை பொறாமையினாலும், அன்பு அருள் இன்மையால் வரும் வன்னெஞ்ச இறுமாப்பினாலும் பற்றப்பட்டிருக்கும் வரையில் மக்கள் சமயாசிரியர் நிலையினை யெய்தல் யாங்ஙனங்கைகூடும்?" என்று கேட்பின், அதற்கவர் விடைகூற மாட்டாமல் மெல்ல எழுந்து நழுவிப் போய் விடுகின்றனர். உண்மையான நோக்குங்காற், சாதி வெறியர்க்குத் தம் முட்ம்போடு அழிந்தொழியுஞ் சாதிதான் பெரிதாக்க் காணப்படுகின்றதே யன்றி, உடம்பிழியினுந் தான் அழியா தாய்த் தம்முயிரோடு உடன் வருஞ் சமயவறிவு பெரிதாக்க் காணப்படவில்லை. தம் சமயாசிரியர் வழி நடவாத இவர்கள், தம்மைச் ‘சைவர்‘ என்று உயர்த்துப் பேசிக் கொள்வதும், அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஓதுவதும், அவரைப் பாராட்டிப் பேசுவதும் நகைப்புக்கே யிடமா யிருக்கின்றன. தமது சமயத்தினுந், தஞ்சாதியையே அவர்கள் மேலதாய்க் கருதுகின்றனர் என்பதற்கு அவர்கள் தஞ்சமயத்தவரல்லாத வைணவர் சிலர் தமக்கு உறவினராதல் பற்றி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலே சான்றாகும். தம்முடைய சைவ வைணவ சமயந்துறந்து கிறித்துவ சமயம் புகுவாருஞ், சாதி வேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இல்லாத அக் கிறித்துவ சமயம் புகுந்த பின்னருந், நமது பாழ்த்த சாதிவேற்றுமையினை விடாப் பிடியாய்ப் பற்றிக்கொண்டு, தாம் இறைவனைத் தொழச் செல்லுந் திருக்கோயில்களிலுங் கலகம் விளைக்கின்றன ரென்றாற், சாதி யிறுமாப்பின் கொடுமையை என்னென்றெடுத்துரைப்பேம்! திருக்கோயில்களிலுஞ் சாதிவேற்றுமை பாராட்டி ஈர நெஞ்சமின்றி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கக் கங்கனங் கட்டி முனைந்து நிற்கும் இவர்கள்தாமா ஆங்கி அரசை நீக்கித் தாமாக அரசாள வல்லவர்கள்? இங்ஙனந் தமக்குரிய சமய அறிவையுஞ் சமயாசிரியரையுஞ் சமயநூல்களையுஞ் சமயவொழுக்கங்களையும் பெரிதாகக் கருதாமற், றாம் பிறந்த சாதியையே அவை யெல்லாவற்றினும் பெரிதாகக் கருதி நடக்குந் தமிழர்கள் தமக்குரிய தமிழ் மொழியாலாயினும் உணர்ச்சி வாய்ந்தவர்களாய் இருக்கின்றார்களோவெனின், அப்படியும் இல்லை. தமிழர் பத்தாயிரம் பேரில் ஒருவர் இருவர்க்கே சிறிது எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியும். தமிழறிவு செம்மையாக வாய்ந்தவர்களைத் தேடப் புகுந்தால், நூறாயிரவர்க்கு ஒருவர் இருவரே காணப்படுவர். இங்ஙனம் மிக அரியராய்க் காணப்படுந் தமிழ் கற்றாரிற் பெரும்பாலார்க்குள்ள அறிவு நிலையாவது, தமிழ் கல்லாத ஏனையோர்க்கு உள்ள அறிவு நிலையினுஞ் சிறந்த்தாக காணப்படுகின்றதோ வென்றால், அப்படியும் இல்லை, கல்லாதவர்க்குள்ள சாதியிறுமாப்புங் மடமைக் கொள்கைகளுங் கற்றவரையும் விட்டு நீங்கியபாடில்லை. கற்றவருங் கல்லாதார்க் கிணங்கி அவர்வழிச் செல்லக் காண்கின்றோமேயன்றிக், கற்றவர் தாங் கற்ற கல்வியறிவாற் கல்லாதாரைத் திருத்தி அவரைத் தம் வழிபடுக்கக் காண்கின்றோம் இல்லை.

    தமது தனிச் செந்தமிழ் மொழியில் அன்பு அறிவு அருளொழுக்கங்களை விரிக்கும் நூல்களும், அரசர்கள் அடியார்கள் கற்றவர்களின் உண்மை வரலாறுகளைத் தெரிக்கும் பாட்டுகள் காப்பியங்களும், இறைவனைக் கண்டு அவனைக் குழைந்து குழைந்து உருகிப் பாடிய சமயாசரியர்தந் திருப்பதிகங்களும் நிரம்பிக் கிடக்க, அவற்றின் அருமை பெருமையறியாமல், தமிழ் நூல் நலத்திற் றினையளவும் வாயாது பொய்யும் புரட்டுங் கொலை புலை கட் குடியும் மலிந்த ஆரிய நூல்களைத் தாம் சிறிதும் ஆய்ந்து பாராதிருந்தும், அவற்றை ‘வேதம்‘ ‘மிருதி‘, ‘இதிகாசம்‘, ‘புராணம்‘, என்று உயர்த்துப் பேசி, அவைதம்மை இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டித் தாம் கற்ற தமிழையும் தமிழ் நூல்களையும் இழித்துப் பேசுந் தமிழ்ப் புலவரின் அறிவுநிலை எத்தகைய தென்பதை எண்ணிப் பாருங்கள்! தாம் கற்ற வடநூற் கல்வி உலகினர்க்குப் பயன்படாதென்பதை நன்குணர்ந்திருந்துந், தாம் கல்லாத தமிழ் மொழிக் கல்வியே இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படுமென்பதை நெஞ்சாரத் தெரிந்திருந்தும், தாம் பயின்ற இருக்கு முதலான ஆரிய நூல்களிற் பல்வேறு சிறு தெய்வ வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு ஆகாதனவும் வெறும் பொய்க்கதைகளும் நிறைந்திருத்தல் செவ்வனே அறிந்திருந்துந், தாம் பயிலாத ‘தொல்காப்பியம்‘, ‘சங்க இலக்கியம்‘, ‘திருக்குறள்‘, சிலப்பதிகாரம்‘, ‘தேவார திருவாசகம‘, ‘பெரிய புராணம்‘, ‘சிவஞான போதம்‘ முதலான அருந்தமிழ் நூல்களில் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கமும் மக்களின் நல்லொழுக்கத் துறைகட்கு இன்றியமையாது வேண்டுவனவும், உயர்ந்த உண்மை வரலாறுகளும் நிரம்பி விளங்கல் கேட்டிருந்தும், தாம் தமக்குரியவாக்க் கருதியிருக்கும் வட நூல்களையே தெய்வ நூல்களாக உயர்த்ப பேசித், தமக்குப் புறம்பாகத் தாம் கருதியிருக்குந் தமிழ் நூல்களையெல்லாம் மக்களிலுந் தாழ்ந்தவர்க் குரியவாக இழித்துப் பேசி, இந்நாட்டவர் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் நிற்கும் ஆரிய மாந்தர்தம் அறிவுநிலை எத்தகைய தென்பதையும் எண்ணிப் பாருங்கள்! இவ்வாறாக இத் தமிழ் நாட்டிலுள்ள கற்றவர்கள் நிலையும் நடுவுநிலை திறம்பியதாய், உண்மையை உள்ளபடி ஆராய்ந்துரைத்து மக்களை உண்மையறிவில் மேலேழச் செய்தலிற் சிறிதும் விருப்பு இல்லாமல் அவர் தம் முன்னேற்றத்திற்குப் பேரிடர் பயப்படுமாயிருத்தலை ஆழ்ந்து நினையல்லார்க்கு இந்நாட்டவரும் இவரிற் பலவகையில் வேறுபடாத வடநாட்டவரும் ஒருங்கு கெழுமித் தாமே தமது நாட்டை அரசு புரிதல் கனவிலுங் கைகூடாதென்பது நன்கு விளங்கா நிற்கும். இஃதிவ்வாறிருக்க,

    இனி, மேல்நாட்டவரிற் கற்றாரின் அறிவு நிலையினைச் சிறிதெண்ணிப் பாருங்கள்! அவர்கள் தாம் பெற்ற செல்வ மெல்லாந் தமது கல்விப் பயிற்சிக்கே பயன்படுமாறு செய்து, தமது ஆங்கில மொழியை மிகத் திருத்தமாகவுந் தீஞ்சுவையுடையதாகவும் வழங்கி, அதன்கண் எல்லா வகையான கலை நூல்களையும் ஆழ்ந்தாராய்ந்து தெளிந்த அறிவான் நாளுநாளும் இயற்றி, உலகமெங்கணுந் தமது மொழிப் பயிற்சியை ஒளிரச் செய்து வருகின்றார்கள். அது மட்டுமோ! அவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் நன்கு பயின்று, அவற்றின் கண் உள்ள அரிய பெரிய நூல்களையும் தமது ஆங்கில மொழியில் திருப்பி, அவற்றின் உண்மைகளையும், நடுநிலை வழுவாது எடுத்துக் காட்டி, அவைகளும் இவ்வுலகமெங்கும் பரவிப் பயன் தருமாறு செய்கின்றார்கள். மற்று, நம் இந்திய நாட்டு மக்கட் பகுப்பினரோ தாந்தாம் வழங்கும் மொழியை யன்றித் தம்மிற் பிறவகுப்பினர் வழங்கும் மொழியையும் அதன்கண் உள்ள நூல்களையுங் கற்பதில் வேட்கை சிறிதுமில்லாராய் நிற்கும் அளவிலமையாது, அவற்றையும் அவற்றை வழங்கி வருவாரையும் இழித்துப் பேசியும் வாளா மாய்கின்றனர்.

    இன்னும், மேல்நாட்டவர் தமக்குரிய கிறித்துவ சமய வுணர்ச்சியை இவ்வுலகமெங்கினும் பரவச் செய்தற்குத் தமது பொருளிற் பெரும்பகுதியை செலவிட்டு வருகின்றனரேயல்லாமல், தமது சமய வுணர்ச்சியை ஒரு கருவியாய்க் கொண்டு செல்வப் பொருளை அவர்கள் தேடித் தொகுத்தல் கண்டிலேம். மற்று, இந்நாட்டின்கண் உள்ள குருக்கள்மாரோ, இந்து சமயப் பெயரால் அளவிறந்த கிரியைகள் சடங்குகளை வகுத்துவைத்து, அவற்றின் வாயிலாகச் செல்வர்கள் சிற்றரசர்கள் அரசர்களின் செல்வமெல்லாங் கவர்ந்து வருதலுடன், ஏழைக் குடிமக்கட்குரிய சிறு பொருளையு முறிஞ்சி அவர்களையும் வறுமைக்கு இரையாக்கி வருகின்றார்கள். ஒருவன் பிறந்த்து முதல் அவன் இறக்குமளவும், அவனும் அவனுக்குரியாருங் கடன் பட்டாயினுஞ் செய்து தீர்ந்து விடும்படியாக அவர்கள் கட்டிவைத்திருக்குங் கிரியைகளுயுஞ் சடங்குகளையும், அவற்றிற்காகச் செலவாகும் பொருட்டிரளையுங் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒருவன் செத்தவுடனாவது இக்கிரியைக்ள ஒழிகின்றனவா? இல்லை, இல்லை. அவன் செத்த பத்தாம் நாளிலுங் கிரியை, ஒவ்வொரு திங்களிலும் மறைநிலா நாளிலுங் கிரியை, ஒவ்வோராண்டிலும் அவன் இறந்த நாளிலுங் கிரியை. இங்ஙனங், கருவாய் வயிற்றிலிருக்கும் போதும், மகவாய்ப் பிறந்து அறை கழிக்கும்போதும் ஆடையுடுக்கும்போதுங், காது குத்தும்போதும், பள்ளிக் கூடத்திற் புகும்போதும், மணஞ்செயும்போதும், மனைவியுடன் கூடும்போதும், அறுபதாம் ஆண்டு நிறையும்போதும், இறந்தபோதும், இறந்த பின்னருந் தொடர்பான செலவிற் கிரியைகளைச் செய்து செய்து, நம் தமிழ்மக்கள் வறுமையிற் கிடந்துழலுமாறு புரிந்து, அவர் தரும் பொருளாற் கொழுக்கத் தின்று இன்புற்று இரக்கமிலராய் வாழும் ஆரியக் குருக்கள்மார்தஞ் சூழ்ச்சியை எண்ணிப் பார்ப்போர் எவரேனும் உளரா?

    இங்ஙனந் தொடர்பாக்க் கிரியைகளைப் பற்றுமாறு கற்பித்து, அவற்றைத் தமிழர்கள் தாமே செய்யாமல் ஆரியராகிய தம்மைக்கொண்டே செய்வித்தல் வேண்டுமெனவும் வற்புறுத்தி, அவ்வாற்றால் தமிழர்கள் பொருளைப் பகற்கொள்ளை கொண்டு இனிது வாழும் ஆரியக் குருக்கள், தாம் தமிழர் இல்லங்களில் அங்ஙனந் தொடர்பாகச் செய்துவைக்குங் கிரியைகளை அவர்க்கு விளங்கும்படியான தமிழ் மொழியிலாவது சொல்லிச் செய்து வைக்கிறார்களா? அதுவும் இல்லை. தமிழர்க்கு எள்ளளவுந் தெரியாத ஆரிய மொழிச் சொற்களை ‘மந்திரங்கள்‘ என உயர்த்தி ஏமாற்றிச் சொல்லி அக்கிரியைகளைச் செய்பவர்களாய், அவர்களைப் பாவைபோல் ஆட்டி வைக்கிறார்கள். கடவுளைக் கண்டு பாடிய மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான தெய்வ ஆசிரியர்கள் அருளிச் செய்த தெய்வந் செந்தமிழ்த் திருப்பதிகங்களாந் தெய்வ மாமறை மந்திரங்கள் இருக்க, அவற்றை இழித்து ஒதுக்கி, இந் நாட்டவர்க்குத் தெரியாத வடமொழிச் சொற்களைச் சொல்லி அக்கிரியைகளைச் செய்யும் ஆரியக் குருமாரின் தீய எண்ணத்தைக் கண்டுணர்ந்து, அதனைப் பலரறியத் தெரிவிக்கும் அறிவாண்மை வாய்ந்தார் இத் தமிழரில் இல்லையே!

    இன்னுஞ், சிவபிரான் திருக்கோயில்களில் வழிபாடு ஆற்றுங் குருக்கள்மார் தமிழரினத்தைச் சேர்ந்தவராயி ருந்தும், அத்திருக்கோயில்களுக்கு வந்து சிறப்பெல்லாம் அவைகள் சைவசமயாசிரியராற் பாடப் பெற்றிருப்பது பற்றியே யென்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தும், அவர்கள் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு இறைவனுக்கு வழிபாடு செய்யாமல், தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்துச் சொல்லி, அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு முழுதுஞ் செய்கின்றார்கள். ஈதென்ன கொடுமை பாருங்கள்! தமிழ்மொழி வழங்கும் தமிழ் மொழி வழங்கும் இத்தென்னாட்டில், தமிழ் அரசர்களாலுந் தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச், சைவ சமயாசிரியர்களால் தமிழ்மொழி யிலேயே சிறப்பித்துப் பாடப்பெற்ற திருக்கோயில் களிலேயே, தமிழ் மந்திரங்களை வழங்காமற் செய்து, இத் தமிழ் நாட்டுக்கும் இங்கு வணங்கப்படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குந் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதுந் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத் திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்ட பார்ப்பனர்தஞ் சூழச்சியையும் அஞ்சா நெஞ்சையும் ஆண்மையையும் எண்ணிப் பாருங்கள் இத் தமிழ் நாட்டின்கண் எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ்மக்களும், நூறாயிரக்கணக்கான செல்வர்களும், ஆயிரக்கணக்கான சிற்றரசர்களும் நூற்றுக்கணக்கான மடாதிபதிகளுந் தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்துத், "தமிழர்களாகிய எங்களுக்குரிய இத் திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல், எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள்?" என்று கேட்ட ஆன்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? இத்துணைப் பெரிய இத் தமிழ்நாட்டில், எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ் மக்கள் நிறைந்த இத் தென்னாட்டில், எல்லாம் வல்ல இறைவனை நேர்முகமாய்க் கண்டு திருப்பதிகங்கள அருளிச் செய்த தெய்வ ஆசிரியர் நிலவிய இத் தெய்வ நாட்டில், எல்லா இடங்களிலுஞ் சிறந்ததான தூயதான தெயவம் உறைவதான திருக்கோயிலிலேயே நம் தெய்வ ஆசிரியர் அருளிய தமிழ் மந்திரங்கள் நிலவாமல் அவற்றைப் புறந்தள்ளித், தெய்வத் தன்மை சிறிதுங் காணப்படாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து நுழைத்து, அவற்றைப் பெருமைப்படுத்தித் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளைச் ‘சூத்திரப் பாட்டு‘ என்று இழித்துப் பேசும் பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலாயினும் இந்நாட்டுக்குக் குடியரசு வருவதாயிருந்தால், அதன்கண்ணுந் தமக்கு ஆட்சியையும் ஆக்கத்தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்பரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமையேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா? நினையாதீர்கள்!

    நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற் சாலைகள் புகைவண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மனக்களங்கள் பிணக்களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களாயிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைப்பவர்களாய் இருக்கின்றார்கள். ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பலவேறு சமயப் பிரிவு சாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ் வொவ்வொரு பிரிவினருந் தத்தஞ் சமயமே தத்தஞ் சாதியே யுயர்ந்ததென்று சொல்லி ஒருவரை யொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்திற்கு இடமாக இராமன் கதை கண்ணன் கதை கந்தன் கதை விநாயகன் கதை காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை இராமாயணம் பாரதம் பாகவதம் காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்து வழங்கி, அவை தம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள். தமிழரில் ஆராய்ச்சியறிவுடையார் எவரேனுந் தமிழ் மக்கள் இங்ஙனங் குருட்டு நம்பிக்கையால் அழிந்து போவதைக் கண்டு இரங்கி, "இப்பார்ப்பனக் கட்டான கதைகளை நம்ப வேண்டாம். அறிவு விளக்கத்திற்குந் தூய ஒழுக்கத்திற்கும் உதவி செய்யும் உயர்ந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பயிலுங்கள்! குலமும் ஒன்றே, குடியும ஒன்றே, வழிபடு தெய்வமும் ஒன்றே" என்று பொதுமக்கட்கு அறிவு தெருட்ட முன்வருவாராயின், உடனே அப்பார்ப்பன ரெல்லாரும் ஒரேமுகமாய் நின்று, அவரை ‘நாத்திகர்‘, ‘பிராமண நிந்தகர்‘, ‘வேத நிந்தகர்‘, என்று பலரறியத் தூற்றி, அவரது அறிவுரை எவரது செவியிலும் ஏறாமற் செய்வதுடன், அவரது வாழ்க்கைக்கும் பல வழியில் தீங்கிழிக்கின்றார்கள். மற்றை வகுப்பினரிற் செல்வமுடையவர்கள் எவர் இருப்பினும், அவரைப் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு, அவரது பொருளைப் பல வகையில் உறிஞ்சிவிடுவதொடு, தமிழறிஞரின் அறிவுரை அச்செல்வர்களின் செவியுள் நுழையாதபடிக்கும் மிக விழிப்பான இருந்து தடை புரிந்து விடுகின்றார்கள். அதனால், இத்தமிழ் நாட்டிலுள்ள செல்வர்களின் பெரும்பொருள் தமிழ் மக்களின் அறிவு விளக்கத்திற்கும் அவர் தம் நல்வாழ்க்கைக்குஞ் சிறிதும் பயன்படாமற் போகின்றது. ஊர்கடோறும், நகரங்கடோறும் ‘இராமயணம‘ முதலான கட்டுக்கதைப் ‘பிரசங்கம்‘ நடைபெறச் செய்து, அதன் வாயிலாக ஊரவர் பொருளை எளிதிற் கவர்ந்து கொள்வதுடன், அவ் வறிவில்லா மக்கள் உள்ளத்தில் தம்மையுந், தம்முடைய நூல்களையுந் ‘தேவர்‘ என்றுந் தேவர்க்குரிய ‘வேதங்கள்‘ என்றும் நம்பும் அசையாக் குருட்டு நம்பிக்கையும் பதியச் செய்து, அவ்வாற்றால் தம்முடைய ஆட்சியையும் முதன்மையையும் ஆரியப் பார்ப்பனர்கள் எங்கும் நிலை நாட்டி விட்டார்கள்; இன்னும் அம்முயற்சியை நடத்தியே வருகின்றார்கள் ஆங்கில நன்மக்கள் ஆங்காங்கு வைத்து நடத்தும் பள்ளிக்கூடங்களிற் கற்குந் தமிழ் மாணவரின் தமிழ்ப் பாடங்களிலெல்லாந் தம்முடைய புராணக் கட்டுக் கதைகளை நுழைத்து, இளமைப் பருவத்திலேயே அவை நம் சிறார் உள்ளத்திற் பசுமரத்தாணிபோல் இறுக்கமாகப் பதியவைக்கின்றார்கள். இவர்கள் இத்தமிழ் நாட்டைப் பாழ்படுத்தும் இவ்வுளவுகளை, உயர்நிலை களிலுள்ள தமிழறிஞர் நன்கறிந்து வைத்துந் தமக்கு வரும் பொருள் வருவாயையோ தமது நிலையுர்வையோ மேலதாக்கருதி, அவரிழைக்குந் தீங்குகட்கல்லாந் தாமும், உடநதையாய் நின்று நம் அருமைச் சிறாரறிவைப் பாழாக்கி விடுகின்றனர்! இன்னும் இங்ஙனமே பார்ப்பனர்களாலும், அவர்களைப் பின்பற்றி அவர்களைப்போல் நடக்கும் ஒழுகலாறுகள் உடையராய் வட மொழிக்கும் வட நூல்கட்கும் ஏற்றஞ்சொல்லித் தமிழையுந் தமிழ் நூல்களையும் புறத்தொதுக்கி நடக்குஞ் சைவ்வைணவர்களாலும் இந் நாட்டுக்கு விளைந்திருக்கின்ற தீமைகளை யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது.

    ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளிவருந் தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ் செய்பவர்களாயிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத்தக்க நிலையில் நம் குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாக கிளப்பி விட்டு, அவர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து, யாங் கூறும் நன் முயற்சிகளை விடாப்பிடியாய்ச் செய்து, அவர்களை ஆராய்ச்சியறிவிலும் இன்ப ஒருமை வாழ்க்கையிலும் பயன்படு முயற்சியிலும் முன்னேறுமாறு உதவி புரிதல் வேண்டும்.

    முதலாவதாக, ஊர்கடோறும் நகரந்தோறுந் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் திறப்பித்துச், செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தவிர மற்றை எல்லாப் பிள்ளைகளும் பொருட் செலவின்றித் தனித்தமிழ் கற்கும்படி செய்தல் வேண்டும். அவர்கட்குக் கற்பிக்கும் நூல்களிற் ஆரியக் கட்டுக்கதைகள் சிறிதும் விரவல் ஆகாது. ஒழுக்க முறைகளும், இயற்கைப் பொருன் இயல்புகளுஞ், சிற்றுயிர்களின் தன்மைகளும், ஆண்மையிற் சிறந்தாரின் வரலாறுகளும், மக்களின் நாகரிக வரலாறுகளும், உழவு வாணிகம் கைத்தொழில்கள் செய்யும் முறைகளுங், கடவுளின் றன்மைகளுந், கடவுளைக் கண்டு பாடிய சான்றோர் வரலாறுகளும், உண்மையாராயும் முறைகளும், இன்னும் இவை போன்றவைகளுமே அந்தந்த வகுப்புக்குத் தக்கபடி செந்தமிழில் எழுதப்படல் வேண்டும்.

    இரண்டாவது: தமிழ்கற்ற அறிஞர்களை ஆராய்ச்சி முறையிற் பயிற்றி ஊர்கடோறும் விடுத்துப் பொதுமக்கட்கு மேற்கூறிய பொருள்களை விளங்க எடுத்துச் சொல்லி, அவர்கள் நல்லறிவு பெறுமாறு செய்வித்தல் வேண்டும். ஊனுணவு ஒழித்தவர் ஊனுணவு ஒழியாதவர் என்னும் இருபிரிவினரன்றி, வேறு எவ்வகைச் சாதிப் பிரிவுஞ் சமயப்பிரிவும் இல்லாமல் ஒழித்தல் வேண்டும். பிறப்பு இறப்பு இல்லா எல்லாம்வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே எல்லாரும் வணங்கும்படி செய்வித்தல் வேண்டும். பிறந்து இறந்த உயிர்களைத் தெய்வங்களாக வணங்குஞ் சிறு தேவதை வணக்கத்தையும், அவைகளுக்கு இடும் உயிர்ப்பலியையும் அறவே ஒழித்தல் வேண்டும்.

    மூன்றாவது: மேற்குறித்த நன்முயற்சிகளைச் செய்து அவற்றால் விளையும் நலன்களை நிலைபெறுத்துதற்கு ஏராளமான பொருள்வேண்டி யிருக்குமாதலால், வீணே கோடிகோடியான பொருட்டிரளை வைத்துக்கொண்டு அவற்றை மேற்குறித்த நன்முயற்சிகளுக்கு பயன்படுத்தாமல் இறுமாந்து கிடக்குஞ் சிற்றரசர்களுஞ் செல்வர்களும் மடத்தலைவர்களும் அப் பெரும்பொருட்டிரளில் ஒரு சிறு பகுதியை மட்டுந் தமக்கு எடுத்துக் கொண்டு, மற்றைப் பெரும்பகுதியைக் குறிப்பிட்ட முயற்சிகளுக்குக் கொடுத்துவிடுமாறு, எந்தெந்த வகையில் முயலல் வேண்டுமோ அந்தந்த வகையா லெல்லாங் கடைப் பிடியாய் நின்று முயல்ல் வேண்டும். முயன்று பெற்ற பொருளை இந் நமுயற்சிகளுக்குப் பயன்படுத்துவதிலும் மிக விழிப்பாயிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஒழுங்கான முறையில், நம் நாட்டவர்கட்கு உண்மையாகவே நலந்தரு முறையில், தலைவர்களாக வருவோர் தமது அரும்பெரும் முயற்சியைப் பயன் படுத்துவாராக வென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
    -----------

    15. உடன்பிறந்தார் ஒற்றுமை


      "நீரில்லா நெற்றிபாழ் நெய்இல்லா உண்டிபாழ்
      ஆறில்லா ஊருக் கழகுபாழ் மாறின்
      உடற்பிறப் பில்லா உடம்பு பாழ் பாழே
      மடக்கொடி இல்லா மனை"
      - ....         ஔவையார்.

    ‘உடன்பிறந்தார்‘ என்னுஞ் சொல் ஒரே வயிற்றிற் கூடப் பிறந்தவர் என்னும் பொருளைத் தருவதாகும். தலைப்பில் எடுத்துக் காட்டிய ஒளைவையார் திருப்பாட்டின்கட் ‘பகைமை இல்லாத உடன் பிறப்பாளர் இன்றித் தனியே பிறக்கும் பிறப்புப் பயனற்றதாகும்‘ என்பது அகங்கலந்து அளவளாவும் உடன்பிறந்தார் கூடப்பிறந்த பிறவியே பயன் உடைத்தா மென்பதும், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பது பெருந்துன்பத்திற்கே இடமா மென்பதும் நன்கு பெறப்படும். பொல்லா தாருடன் பிறப்பது பெரிதுந் துன்பந் தருவதென்பதனை இந்தப் பாட்டின்கண் மறைவாக்க் கூறினாராயினும்,

      " உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா
      உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
      மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
      அம்மருந்து போல் வாரும் உண்டு."

    என்னும் மற்றொரு பாட்டில் அதனை விளக்கமாகக் கூறி யிருக்கிறார். அது நிற்க.

    இனிப், பகைமைக் குணங்கள் உள்ளாருடன் பிறப்பதிலுந், தன்னந்தனியே பிறப்பது நன்றன்றோ வெனின், தனியராய்ப் பிறந்தால் உலக வாழ்க்கையில் அடுத்தடுத்துக் கிளைக்கும் பலவகை அல்ல்லிற்பட்டுத் தனியே உழல வேண்டி வருமாதலால், தனிப்பிறவி யெடுப்பது நன்றாக மாட்டாது. எந்தக் காலத்திலும் ஒரு மகன் பிறர் உதவியையுந் துணையையும் நாடாமல் உயிர் வாழ்தல் முடியாது. ஒருவன் தாயின் கருப்பையிலிருந்து பிறக்குங் காலத்திலேயே முழு அறியாமை உள்ளவனாயும், பிறகு சிறிது சிறிதே வளர்ந்வருங் காலங்களிலெல்லாம் பிறருடைய சேர்க்கையாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப் பெற்று வருஞ் சிற்றறிவு உடையவனாயுந், தனக்கு வேண்டும் ஊண் உடை முதலான எல்லாப் பொருள்களையும் பிறரது முயற்சியாற் பெறவேண்டியவனாயுந், தனக்கு வேண்டும் வசதிகளைத் தான் தேடிக்கொள்ள முயலும்போதுந் தான் பலருடிடய உதவியையும் துணையையும் நாடவேண்டிய வனாயுந் தனது சிறு வாழ்நாளின் இடையிடையே தான் நோயாற் புறப்பட்டு வீழ்தலின் அக் காலங்களிலெல்லாம் இவன் தனக்கு நோய் தீர்ப்பார் பேருதிவியைக் கட்டாயம் விரும்பி நிற்பவனாயும் இருத்தலால், ஒரு மகன் தனது துன்பத்திற்கும் இன்பத்திற்கும், அறிவுக்குமெல்லாம் பிறரைச் சார்ந்தவனாகவே யிருக்கின்றான்.

    இங்ஙனம் பிறரைச் சார்ந்தே உயிர் வாழும் நிலையிலுள்ள ஒரு மகனுக்கு எல்லா வகையிலும் உதவியுந் துணையுமாய் நிற்கத்தக்கவர்கள் எவர்கள்? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், தன் உடம்பொடு தொடர்பு உடையவர்களே யல்லாமல், மற்றவர்கள் அல்லரென்பது நன்கு விளங்கும். தன்னைப் பெற்ற தாயுந் தந்தையுந், தன்னொடு பிறந்த அண்ணன் தம்பி அக்கை தங்கைமாருந், தன்னைச் சேர்ந்த மனைவியுந், தன் வயிற்றிற் பிறந்த தன பிள்ளைகளுந் தன்னிடத்து அன்பு பாராட்டி உதவுயுந் துணையுமாய் நிற்றல்போல் உடம்பின் தொடர்பு இல்லாத மற்றவர் அங்ஙனம் இயற்கையான அன்பு காட்டி ஒருவனுக்குச் சார்பாய் நிற்றல் அரிதினும் அரிது. பிறர்க்கு நாம் எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும் எவ்வளவு உதவியைச் செய்தாலும் நமக்குப் பெரிய இடுக்கண் வந்த காலத்தில், அவர் நம்மை விட்டு நீங்குவர்; இதுபற்றி யன்றோ ஔவைப் பிராட்டியார்,

      "அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
      உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்
      கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
      ஒட்டி றுவார் உறவு"

    என்று அருளிச் செய்தார்.

    ஆயினுஞ், சிற்சிலர், தமக்குள் உடம்பின்றொடர்பு இல்லாதவராய் இருந்தாலும், உயிரும் உடம்பும் போல் அத்தனை நேயமும் அன்பும் உடையவராய் எவ்வகை இடுக்கண் வந்தகாலத்தும் பிரிவின்றியிருக்க்க் காண்கின்றோமேயெனின், அத்தகையோர் சில நாளில் அழிந்துபோம் இப்பொல்லாப் புலால் உடம்பின் தொடர்பை நோக்காது ஒருவரிடத்தமைந்த உயர்ந்த அறிவையும் உயர்ந்த அன்பையும் உயர்ந்த செயலையுமே நோக்கி, நெகிழாத அன்பு பூண்டு, அவர் பொருட்டுத் தமது ஆவியையுங் கொடுப்பாராதலின் அஃது இங்கே காட்டற்பாலதன்று. ஒரு மகனுக்கு இயற்கையில் உண்டாகும் நேயமானது உடம்பின் தொடர்பால் வருதலின் அதுவே இங்கு ஆராயற்பாலதாகும்.

    இனி, உடம்பின் தொடர்புடையாரிலுந் தன்னைப் பெற்ற தாயுந் தநதையுந் தன்னிலும் ஆண்டின் முதிர்ந்தாராய்த், தன்னைக் குழவிப்பவருந் தொட்டுப் பாதுகாத்து வளர்க்கப் பெருந்துன்பத்தை அடைந்தவர்களாயிருத்தலால், அவர்களுக்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்க வேண்டுமே யல்லாது, அவர்களுடைய உதவியையுந் துணையையுந் தான் நாடலாகாது. தன்னைச் சேர்ந்த மனைவியோ பெண்பாலாய்த் தன் உடம்பைப் பாதுகாத்துத் தனது இன்பத்திற்குக் காரணமாய் இருத்தலால், அவள்பாற் பேருதவியையும் பெருந்ணையையும் பெற விரும்புதல் ஆண்டன்மைக்கு அழகிதன்று. தன் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளோ சிறு மதலைகளாய்ப் பருவம் முதிரும் மட்டுந் தன்னாற் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாய் இருத்தலால், தனது முதுமைக்காலம் வரையில் அவர்களுடைய உதவியையுந் துணையையும் ஒருவன் எதிர்பார்க்கலாகாது. இனித், தன் உடன்பிறந்தாருள்ளுந் தன் அக்கையுந் தங்கையும் பெண்பாலராகலின், தன் அவர்க்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்றலே முறையாம். இவரெல்லாம் இங்ஙனமாகத் தனக்கு உயிர் வாழ்நாள் முழுதும் உண்மையான உதவியுந் துணையுமாய் நிற்றற்குரியவர் எவரெனின், தன்னொடு சிறிதேறக் குறைய ஒத்த ஆண்டும் ஒத்த அறிவும் ஒத்த தோழமையும் ஒத்த அன்பும் வாய்ந்த உடன் பிறந்தாரேயாவர் என்பது முடிக்கப்படும். இங்ஙனம் உடன்பிறந்தார் மட்டுமே தன்க்கு ஒருபெருந் துணையும் உதவியும்ய் நிற்றலால் நல்ல தமையன் தம்பியரை இல்லாப் பிறவி பயனற்றதென்று ஔவையார் அருளிச் செய்வாராயினர். நல்ல உடன்பிறப்பைப் பெறுதல் எவற்றினும் அரிதென்பதும், அத்தகைய உடன் பிறப்பைப் பெற்றவனுக்கு ஆகாத்து ஒன்றுமில்லை யென்பதும் உணர்த்தும் பொருட்டே சீவக சிந்தாமணியிலும்,

      "திண்பொருள் எய்தலாகுந் தெவ்வரைச் செகுக்கலாகும்
      நண்பொடு பெண்டிர் மக்கள யாவையும் நண்ணலாகும்
      ஒண்பொரு ளாவதையா உடன்பிறப் பாக்கல் ஆகா
      எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக் கரியதென்றான்"

    என்று திருத்தக்க தேவரும் அருளிச் செய்தார். இங்ஙனமே, கந்தபுராணத்திலுஞ் சூரபன்மன் தன்றம்பி சிங்கமுகனை நோக்கிப்,

      "பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மஙகையரைப்
      பின்னை யுளபொருளை எல்லாம் பெறல் ஆகும்
      என்னை யுடைய இளையோனே இப்பிறப்பில்
      உன்னை இனிப்பெறுவதுண்டோ உரையாயே"

    என்று கூறியதும் உற்றுகோக்கற்பாலதாகும்.

    இங்ஙனம் பெறுதற்கரிய உடன்பிறப்பைப் பெற்று வைத்தும், அண்ணன் தம்பிமார் சிலர் அதன் அருமையைச் சிறிதும் உணராமல் ஒருவரையொருவர் பகைத்தும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொண்டும், ஒருவரையொருவர் ஏமாற்றியும் ஒற்றுமை கெட்டுத் தமது பிறவியைப் பாழாக்குகின்றனர். ஏதோ முற்பிறவியிற் செய்த தவத்தால், இறைவன் தமக்கு உடன்பிறப்பைத் தந்தருளினான் என்றும், அவன் தந்த இப் பெரும்பேற்றை நாம் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் என்றும் நினைந்து பாராதவர் மக்கள ஆவரோ! தாம் உடன் பிறந்தோம் என்பதைத் சிறிதும் உணராத விலங்குகளுக்கும், தம் உடன் பிறப்பின் அருமையை உணராத மக்களுக்கும் வேற்றுமை உண்டோ? பாருங்கள அன்பர்களே! ஓர் ஆவின் கன்றுகள் பலவும் பருவம் முதிர முதிரத் தாம் உடன் பிறந்தவனைச் சிறிதும் அறியாமல் தத்தம் வழியே போகின்றன; அதுபோலக் குழவிப் பருவத்தே ஒருங்கு பிறந்து ஒருங்கு வளர்ந்த உடன் பிறப்பினருந் தம்மை ஒன்றாய்ப் பிறப்பித்த ஐயனது திருவுளக்கருத்தைச் சிறிதும் நினையாமல் ஒற்றுமைகெட்டுத் தனித்தனியே செல்லுதல் கூடுமோ? சில நாளிலிருந்து தமது கையை விட்டகலுஞ் செல்வத்தின் பொருட்டாகவும், இடையே வந்து சேர்ந்த மனையாளின் பொருட்டாகவும், உடன் பிறந்தார் தம்மிற் பகைகொண்டு, வேறுவேறாய்ப் பிரிந்து ஆண்டவன் நோக்கத்திற்கு மாறாய் ஒழுகுதல் மன்னிக்கப் படாத பெருங்குற்றமாய் முடியும். இப்பிறப்பில் ஒருவன் தான் நினைத்த வண்ணந் தம்பியைப் பெறல் முடியுமா? தம்பி தமையனைப் பெறல் முடியுமா? தம்மாற் புதிதாகச் செய்து கொள்ள முடியாத உடன் பிறப்பின் அருமையை உணர்ந்து, தமையன் தம்பிமார் தமக்குள் மிகவும் அன்புடையராய் ஒன்றித்து வாழ்ந்து தமக்கும் உலகத்திற்கும் பயன்படல் வேண்டும். தம்பிமார் கல்வியிலும் அறிவிலும் எவ்வளவு சிறந்தவராயினும், பருவத்தில் முதிர்ந்த தம் தமையன் மார்க்குக் கீழ்படிந்து ஒழுகி, அவரைத் தம்மோடு இணக்கிக் கொள்ளல் வேண்டும்; தமையன்மார் ஆண்டில் மூத்தவராயினுங் கல்வியிலும் அறிவிலுஞ் சிறந்த தம் தம்பிமார்க்கு இணங்கி நடத்தல் வேண்டும். தமையன் தம்பியர் தம் மனைவிமார்க்கு உடன்பிறப்பினருமையை அன்பொடு தெளிவாய் எடுத்துக்காட்டி, அவரெல்லாம் ஒன்றுபட்டு நடக்கும்படி திருத்தல் வேண்டும். உடன் பிறந்தாரில் ஒருவர் கல்விவளர்ச்சியின் பொருட்டும் பிற உயிர்களின் துன்பத்தைத் துடைக்கும் பொருட்டுஞ் செல்வத்தை நன்கு செலவிட்டுப் பயன்படுத்துவராயின், அதனைக் கண்டு, "ஐயோ! எம் உடன்பிறந்தான் எங்கள் செல்வத்தை யெல்லாம் அழித்துவிடுகின்றனனே!" என்று மற்றவர் வயிறு எரியாமல், ‘ஊர் நடுவிலுள்ள இனிய குளம் எல்லார்க்கும் பயன்படுதல் போல, நாம், பெரிதும் முயன்று தொகுத்த பொருளெல்லாந் தக்கார் பலர்க்கும் பயன்படும்படி அதனை நல்வழிப்படுத்தி, நமக்கும் நமது குடும்பத்திற்கும் பெரும் புகழையும் பெரும் புண்ணியத்தையும் வருவிக்கும் இவனோடு உடன்பிறக்கப் பெற்ற எமது தவமே தவம்!" என்று மனம் மகிழ்ந்து, அதற்குத் தாமும் உதவியாய் நிற்றல் வேண்டும்.

      "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
      பேரறி வாளன் திரு"

    என்றும்,

      "தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
      வேளாண்மை செய்தற் பொருட்டு"

    என்றுந் திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளை இடையறாது நினைந்து. உடன்பிறந்தவர் பொருட் செலவாற் பகைகொள்ளாது. ஒற்றுமைபட்டு வாழக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். துன்பம் வந்த காலத்தும் இன்பம் வந்த காலத்தும் ஒருதாய் மக்கள ஒன்றாயிருந்து அவற்றை நுகர்தலே அவர்தமக்கு முறையாம். பாண்டவர் ஐவரும் நாடிழந்து காடு போய்த் துன்புற்றபோதும், திரும்பி நாட்டைந்து அரசியற்றி இன்புற்றபோதும் ஒன்றாய் இருந்தமை இன்னும் புகழப்படுகின்ற தன்றோ? தன் சொற்களேத தமையன் சூரபன்மனைத் தான் விட்டு போகாது அவனோடு கூடவேயிருந்து உயிர் துறந்த அவன்றம்பி சிங்கமுகனது அரிய அன்பு இன்னும் பாராட்டப்படுகின்றதன்றோ? தன் றமையன் இராமனோடு கூடவே காடு புகுந்து அவன் உறங்குக் காலத்துந் தான் உறங்காமல் அவனுக்குப் பதினான்கு ஆண்டு பாதுகாவலனாய் நின்று, அவன் பொருட்டுப் பெரிதுந் துன்புற்ற அவன் றம்பி இலக்குமணனது அரிய அன்பு நேயம் இன்னும் உலகிற்கு ஒரு நல் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதன்றோ? இங்ஙனமெல்லாந் தம் உடன்பிறந்தாரோடு ஒன்றுகூடி வாழ்ந்தவர்க்கே, மற்றவர் களையுந் தம்மோடு உடன் பிறந்தவராக்க் கருதிப் பேரன்பு பாராட்டி, இறைவன் திருவருளைப் பெறும் பெருஞ் செல்வம் உண்டாம் என்க.
    ----------------

    16. கூட்டு வாணிகம்


      "நல்லினத்து னூங்குந் துணையில்லை தீயினத்தின்
      அல்லற் படுப்ப தூம் இல்" - திருக்குறள்

    பொருள் தேடுவதற்கு உரிய முயற்சிகள் பலவற்றுள் வாணிகம் என்பது ஒன்று. பொருள்தேடும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாய் இருந்தாலும், உலகவாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்கு மிகவும் பயன்படுதலால், இது மற்ற முயற்சிகளைவிடச் சிறந்த்தாய் இருக்கின்றது. நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாய் வேண்டப்படுகின்ற உணவுப் பொருள்களும், உடுப்புக்கும, அணிகலன்களும், புழங்கும் ஏனங்களுந், தட்டுமுட்டுகளும், ஓவியங்கள், இசைக் கருவிகள், சந்தனம், பஞ்சு முதலியனவும் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் உண்டாவன அல்ல; இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எட்டாத் தொலைவிலுள்ள பல ஊர்களிலும் பல நாடுகளிலும் உண்டாவன ஆகும். இப் பணட்ங்களையெல்லாம் ஒருவர் தாம் வேண்டிய அளவுக்குப் பற்பல இடங்களிலிருந்து வருவித்துக் கொள்வதென்றால் அதற்காக அவர் எவ்வளவோ அலைக்கழியல் வேண்டும். ஏராளமான பொருளுடையவர்க்கு இவ்வளவு செலவும் அலைக்கழிவும் மலைப்புக்கு இடமாய் இல்லாவிட்டாலும், மிகச் சிறிய வரும்படியைக் கொண்டு அன்றாடங் காலம் கழிக்கும் ஏழை எளியவர்கட்கு இவை எவ்வளவு துன்பத்தைத் தரும்! இலங்கியிலுள்ள ஏழைமக்கள் வங்காளம் இரங்கூன் முதலான தொலைவிடங்களில் விளையும் நெல்லைத் தனியே வருவித்துக் கொள்ளல் இயலுமோ? இந்தியாவிலுள்ள எளியவர்கள் ஜாவாவிலும் மோரீசிலும் உண்டாகுஞ் சர்க்க்ரையைத் தனியே வருவித்தல் இயலுமோ? இங்கிலாந்திலுள்ள வறிய மக்கள் இந்தியாவில் விளையும் பஞ்சை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ? இந்தியாவிலுள்ளவர் சீனத்திலுண்டாகும் பட்டை எளிதிற் பெற்றுக் கொள்ளல் கூடுமோ? இங்ஙனமே உயிர்வாழ்க்கைக்கு இன்னுங் கட்டாயமாக வேண்டப்படும் இவை போன்ற பொருள்களையெல்லாவற்றையும் ஒவ்வொருவருந் தனித்தனியே வருவித்துக் கொள்வதென்றால், அஃது அவர்க்கும் அவரைவிட வறியவர்களா யிருப்பவர்க்கும் முற்றும் அகாதொன்றாம். இனி, நடுத்தரமான செல்வம் உடையவர்களுக்கும் அஃது அளவிறந்த முயற்சியினையுங் காலக்கழிவினையும் பொருட்செலவினையுந் தந்து, கடைசியில் அவர்களை வறியவராக்கவுங் கூடும்ம். இவ்வாறெல்லாஅ மக்கள் அளவிறந்த துன்பத்திற்கு ஆளாகாமற், பல திசைகளிலும் பல நாடுகளிலும் பல ஊர்களிலுந் தோன்றும் பல்வகைப் பண்டங்களையும் ஓரிடத்தில் தொகுப்பித்து, எத்திறத்தவரும் அவற்றை நயத்த விலைக்கு எளிதில் வாங்கி இன்புறவும், அதனால் உலகவாழ்க்கை இனிது நடைபெறவும் பேருதவிசெய்து வரும் வாணிக முயற்சியானது பெரிதுஞ் சிறந்த்தொன்றென்பதனை யாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

    இனி, இத்தனை மேன்மை உடையதாகிய வாணிக முயற்சியைச் செய்யப்புகுவோர், இது மக்கள் எல்லார்க்கும் நிரம்பவும் பயன்படுதலை உணர்ந்து, எல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையவர்களாயும், மக்களுக்கு வேண்டிய பல பண்டங்களின் வகையும் அவை உண்டாகும் இடங்களின் வரலாறுந் தெரிந்து அவற்றைக் குறைந்த செலவில் வருவித்து எல்லார்க்கும் நயமாக ஒரே விலை கூறி முகமலர்ந்து இனியசொற் பேசி விற்கும் அறிவுத் திறமான செய்கையும் வாய்ந்தவர்களாயும் இருத்தல் வேண்டும். மக்களிடத்தில் அன்பில்லாமல் எந்நேரமுந் தமக்கு வரும் ஊதியத்தையே எண்ணிப் பார்ப்பவர்கள் உண்மையான வணிகர்கள் அல்லர். தாம் செய்யும் வாணிகமுயற்சி பலர்க்கும் பெரும் பயன்படுதலை உள்ளக் கனிவோடு எண்ணிப் பாராமல், தாம் அடையும் ஊதியத்திலேயே கருத்து வைப்பவர்கள் அவ் வாணிகத்தை இழந்து வறியராய்ப் போவார்கள். அன்பும் இரக்கமும் வாய்ந்த வணிகனிடத்தே திருமகள் குடிகொண்டிருப்பாள்; அவன் சென்றவிடமெல்லாஞ் செல்வம் ஓங்கும்; மெல்லிய திருமகள், தன் நலத்தையே முதன்மையாய்க் கருதும் வணிகனின் கரடுபட்ட வன்னெஞ்ச நெருஞ்சிற் காயை மிதிக்க அஞ்சி அவனை அறவே விட்டு விலகிப் போய்விடுவாள். அழகும் அன்பும் அறிவும் உடையவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை விரும்பி அணுகி அவர்க்கு எல்லாச் சிறப்புஞ் செய்தலைப் பார்த்திருக்கின்றோம் அல்லமோ? அழகில்லாமல் வன்னெஞ்சமும் அறியாமையும் உடையவர்களா யிருப்பவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை அருவருக்கின்றன ரல்லரோ? அன்பும் அறிவும் உள்ளவர்களுக்கு அழகு தானே உண்டாகும்; அக்குணங்கள் இல்லாதவர்களுக்கு முன்னே உள்ள அழகுங் குன்றிப்போகும். கொடுங்குணம் உள்ள வனுக்குக் கடுகடுத்த முகமும் வன்சொல்லும் அமைந்திருத்தலை வழக்கத்தில் நன்றாய் அறிந்திருக்கின்றனம் அல்லமோ? ஆகையால், வாணிகஞ் செய்பவர்கள் ஈர நெஞ்சமும் விரிந்த அறிவும் உண்டாகப் பழகிக் கொள்வார்களாயின், அவர்கள் முகத்தில் இதற்குமுன் இல்லாத அழகும் பொலிவுங் கிளர்ச்சிபெற்றுத் தோன்றும். அப்படிப்பட்டவர்களை எல்லாரும் விரும்பிச் சேர்ந்து தாம் வேண்டிய பண்டங்களை மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு செல்வர். அவர்கள் துவங்கயி வாணிகமும் மேன்மேற் செழித்தோங்கி, அவர்க்கும் பிறர்க்கும் அளவிறந்த நன்மையைத் தரும்.

    இனிப் பொருள் தேடும் முயற்சிகளிற் சிறந்த வாணிகமும் பிறவுஞ் செய்து அல்லும் பகலும் வருந்தி உழைப்பதெல்லாம், இந்த வெற்றுடம்பைப் பாதுகாப்பதற்கு மட்டும் அன்று; இந்த உடம்பை இருப்பிடமாகக் கொணடு வந்திருக்கும் நம் உயிரின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்தற்கும், எல்லாம் வல்ல கடவுளின் பேரின்பத்தைப் பெறுதற்குமேயாம். இவ் வரும்பெரு நோக்கம் ஈடேறும்பொருட்டு, இவ்வுடம்பைப் பாதுகாக்க வேண்டுவது இன்றியமையாத கடமையாய் இருக்கின்றது. இவ்வுடம்பைப் பாதுகாவ விட்டால் அறிவு விளக்கத்தையும் இறைவனது திருவருளின்பத்தையும் நாம் பெறல் முடியாது. இதுபற்றியே திருமூலநாயனார்,

      "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
      திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
      உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
      உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

    என்று திருமந்திரத்தில் அருளிச் செய்தனர்.
    இனி, உடம்பைப் பாதுகாத்தற்காக நடத்தும் இம்முயற்சிகளின் இடையே, நமதறிவை விளங்கச் செய்தற்கு ஒப்பற்ற துணையாய் வாய்த்த கல்வியைக் கற்றுக் கொள்ளப் பெரிதும் முயற்சிசெய்தல் வேண்டும். கல்லாதவர் நெஞ்சம் இருளடைந்து கிடக்குமாதலால், அங்கே இறைவன் விளங்கித் தோன்றானென்பது "கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்" என்று திருஞானசம்பந்தப் பெருமானுங், "கல்லாதார் மனத்தாணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்று ஒருங் காதலானை" என்று திருநாவுக்கரசு நாயனாரும், "எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை கல்லாதவர்கள் கலப்பறியாரே" என்று திருமூலநாயனாருங் கூறுதலால் நன்கு தெளியலாமன்றோ? இன்னுங், கல்லாதவரைக் காணலும், அவர் சொற் கேட்டலும் ஆகாவெனவுங், கல்லாதவர்க்குக் கல்லாதவரே நல்லவராய்க் காணப்படுவரெனவுங், கல்வியில்லாதவர் கடவுளது கருத்தை அறியமாட்டா ரெனவும் நன்கு விளக்கிக்,

      "கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
      கல்லாத மூடர்சொற் கேட்க்க் கடனன்று
      கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராங்
      கல்லாத மூடர் கருத்து அறியாரே"

    என்று திருமூலநாயனார் அருளிச் செய்திருப்பதையும் நோக்குங்காற் கல்வியறிவு பெறாமற் காலங்கழிப்பது மிகவும் பொல்லாத குற்றமாய் முடிதல் பெறப்படுகின்ற தன்றோ? ஐரோப்பிய அமெர்க்க் வணிகர்கள் எல்லாருங் கல்வியில் வல்லராய் விளங்கித் தமது வாணிக முயற்சியை நிரம்பவும் பெருகச் செய்து உலகத்தார்க்குப் பல பெரு நன்மைகளை விளைவித்து வருதலோடு, கல்விப்பொருளையும் எங்கும் பரவச் செய்து மக்கள் மன அறிவையுந் துலக்கி வருகின்றார்கள். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழ் வணிகர்களோ பெரும்பாலும் கல்வி யில்லாதவர்களாயும், கல்வியைப் பரவச் செய்தலிற் கருத்து இல்லாதவர்களாயும் இருக்கின்றார்கள்! இவர்களது இந்நிலமை பெரிதும் வருந்தத்தக்கதன்றோ? அழியாச் செல்வமாகிய கல்வியைப் பெறாத வரையில் அழியுஞ் செல்வமாகிய பொருளைப் பெற்று யாது பயன் அடைவார்?

    இனிக், கல்வியில்லாதவர்க்கு அறிவும், அறிவில்லா தவர்க்கு அன்பும் உண்டாகாமையால், இவ்விரண்டு மில்லாதவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பெரிய வாணிகத்தைச் செய்து ஒற்றுமையாய் வாழ்ந்து புகழையும் புண்ணியத்தையும் அடைதல் நமது நாட்டில் அருமையாய் இருக்கின்றது. அறிவும் ஆற்றலும் உடையவரே தனிமையாய் இருந்து ஒரு பெரிய வாணிபத்தை நடத்தல் இயலாதாயின், அவ்விரண்டும் இல்லாதவர் அதனை நடத்துவது எப்படி? ஒரு பெரிய வாணிகத்தை ஒருவர் ஏற்று நடத்துவது பலவகையிலும் அல்லலுக்கு இடமாகும்; வருகின்ற ஊதியம் முழுதும் நாமே அடைதல் வேண்டுமென்னும் எண்ணத்தால் தனியே வாணிகம் நடத்துவோர் பெரும்பாலும் ஊதியம் பெறாமற் பழுதுபடுவர்; ஓயாக் கவலையாலும் ஓயா முயற்சியாலும், ஊன் உறக்கம் இன்றி, ஆறுதல் சொல்வாரும் இன்றித், துணைசெய்வாருமின்றித் துன்பத்திலேயே உழப்பர். ஆதலால் தக்கவர் பலரைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய வாணிகத்தைச் செய்பவர்களே அத்துன்பங்களினின்றும் விலகிப் போதுமான ஊதியத்தையும் இன்பத்தையும் பெற்றுத், தாம் மனமகிழ்ந்திருப்பதோடு, தம்மைச் சேர்ந்த கூட்டாளிகளையும் அங்ஙனமே இன்புற்றுக் களித்திருக்கச் செய்வர். ஒருவரே ஒரு கற்பாறையைத் தூக்கிச் சுமப்பதென்றால் அஃது அவர்க்கு எவ்வளவு வருத்தத்த்தினைத் தரும்! அப்படியின்றிப் பலர் கூடி அதனை எடுத்துச் செல்வதென்றால் அஃது அவர்க்கு எத்தனை எளியதாய் இருக்கும்! இதுபோலவே ஒரு பெரு வாணிகத்தைப் பலர் கூடி நடத்துவது எளியதும் இன்பந் தருவதும் ஆம், இந்த நுட்பத்தை நன்கு உணர்ந்த ஆங்கில நன்மக்கள் கூட்டு வாணிகஞ் செய்து அறவிறந்த செல்வத்தையும் இன்பத்தையும் பெறுகின்றார்கள்; தாம் வாணிகஞ் செய்யும் நாட்டிலுள்ளவர்களையும் நாகரிகத்திலும் நல்வாழ்விலும் மேம்படச் செய்கின்றார்கள். நம் தமிழ் வணிகர்களோ இந்த நுட்பத்தை அறிதற்கு ஏற்ற கல்வியறிவும் ஈர நெஞ்சமும் பெரும்பாலும் இல்லாதவர்காளய் இருத்தலால், தாமே எல்லாச் செல்வத்தையும் அடைய வேண்டுமென்னும் பேராவலும், மற்றவர்கள் எவ்வகையிலும் மேம்படலாகாதென்னும் தீய எண்ணமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர்! இதனால் இவர் தாழ்வடைவதோடு, நமது வளம்மிக்க தமிழ் நாட்டையுந் தாழ்வடையச் செய்கின்றனர்!

    மக்களாய்ப் பிறந்த நாம் இவ்வுலகவாழ்வில் எவ்வளவு காலம் நிலைத்திருப்போ மென்றும், இவ்வாழ்வை விட்டுப் போகுங்கால் எவ்வகையாகச் செல்வேமென்றுஞ் சிறிதேனும் நினைத்துப் பார்ப்போமாயின், இங்ஙனமெல்லாம் நாமே உயரவேண்டுமெனவும் பிறரெல்லாந் தாழவேண்டு மெனவும் எண்ணமாட்டோம். உண்மையோடு ஒருவருக்கொருவர் உதவியாயிருந்து அன்பையும் அறிவையும் வளரச் செய்வதே இந்த வாழ்க்கையின் பயன் என்றும், இங்ஙனம் ஒருவருக் கொருவர் துணைவராயிருந்து வாழ்வதற்கு உதவியாயிருப்பதே எவ்வளவு மிகுதியாகப் பெற்றாலும் அஃது இறக்குங்காற் கூடவர மாட்டாதென்றும் வணிகர்கள் அடிக்கடி நினைந்து பார்த்தல் வேண்டும்.

      "அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
      மெத்திய மாதரும் வீதிமட்டே விம்பி விம்மியிரு
      கைத்தலை மேல்வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே
      பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே"

    என்ற பட்டினத்து அடிகள் திருமொழியை எந்நேரமும் அவர்கள் நெஞ்சிற் பதித்துச் சூதுங் கள்ளமும் இன்றி, உண்மையோடு ஒழுகிப், பலரும் ஒன்றுகூடி வாணிக முயற்சியைப் பெருகச் செய்து, தாம் பெற்ற ஊதியத்தைக் கல்விக்கும் பலவகை யறங்களுக்கும் பயன்படுத்தி வருதல் உண்மை வாணிகர்களுக்கு இன்றியமையாத கடையாமென்க.
    ---------------------

    17. பெண்மக்கள் கடமை


      "மங்கையர்க்குத் தனியரசி எங்கடெய்வம்
              வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
      செங்கமலத் திருமடந்தை கன்னி நாடான்
              தென்னர்குலப் பழி தீர்த்த தெய்வப்பாவை
      எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே
              இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
      பொங்கொளி வெண்டிருநீறு பரப்பினாரைப்
              போற்றுவார் கழலெம்மாற் போற்றலாமே".
      - ..........         சேக்கிழார்

    நீண்டகாலத்திற்கு முன்னரே மங்கையர்க்கரசி என்னும் ஒரு பெண்மணியிருந்தார். அவ்வம்மையார் சோழ அரசனின் புதல்வியாவார். பிறகு அவர் பாண்டி நாட்டுக்கு அரசனான கூன் பாண்டியனுக்கு மனைவியாகி மதுரைமாநகரின்கண் அமர்ந்திருந்தனர். அக்காலத்தில் நாத்திகச் சமணமதமானது எங்கும் பரவிக், கரியமுகிலானது பகலவனொளியை மறைப்பது போலச் சைவ சமயத்தை மிகுதியாய் மறைத்துவிட்டது. கூன்பாண்டியனும் அவன் குடிமக்களுஞ் சமணமுனிவர் சொற்களால் மயங்கி அவர்களுடைய சமயவலையிற் சிக்கிக்கொண்டார்கள். ஆனால், அப்பாண்டியன் மனைவயிரான மங்கையர்க்க்ரசியாரோ சைவசமய உண்மைகளைச் செவ்வையாக்க் கற்றுணர்ந்திருந்தமையாற், சிவபெருமான் திருவடிகளில் நிலைபெயராத அன்புடையராய்ச் சமணசமய நாத்திக வலையில் அகப்படாமல் இருந்தனர். அதனோடு அவர் கற்பொழுக்கத்திலும் மிகச் சிறந்தவராய் இருந்ததனால், தங் கணவனான கூன்பாண்டியனிடத்தில் அருவருப்பில்லாதவராய், அவனை மீட்டுஞ் சைவ சமயத்திற்குத் திருப்பித் தரும்படி சிவபெருமானை இடைவிடாது வேண்டி வந்தனர்.

    அங்ஙனம் அவர் வேண்டி வரும்பொழுது, திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்னும் ஒரு சிறு மதலை, இறைவனும் இறைவியுமாய்த் தோன்றிக் கடவுள் தந்த ஞானப்பாலை உண்டு, மூன்றாம் ஆண்டிலேயே எல்லாம் உணர்ந்த ஞானாசிரியராய்ச், சிவபெருமான்மீது செந்தமிழ்த் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, திருமறைக் காட்டுக்கு (வேதராணியத்திற்கு) வந்திருக்கிறார் என்பதைக் கேள்வியுற்றார். இதனைக் கேட்ட அளவிலே அவ் வரசியார் அடங்காப் பெருமகிழ்ச்சி அடைந்து, தம்மைப் போலவே சிவபெருமானிடத்து நீங்கா அன்புடையராய் விளங்கிய தம் அமைச்சரான குலச்சிறை என்பவரை அழைப்பித்து, அவர்க்குத் திருஞானச்சம்பந்தப் பிள்ளையார் தந் தெய்வத் தன்மைகளை விரித்துரைத்து, அவரை மதுரைமா நகருக்கு வருவிக்கும்படி கட்டளையிட்டார். உடனே குலச்சிறை யாருந் திருஞானசம்பநத்ப் பெருமானுக்குத் திருமுகம் எழுதிவிடுத்து மதுரைமாநகரருக்கு எழுந்தருளும் படி நிரம்பவும் வேண்ட, அதற்கிசைந்து பெருமானும் மதுரைக்கு வந்து அங்குள்ள சிவபிரான் திருக்கோயிலின் கண்ணே மங்கையர்க்கரசியாரைக் கண்டு, அப்பெண்ணரசியின் அருங்குச் செயல்களை மிகவும் பாராட்டி,

      "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
              வரி வளைக்கை மடமானி
      பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
              பணிசெய்து நாடொறும் பரவப்
      பொங்கழல் உருவன் பூதநாயகனால்
              வேதமும் பொருள்களும் அருளி
      அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
              ஆலவாய் ஆவதும் இதுவே"

    என்று தமது மலர்வாய் திறந்து பாடிருளினார். இங்ஙனந் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாயாற் புகழ்ந்து பாடப்பெற்ற மங்கையர்க்கரசியாரின் ஒப்பற்ற சிறப்பினையே சேக்கிழார் அடிகள் தாம் அருளிச் செய்த பெரிய புராணத்தின் கண்ணே மேற்காட்டிய செய்யுளிற் பெரிதும் வியந்து பேசியிருக்கின்றார். இவ்வளவு உயர்குணச் சிறப்பு வாய்ந்த மங்கையர்க்கரசியார் தோன்றிய பெண்வகுப்பிலே பிறப்பதற்கு அருந்தவஞ் செய்த பெண்மக்கள் எல்லாரும் அந்த அரசியாரைப் போலவே, அறிவுடைய மேன்மக்களாற் புகழ்ந்து பாராட்டும்படி உயர்ந்த நல்வழியிலே நடக்க வேண்டுவது அவர்கட்கு இன்றியமையாத கடமையாகும்.

    இனி, உயர்ந்த நல்வழியிலே நடக்குமிடத்தும், அவரவர் தன்மைக்குப் பொருத்தமான தகையாய் நடந்து கொள்ளல் வேண்டும். பெண்மக்கள் தம்முடைய தன்மைக்குத் தகுந்த வழியிலும், ஆண்மக்கள் தம்முடைய இயல்புக்கு ஏற்ற வழியிலும் பகுத்தறிந்து ஒழுகுதலே சிறந்ததாகும். பெண்மையென்பது எல்லாராலும், விரும்பத்தக்க ஓர் அமைதியான தன்மையென்றும், ஆண்மை என்பது பிறரை ஆளுந்தன்மை யென்றும் பொருள்படுதலாற், பெண்மக்கள் எல்லாரும் இயற்கையிலேயே அமைதிக் குணம் உடையவராரென்பது தெளிவாக விளங்குகின்றது. ஆண் மக்கள் ஆளுந்தன்மையுடையவர்களாய் இருத்தலால், எதனையும் முற்பட்டுச் சென்று செய்யுங் கிளர்ச்சி மிக்கவராய் இருக்கின்றனர்; பெண்மக்களோ அங்ஙனம் எதனையும் விரைந்து செய்யாது ஆழமாக நினைந்துபார்த்து அமைதியுடன் செய்து முடிப்பவராயிருக்கின்றனர்; விரைந்து செய்யுங் கிளர்ச்சியினால் ஆண்மக்கள் ஒரேவொருகாற் பிழை செய்தலுங் கூடும்; அமைதியாக ஆழ்ந்து செய்யும் இயற்கையாற் பெண்மக்கள் பிழைபடுதற்கு இடமே இல்லை. ஆண்மக்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு சிறந்ததான அமைதித் தன்மையைப் பெற்றும், அதனைப் பயன்படுத்தித் திருத்தமாக நடவாவிட்டாற் பெண்மக்கள் பெருங்குற்றத்திற்கு ஆளாவர். கையிற் பொருள் இல்லாதவன் அறஞ் செய்ய விட்டால் அதனை ஒரு குற்றமாகச் சொல்ல மாட்டார்கள். கையிற் பொருளுடையவன் அறஞ் செய்யானாயின் அதனை ஒரு பெருங் குற்ற்மாகவே நினைத்து எல்லாரும் அவனை இகழ்ந்து பேசுவர். அதுபோலவே, அமைதிக் குணம் என்னும் ஒப்பற்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றும், அதனை நல்வழியிற் பயன்படுத்தாத பெண்மக்கள், உலகத்தாரால் நிரம்பவும் பழிக்கப்படுவார்கள். அமைதிக் குணத்தை விட்டவர்கள், வடிவத்தாற் பெண்மக்களைப் போல் இருந்தாலும், அவர்கள் கொடுங்ங்குணமுடைய ஆண் மக்களினுங் கீழ்ப்பட்டவர் ஆவர். வடிவத்தால் மட்டும் பெண்கள போற்றோன்றிக் குணத்தால் மிக இழிந்தவர்களாய் இருப்பவர்களையே பட்டினத்துப் பிள்ளையார், தாயுமான அடிகள், முதலான சான்றோர்களெல்லாரும் மிகவும் இழித்துப் பாடியிருக்கின்றார்கள். ஆதலால், இயற்கையாகவே தமக்கு வாய்ந்த அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்து வருதலே பெண்பிறவி யெடுத்த நல்லார்க்குச் சிறந்த முறையாகும்.

    இனி, அமைதிக் குணத்தை மேன்மேல் வளரச் செய்யும் வழிதான் யாதென்றால், மனமுஞ் சொல்லும் செயலும் அமைதியாக நடைபெறும்படி பழகுவதேயாகும். நிறைந்த செல்வத்தை எப்படியாவது பெற்று உயர்ந்த பட்டாடைகளும் விலையுயர்ந்த அணிக்கலன்களும் அணிந்து, நாவிற்கு இனிய பண்டங்களை முப்பொழுதும் விலாப் புடைக்கத் தின்று, யாரும் நிகர் இன்றி மாடமாளிகைகளில் யாம் வாழல் வேண்டும், பிறர் எப்படியானாலும் எனக்கு ஆக வேண்டுவதென்ன என்று இப்படியெல்லாம் வீணான எண்ணங்களை எண்ணாமல், தமது விருப்பத்தை அடக்கல் வேண்டும். நுகரப்படுகின்ற பொருள்கள்மேல் மட்டுக்கு அடங்காமற் செல்லும் அவாவைச் சுருக்குதலே பெண்பாலார்க்குப் பெருஞ் சிறப்பாகும் என்பதனை உணர்த்துதற்கன்றே தெய்வத் தன்மை வாய்ந்த ஔவையாரும், "உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு" என்று அருளிச் செய்திருக்கின்னர். இவ்வுண்மை தெரியாதவர்கள் உணவைக் குறைத்துச் சாப்பிடுதலே பெண்மக்களுக்கு அழகாகும் என்று கூறுவார்கள்; அது பொருந்தாது; உடம்புக்கு வேண்டுமளவு உணவு கொடாவிட்டால் உட்ம்பு வலிவு குன்றி நோய்க்கு இரையாகும்; பெரும்பாலும் பெண்மக்கள் தாம் துய்க்கும் பொருள்களிற் கிடைத்த மட்டில் மன அமைதி பெறாமற் பின்னும் பின்னும் அவற்றைப் பெறுதற்கும் நுகர்தற்கும் அளவு கடந் விருப்பம் உடையவர்களாய் இருத்தலாலும், இவ் விருப்பத்தால் தம்மைப் பெற்றார்க்குத் தம்மொடு பிறந்தார்க்குந் தம்மைக் கொண்டார்க்கும் அளவிறந்த துன்பத்தையுங் கவலையையும் வருவித்தலாலும், அவர்கள் அவ் விருப்பத்தைச் சுருக்கிக் கொள்ளுதல் வேண்டு மென்பதே ஔவைப் பிராட்டியார் கருத்தாகும். ஆகவே ‘ ஆற்றிற் கிடந்து புரண்டாலும் ஒட்டும் மணலே ஒட்டும்‘ என்ற பழமொழிப்படி, இறைவன் அன்று அமைத்து விட்டபடி யல்லாமல் யாருந் தாம் விரும்புகிறபடி யெல்லாந் துய்த்தல் இயலாது. இதனாலன்றோ,

      "வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
      தொகுத்தார்க்குந் துயத்தல் அரிது"

    என்று திருவள்ளுவ நாயனாரும்,

      ‘எண்ணி யொருகருமம் யார்க்குஞ் செய்யொணாது
      புண்ணியம் வந்தெய்து போதல்லாற் – கண்ணிலான்
      மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
      ஆங்காலம் ஆகு மவர்க்கு"

    என்று ஔவையாரும் அருளிச்செய்தனர? ஆதலால், தமதுகையிற் கிடைத்தது காணிப்பொன் ஆனாலும், அதனக் கோடியாக நினைந்து மனவமைதி பெறுதல் பெண்மக்கள் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்குச் சிறந்த வழியாகும்.

    இனி, நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஏராளமாக வைத்திருக்கும் மாதர்கள், தம்மை அவ்வளவு செல்வ வாழ்க்கையிற் பிறப்பித்த இறைவனது பேர்ருட்டிறத்தை நினைந்து நினைந்து உருகுவதோடு, அச் செல்வத்திரள்களை மிகவும் பாடுபட்டுத் தேடித் தொகுத்து வைத்து தம் முன்னோரையுந் தங் கணவரையும் நினைந்து நினைந்து அவரிடம் நன்றியுடையராய் அடங்கி யொழுகுதல் வேண்டும். தமது இல்லத்திற்கு வரும் விருந்தினர் எத்திறத்தவராய் இருப்பினும், அவரைத் தாம் எவ்வளவு அன்புடன் ஓம்புதல் கூடுமோ அவ்வளவுக்கு அகம் மலர்ந்து முகம் மலர்ந்து வேளை தவறாமல் இனிய உணவு ஊட்டி இனியராய் நடத்தல் வேண்டும். தாம் ஒருவர் வீட்டிறகு விருந்தாய்ச் சென்றால் அவ் வீட்டவர் தம்மை அன்புடன் ஓம்புவதால் தமகுண்டாம் மகிழ்ச்சியையும், அவர் அங்ஙனம் ஓம்பாவிட்டால் தமக்குண்டாம் மன வருத்தத்தையும் எண்ணிப் பார்க்கும் மங்கைமார்க்கன்றோ, விருந்தினரை ஓம்புதலின் சிறப்பு நன்கு விளங்கும்? அன்பில்லாமற் செய்யும் விருந்தோம்பல்கள் வந்தவர்க்கு எவ்வளவு துன்பத்தைத் தரும்! இதற்கு,

      "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
      நோக்க்க் குழையும் விருந்து"

    என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,

      "காணக்கண் கூசுதே கையெடக்க நாணுதே
      மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
      என்பெலாம் பற்றி எரிகின்ற தையையோ
      அன்பில்லா இட்ட அமுது"

    என்ற ஔவையார் திருப்பாட்டுமே சான்றாம்.

    இன்னும், உண்ணச் சோறு இன்றியும் உடுக்கக் கூறையின்றியும் வருந்திவந்த ஏழை எளியவர்களைக் கடுகடுத்துப் பேசித் துரத்தாமல், அவரை ஏற்கும் நிலையிலுந், தம்மை அவர்க்கு இடும் நிலையிலும் வைத்த ஐயன் செயலை எண்ணி எண்ணி அவர்க்கு நெஞ்சம் இரங்கி, அன்போடும் இனிசொற் கூறிச் சோறுங் கூறையுங் கொடுப்பதுதான் பெண்மக்களுக்குத் தெய்வத் தன்மையை உண்டாக்கும். செல்வமானது நிலையில்லாமல் மாறி மாறி வருவதொன்றாகையாற், பொருளை இழந்த பிறகு, ‘அறஞ் செய்யாமற் போனோமே‘ என்று ஏமாறாமற், பொருள் உள்ளபோதே,

      "ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
      மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
      தண்ணீரும் வாருந் தரும்மே சார்பாக
      உண்ணீர்மை வீறும் உயர்ந்து"

    என்றபடி பல வகையிலும் ஈகையறங்களைத் தாமே செய்தும் தம்மைச் சேர்ந்தவர்கள் செய்வதற்கு உதவியாய் நின்றும் புண்ணியத்தைத் தமக்குத் துணையாகத் தேடிக்கொள்ளல் வேண்டும்.

    இனிக், கல்வியில்லாதவர்கள் விலங்குகட்கு ஒப்பாவர் என்று தெய்வத் திருவள்ளுவர் கூறுதலாலும்,

      "குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
      மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
      நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற்
      கல்வியழகே யழகு"

    என்று நாலடியாரின்படி கல்வியில்லாதவர்க்கு உள்ள அழகும் ஒப்பனைகளுஞ் சிறப்பாகமாட்டா ஆதலாலும், ஆண்மக்களைப் போலவே பெண்மக்களும் இடைவிடாது கற்றுத், தமது அறிவை நிரம்பவுந் துலக்கிக்கொள்ளல் வேண்டும், கல்வி கற்கக் கற்க அறிவு ஆழமாய்ச் செல்லுமாதலால், அவர்கட்கு இயல்பாக உள்ள அமைதிக்குணமும் அதனால் மேலும் மேலும் பெருகும்; மிகவும் ஆழமான ஓர் யாறானது எவ்வளவு அமைதியாய்ச் செல்கின்றது! ஆழம் இல்லாயாற்றின் நீர் சிலுசிலுவென்று எவ்வளவு விரைவாய் ஓடி வற்றிப் போகின்றது! ஆகவே, பெண்மக்கள் தமது அமைதிக்குணத்திற்கு மிகவும் இசைந்த்தான கல்வியைக் கற்றலிற் சிறிதும் பாராமுகமாய் இருத்தல் ஆகாது.

    இங்ஙனமெல்லாந் தமது அதைதிக் குணத்தைப் பாதுகாத்து வளர்க்கும் மங்கையர்கள், அக்குணத்தை வெளியே புலப்படுத்துந் தம்முடைய வாய்ச் சொற்களை இனிதாக அமைந்த மெல்லிய குரலிற் பேசப் பழகல் வேண்டும். எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும், இனிமை இன்றிப் பரபரப்போடு உரக்கப் பேசுகிறவர்களைக் கண்டால் எவர்க்கும் அருவருப்பு உண்டாகின்றது. அமைதிக்கே உரியவர்களான பெண்பாலரிடத்து இப் பொல்லாங்கு காணப்படுமாயின், அது பிறர்க்கு எவ்வளவு உவர்பிபினைத் தோற்றுவிக்கும்!

      "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
      சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

    என்னுந் திருவள்ளுவநாயனார் அருள் உரையை மாதர்கள் எப்போதும் கருத்திற் பதியவைத்தல் வேண்டும்.

    இனி, மாதர்கள் தமது அமைதிக் குணத்திற்குப் பொருத்தமாகத், தமது உடம்பின் செயல்களை அமைதிப் படுத்தி, நாணமும் அடக்கமும் உடையவர்களாக ஒழுகுதல் வேண்டும். தமது வருவாய்க்குத் தக்கபடி தூய ஆடை அணிகலன்கள் ஆரவாரமின்றி அணிந்து, குளித்தும் முழுகியுந் தூயராக நடத்தல் அவர் தமக்கு முதன்மையான கடமையாம். இவற்றொடு கடவுளைத் தொழுதலும் அடியாரை ஏற்று அவர்க்குத் தொண்டு செய்தலும் நாடோறும் வழுவாமற் கடைப்பிடியாகச் செய்துவரல் வேண்டும், என்று இவ்வளவும் எல்லாப் பெண்மக்களுக்கும் உரிய கடமைகளில் முதன்மையானவாம் என்க.
    --------------

    18. பெற்றோள் கடமை

    தாயானவள் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமை மற்ற எல்லாக் கடமைகளிலுஞ் சிறந்ததாக இருத்தலின் அதைப்பற்றி இங்கு வரைவது பெரிதும் பயன்றருவதாகும். மனைவி கணவனுக்குச் செய்யுங் கடமையிலும், மக்கள் பெற்றோர்க்குச் செய்யுங் கடமையிலும், உடன் பிறந்தார் உடன்பிறந்தார்க்குச் செய்யுங் கடமையிலும், நண்பர் நண்பர்க்குச் செய்யுங் கடமையிலும், குடிகள் அரசர்க்குச் செய்யுங் கடமையிலும் அரசர் குடிகளுகுச் செய்யும் கடமையிலுந், தாயானவள் தன் மக்கட்குச் செய்யுங் கடமையே மிக மேலானதொன்றாய் விளங்குகின்றது. ஏனென்றால், மனைவியாயுங், கணவனாயுங், உடன்பிறந்தாராயும், நண்பராயுங் குடிகளாயும், அரசராயும் உள்ள எல்லாரும் முடிவாகத் தாயின் வயிற்றிற் பிறந்தவர்களேயாகையால், அவர்களெல்லாருந் தாயின் உதவியினாலேயே மேலான நிலைமைக்கு வரவேண்டியவர்களாயிருக்கின்றார்கள். குழந்தைகாளயிருந்த காலந் தொட்டே, தாயானவள் தன் மக்களை எந்த வகையில் வளர்த்து வருகின்றாளோ அந்த வகைக்கேற்றபடியே அவர்கள் வளர்ந்து நல்லவராகவாவது, தீயவராகவாவது நடப்பார்கள்; தாயானவள் நல்லறிவும், நல்லியல்பும், நல்லசெய்கையும் உடையவளா யிருத்தலோடு தன் மக்களும் தன்னைப்போலவே ஆகல் வேண்டுமென்று அக்கறையோடு அவர்களை வளர்த்து வருவாளாயின், அவர்கள் நல்லவராயே விளங்குவர். இவ் வாறின்றித் தாயானவள் யீவளாயிருப்பாளாயின் அவளால் வளர்க்கப் பட்ட பிள்ளைகளுந் தீயவர்களாகவே நடப்பாரென்பதை நாம் சொல்லுதல் வேண்டுமோ? கொழுமையான நல்ல நிலத்தில் முளைத்த பயிரையும், உரமற்ற உவர் நிலத்தில் தோன்றிய புற்பூண்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! நல்ல நிலத்தில் முளைத்த பயிர் எவ்வளவு செழுமையாய் வளர்ந்து, நெல், கேழ்வரகு, கோளம் முதலான பொருள்களைத் தந்து எல்லார்க்கும் எவ்வளவு மிகுதியாய்ப் பயன்படுகின்றன! உவர் நிலத்திற் றோன்றிய புற்பூண்டுகளோ வற்றி வரண்டு விலங்கினங்களுக்கும் பயன்படாமற் போகின்றன. இதுபோலவே, நல்ல தாயினிடத்துந் தீய தாயினிடத்துந் தோன்றிய பிள்ளைகளும் இருப்பார்களென்று தெரிந்து கொள்ளல் வேண்டும்.

    "தொட்டிற் பழக்கஞ் சுடுகாடு மட்டும்" என்னும் பழமொழிப்படி நாம் சிறு பிள்ளைகளாயிருந்தபோது நம்மிடத்தில் உண்டான பழக்கம் நம் அறிவில் பேர்ரூன்றி விடுதலால் அது நாம் வளருந்தோறுங் கூடவே வளர்ந்து நன்மையையாவது, தீமையாயாவது தருகின்றது. ஆதலாற் பெரியவர்களான பிறகும், எல்லார்க்கும் நல்லவர்காளய்ப் பயன்பட்டு வாழ்வதற்கு நாம் சிறுபொழுதிற் கைக்கொண்ட பழக்கமே முதன்மையானதாயிருக்கின்றது.

    இனிச் சிறுபோதில் நமக்கு வரும் பழக்கம் எங்கே யிருந்த வருகின்ற தென்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்! நாம் குழந்தையாயிருந்த காலத்தில் நம்மைப் பெற்ற தந்தையொடு நெருங்கிப் பழகினோமா? சிறிதும் இல்லையே. ஏனெனில், நம் தநதையோ நம்மையும், நம் அன்னையையும், நம்மைச் சேர்ந்தவர்களையும் பாதுகாக்கும் பொருட்டுப் பகற்பொழுதெல்லாம் வெளியே சென்று உழைத்துவிட்டு, மாலைப் பொழுதில் வீட்டிற்கு வந்து அலுத்து இளைப்பாறப் போகின்றனர். நம்முடன் பிறந்தாரோ சிறியராயிருந்தால் நமக்கு ஏதுந் தெரிவிக்கமாட்டாராயிருத்தலின் அவரால் நாம் அடையும் பயன் ஒன்றுமில்லை. அவர் பெரியாராயிருந்தாலோ கல்வி கற்கவுங் பொருள் தேடவுங் கணவனோடு வாழவும் வெளியே போய் விடுகின்றனர். ஆதலால் அவராலும் நாம் அடைவதொன்றில்லை. மற்றுச் சுற்றத்தாரும் இடைக்கிடையே நம் வீட்டுக்கு வந்துபோகின்றவர்களே யல்லாமல் நிலையாக நம்மோடிருந்து நம்மோடு நெருங்கிப் பழகுகின்றவர்களல்லாமையால் அவர்களாலும் நாம் பெறுவது ஒன்றுமில்லை. இவர்களெல்லாம் இங்ஙனமாகப் பின்னையார்தாம் நமது சிறுபருவத்தில் நம்மோடு உடன் பழகுவோர் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர் நம் தாய்மாரே ஆவரென்று உணரப் பெறுகின்றோம்.

    நாம் ஏதும் அறியாத சிறுகுழவியா யிருந்தபோது நம்மைச் சீராட்டிப் பாராட்டி வந்தவள் நம் அன்னை யேயன்றோ? நாம் பசியால் வருந்தி வாய்திறந்து அழுதபோது நம் அருகே ஓடிவந்து நம்மை எடுத்து முத்தம் வைத்து உள்ளங் கசிந்து பாலூட்டினவள் நம் அன்னையே யன்றி வேறு பிறர் உண்டோ? நாம் சிறிது சிறிதாய் வளர்ந்து வரும்போது நமக்கு வேண்டிய பாலுஞ் சோறும் முதலான பொருள்களை நமக்குச் சுட்டிக் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களை நமக்குக் கற்றுக் கொடுத்து வந்த முதல் ஆசிரியனும் நம் அருமைத் தாயேயன்றோ? இடைக் கிடையே நாம் நோயால் வருந்திக் கிடந்த காலங்களெல்லாம் அதற்குத் தானும் உடன் வருந்திப் பகலென்றும் இரவென்றும் பாராது நம் அருகிருந்து நம் நோய் தீரும் பொருட்டு வேண்டும் உதவிகைள எல்லாம் கைம்மாறு கருதாது செய்துவந்த அட் களஞ்சியம் போல்வாளும் நம் அன்னையன்றோ? இங்ஙனமெல்லாம் நம் உயிரோடும், உடம்போடும், நம் நினைவோடூம், நம் சொல்லோடும், நம் செயலோடும் உடன் கலந்து, உடன் பழகிவருந் தெய்வம்போல்வாள் நம் அன்னையாகவே இருத்தலின், அவளாலேதான் நாம் சீர்திருந்த வேண்டிய வர்களாக இருக்கிறோம்.

    இவ்வாறு நம்மை முழதுஞ் சீர்திருத்த வேண்டிய நிலைமையிலுள்ள நம் அன்னையானவள் தான் தன் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முற்றும் அறிந்தவளாக இருக்க வேண்டுவது முதன்மையன்றோ? அறிவில்லாத தாய் தன் மக்களை எப்படி அறிவுடையராக்கக் கூடும்? விளக்கில்லாத இடத்தில் வெளிச்சம் உண்டாகுமா? பூவில்லாத இடத்தில் மணம் உண்டாகுமா? ஆதலால் தாயானவள் மிகுந்த அறிவுடையவளாய் இருந்தால் மட்டுமே அவள் மக்களும் அறிவுடையரா யிருப்பர்.

    இனித் தாய்மார்களுக்கு அறிவுதான் எப்படி வரக் கூடுமென்று எண்ணிப் பார்ப்போமாயிற், கற்றார் சொல்லும் அரிய பொருள்களை அடுத்தடுத்துக் கேட்பதனாலும் அவர் எழுதிய நூல்களை இடைவிடாது கற்று உணர்வதானாலுமே அவர் அறிவுடையராகக் கூடுமென்பது தெளிவாக விளங்கும்.

    கல்வியறிவிலும், உயர்ந்த எண்ணங்களிலுமே எந் நேரமும் பழகின ஒரு தாய்க்கு நல்ல பிள்ளைகளே பிறக்கக் கூடுமல்லாமல், தீயபிள்ளைகள் பிறப்பதற்குச் சிறிதும் இடமில்லை. நாம் எவ்வகையான நினைவில் ஓயாமற் பழகிவருகிறோமோ அதற்குத் தக்கபடியே நம் உடம்பிலுஞ் செய்கையிலும் பல வகையான அடையாளங்கள் காணப்படுகின்றன. வெடுவெடுப்பாகப் பேசும் ஒருவர் முகத்தையும், மிகவும் அமைதியாகப் பேசும் மற்றொருவர் முகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! சீற்றம் உள்ளவர் முகம் பார்ப்பவருக்கு எவ்வளவு அச்சத்தைத் தருகின்ற து! அமைதியுள்ளவர் முகமோ எவ்வளவு கவர்ச்சியைத் தருகின்றது! உயர்ந்த அறிவுடையோர் செய்கை எல்லார்க்கும் இன்பத்தைத் தருதலும், அறிவில்லாதவர் செய்கை துன்பத்தைத் தருதலும் நாம் வழக்கமாய் அறிந்திருக்கின்றனமே. இப்படியாக நம்மறிவுக்கும், நினைவுக்கும் ஏற்றபடி நம் உடம்புஞ் செய்கையும் மாறுபடுவதைக் காணுங்கால், நாம் எவ்வளவு அமைதியும் எவ்வளவு அறிவும் உடையவர்களாக ஒழுகவேண்டுமென்பது நுங்களுக்கு விளங்காமற் போகாது. நாம் அழகுடையவர்களா யிருக்கவேண்டுமென்றும், அளவிறந்த ஆவல் உடையவர்களா யிருக்கின்றோம். ஆனால், அவ் ஆவலின்படியே பெறுவதற்கு, முன்னதாகச் செய்ய வேண்டும் ஏற்பாடுகளைச் செய்துவைக்கின்றோமா? சிறிதும் இல்லையே. பசி யெடுத்தபோது நல்ல உணவு உண்ண வேண்டுமென்று விரும்புகிறவர்கள், பசியெடுக்கும் முன்னமே அவ்வுணவைச் சமைத்துக் கொள்ளல் வேண்டும் அன்றோ! மழைபெய்தாற் பயிர்செய்து பிழைக்க வழி தேடுபவர்கள், மழை வருதற்கு முந்தியே நிலத்தைத் திருத்திப் பதப்படுத்த வேண்டாமா? அழகான அறிவும் அழகான தன்மையும் இல்லாதவர்க்கு அழகு எங்கேயிருந்து வந்துவிடும்? நல்லவரல்லாதவரும் அழகுடையராய் இருக்கக் காண்கிறோமே என்றால், அவர்க்கு உள்ள வெளி அழகு முதலிற் பார்ப்பவர்க்குச் சிறிது கவர்ச்சியை உண்டு பண்ணுமேனும், பிறகு அவரொடு கலந்து பழகுவார்க்கு, அவரிடத்திலுள்ள தீயதன்மை அருவருப்பை விளைக்குமாதலால் அது சிறிதும் அழகாக மாட்டாது. எட்டிப்பழம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருந்தாலும், அதனைச் சிறிது நாவிலிட்டால் அஃது எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது! ஆகவே, பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிய அறிவும் இனிய இயற்கையும் உடையவர்களே உண்மையான அழகு உடையவர்களென்று அறிந்துகொள்ளுங்கள்!

    நம் பெண்பாலாரில் எத்தனையோ பெயர் அருவருக்கத் தக்க அறியாமையுந் தீய தன்மையுந் தீய செய்கையும் உடையராயிருந்தும், இவற்றைத் திருத்திக் கொள்ளச் சிறிதேனும் முயற்சி செய்யாமல் உயர்ந்த ஆடை ஆணிகலன்கள் அணிந்து தம்முடம்பை மினுக்குவதில் மட்டுமே மிகுந்த கருத்து வைத்தவரா யிருக்கின்றார்கள். இதனால் நம்மவர்க்கு ஆடை அணிகலன்கள் வேண்டுமென்பதை நாம் மறுக்கவில்லை. என்றாலும் வெளியே யுள்ள உடம்பை அழகு செய்வது இரண்டாந்தரமாகவும், உள்ளேயுள்ள நம் அறிவையும் நினைவையும் அழகு செய்வது முதற்றரமாகவும் வைத்துப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் முன்வாயிலைக் கூட்டிமெழுகிக் கோலமிட்டுப் பூச்சாத்தி விளக்கிவிட்டு அழகு படுத்துவது போலவே, அவ் வீட்டின் உள்ளேயும் அங்ஙனமே துப்புரவு செய்து வைக்க வேண்டாமா? முன்வாயில் மட்டும் அழகாயிருக்கும்படி ஒப்பனை செய்துவைத்து உள்ளே சென்று பார்த்தாற் குப்பையுங் கூளமும் முடைநாற்றமும் இருளும் மலிந்து கிடக்க விட்டிருப்பது எவ்வளவு அருவருப்பை உண்டாக்குவதாகும்! இதுபோலவே நாம் நமதுடம்பை எவ்வளவுதான் ஒப்பனை செய்து அழகுபடுத்தினாலும், நமது உள்ளத்தையும் அங்ஙனமே அறிவினாலும் நல்ல நினைவினாலும் அழகு படுத்தி விளங்கச் செய்யாவிட்டால் அது சிறிதாயினும் பயன்படமாட்டாது; நாம் பெறும் பிள்ளைகளும் உயர்ந்தவராகமாட்டார்கள்.

    உலகத்தில் மிகச் சிறந்து விளங்கிய மேன்மக்களைப் பெற்ற தாய்மார்க ளெல்லாரும் அறிவாலும் நாகரிகத்தாலுஞ் சிறப்புற்றிருந்தார்க ளென்பதைப் பழைய வரலாறுகளில் நம் படித்தறிந்திருக்கின்றோம். தாய் எத்தன்மையுடையாளா யிருக்கின்றாறோ, அவள் பெற்ற மக்களும் அத்தன்மை யுடைவயர்களாய்த் தோன்றுகிறார்கள். இதற்குத், "தாயைப் போற் பிள்ளை நூலைப்போற் சீலை" "தாயைத் தண்ணீர்த் துறையிற் பார்த்தாற் பெண்ணை வீட்டிலா போய்ப் பார்க்க வேண்டும்" என்னும் பழமொழிகளே சான்றாகும்.

    தாயானவள் சூல்கொண்டவளா யிருக்கும்போது நினைத்த நினைவுகளும், எண்ணிய எண்ணங்களும், அவன் வயிற்றிலுள்ள பிள்ளையின் மூளையிற் பதிந்து அதனை உருவாக்குகின்றன என்று இக்காலத்தில் மனநூல் வல்ல அறிஞர்கள் ஆராய்ந்து காட்டுகின்றார்கள். நமது நாட்டிற பழைய கதையான பாரத்த்தினாலும் இவ்வுண்மை நன்கு பலனாகின்றது. கண்ணபிரான் கருக்கொண்டிருந்த தன் தங்கைக்குப் பழையநாளில் இருந்த போர்மறவர்களின் அரிய ஆண்மைச் செயல்களை எடுத்துச் சொல்லிக் கொண்டுவந்தாரென்றும், அவற்றைக் கேட்டுவந்த சுபத்திரை அவைகளை மிகவும் வியந்து தன் கருத்தை அவ் வாண்மைச் செயல்களிற் பதிய வைத்தமையால், அவள் வயிற்றகத்துள்ள கருவில் அந்நினைவேறி நன்றாய்ப் பதியலாயிற்றென்றும், பிறகு அது பிள்ளையாய்ப் பிறந்து அபிமன்யு என்னும் பெயர் பெற்று அஞ்சாநெஞ்சுள்ள ஆண்மையாளனாய்க் கண்டாரெல்லாம் வாய்மேற் கைவைத்து வியக்கும்படி அருந்திறல் ஆண்மையொடு பெரும் போரியற்றிப் புகழ் பெற்று நிகரற்ற ஆண்மகனாய் விளங்கினதென்றும் அப் பாரதக் கதையில் நாம் படித்திருக்கின்றன மல்லமோ! மேல் நாட்டில் நிகரற்ற போர்மறவனாய் விளங்கிய நெப்போலியன் என்னும் மன்னர்மன்னனைப் பற்றி நம்மவர்க்கு நன்றாய்த் தெரிந்திருக்கலாம். அவன் முதலில் மிகவும் ஏழைமையான ஒரு குடும்பத்திற் பிறந்து, பிறகு ஒரு படையிற் சிறிய சம்பளத்திற்குப் போர்மறவனாய் அமர்ந்து, பின்பு நாட்செல்லச் செல்லத் தனது அஞ்சா ஆண்மையினாலும் நுண்ணறிவினாலும் மேன்மேல் உயர்ந்து, சில ஆண்டுகளில் ஒரு படைக்குத் தலைவனாய் ஏற்படுத்தப் பட்டான். அதன் பின்பு அவன் அரசர் பலர் மேல் எதிர்த்துச் சென்று, அவரையெல்லாம் பெரும் போரில் தோல்வியடையச் செய்து, கடைசியாக இணையற்ற போர்மறவன் என்னும் பெயர் ஐரோப்பாக் கணட்ம் முழுதும் விளங்க, அரசர்க்கு அரசனாய்ப் புகழ் பெற்று நிலவினான். முதலில் ஏழைமையான நிலையிலிருந்த இம்மன்னவன் இத்தனை உயர்ந்த நிலைமைக்கு வரலானது எதனால் என்று அறிவுடையோர் சிலர் ஆராய்ந்து பார்க்க அவனை ஈன்ற அன்னையே அவன் அங்ஙனம் உயர்ந்த நிலைமை யடைதற்குக் காரணமாயினாள் என்பது புலப் படலாயிற்று. அவனை அவள் தனது வயிற்றிற் சூல்கொண்டிருந்தபோது, அவள் கற்ற்றிவுடையாளாயிருந்தமையின் ஆண்மையிற் சிறந்த போர்மறவன் ஒருவனது வரலாற்றைப் படித்து மிகுந்த மனக்கிளர்ச்சி உடையளாய் இருந்தனளாம். தான் படித்த அவ்வரலாற்றிற் போந்த போர்மற்வனுடைய ஆண்மைச் செயல்களையும் நுட்ப அறிவின் திறமைகளையும் அவள் அடிக்கடி நினைந்து மகிழ்ந்து வரவே. அவள் வயிற்றிலிருந்த கருவும் அவளுடைய உயர்ந்த எண்ணங்கள் ஏறப்பெற்று மிகுந்த கிளர்ச்சியோடும் வளர்வதாயிற்று. இவ்வாறு கருவிலேயே தன் நினைவுக்ள உருவேறப்பெற்றுப் பிறந்தமையாற், பிறகு அஃது இம்மாநிலத்தவரெல்லாம் வியக்கத்தக்க அரிய ஆண்மைச் செயல்களைப் புரிந்து மன்னர் மன்னனாய் விளங்கிற்று. இந்த இயல்பை உற்று நோக்கும் நம் பெண்மணிகள் தாம் சூல்கொண்டிருக்குங் காலங்களில் எவ்வளவு நல்ல நினைவும், எவ்வளவு நல்ல அறிவும் உடையவர்களாக இருக்கப் பழகிக் கொள்ளல் வேண்டும் என்பதை அறிவார்களாக!

    கருக்கொண்டிருக்குங் காலத்திற் பிழைபட நடந்தால் அதனாற் பிள்ளைகள் சீர்கெட்டுப் போகின்றனர் என்பதற்கு உண்மையாக நடந்த சில நிகழ்ச்சிகளை இங்கு எடுத்துக்காட்டுவாம். ஒருகால் ஒரு பெண்மகள் தான் சூல் கொண்டிருந்த மூன்றாந் திங்களில் ஒரு கரடிக் குட்டியைப் பார்த்துப் பெருந்திகில் அடைந்தாள். பின்னர் அக்கரு பிள்ளையாய்ப் பிறந்து பதினான்கு ஆண்டு உயிரோடிருந்த்து. அப் பிள்ளை உயிரோடிருந்த காலமெல்லாங் கரடிக்குரிய குணமுஞ் செய்கையும் உடையதாயிருந்த்து.
    மற்றொரு பெண்மகள் சூல் கொண்டிருந்தபோது ஒரு கிளிப்பிள்ளையினால் அச்சுறுத்தப்பட்டாள். பின்னர் அவள் பெற்ற பெண் குழந்தையானது கிளிப்பிள்ளையின் குரலுஞ் செயலும் உடையதாயிற்று. மற்றொரு பெருமாட்டி தலை நசுங்கிப்போன ஓர் யாட்டுக்குட்டியைப் பார்த்து மனம் மருண்டாள். அவள் ஈன்ற மகவானது தலையின் இருபுறமும் நசுங்கி நெற்றி பிதுங்கி யிருந்தது, என்றாலும் அப் பிள்ளையின் அறிவு மட்டும் பழுதுபடாமல் விளங்கிற்றாம்.

    சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கால் கையுடன் ஒரு பெண் பிள்ளை பிறந்தாள். அப்பிள்ளையைப் பலருங் காணும்படி கண்காட்சிச் சாலையிற் கொண்டுவந்து வைத்தார்கள். இரண்டு திங்களாகக் கருக்கொண்டிருந்த ஒரு பெருமாட்டி அப் பிள்ளையைப் பார்க்க மிகுதியும் விரும்பினாள்; தன் விருப்பப்படியே அதனைப் போய்ப் பார்க்கையில், அவளுக்கு அது மிகவும் புதுமையாகத் தோன்றியமையால் அப்பிள்ளையின் வடிவத்தை அவள் நிரம்பவுங் கருத்தாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நண்பர்கள் அவளை அதனின்றுங் கட்டாயப்படுத்தித்தான் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். பிறகு அப்பிள்ளையின் வேறுபட்ட வடிவம் அப் பெருமாட்டியின் உள்ளத்தில் மறக்கப்படாமற் பதியலாயிற்று. நாள் முழுதும் அதைப்பற்றியே பேசிவந்தாள்; இரவிற் கனவிலும் அவ் வடிவத்தையே கண்டு வந்தாள். கடைசியாகத் தன் உள்ளத்திற் பதிந்த அவ் வடிவத்தைப் போலவே தனக்கும் பிள்ளை பிறக்கு மென்னும் நினைவு அவளுக்கு உண்டாயிற்று. பின்னர்ப் பத்துத் திங்களும் கழிந்து அவளுக்குப் பிள்ளை பிறந்த்து; அப் பிள்ளை, ஐயோ! ஒரு காலோடும் ஒரு கையோடுங்கூடிய வேறுபட்ட வடிவம் வாய்ந்ததாய் இருந்த்து.

    இவ்வாறே சூல் கொண்டிருக்குங் காலங்களில் தாயானவள் எண்ணிய எண்ணங்களும் நினைத்த நினைவுகளும் அவள் வயிற்றகத்தே உள்ள கருவில் எளிதாகப் பதிந்துவிடுகின்றன. பெரும்பாலும் நம் பெண்மக்கள் வீண் பேச்சுக்களையும் வீணான எண்ணங்களையும் எந்நேரமுகையாளுகின்றவர்களாய் இருத்தலால், இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் இவர்களோடொத்த பயனற்ற தன்மை உடையவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள்! பிள்ளைகளுக்குத் தந்தையின் இயற்கை சிறிதாகவுந் தாயின் இயற்கை பெரிதாகவும் பதிவது மேலெடுத்துக் காட்டிய நிகழ்ச்சிகளாற் செவ்வையாகப் புலப்படுதலால், தாய்மார் சூல் கொண்டிருக்குங் காலங்களில் தீய நினைவேனுந் தீய செயலேனுந் தம்மிடத் துண்டாவதற்குச் சிறிதும் இடந்தரலாகாது.

    இனிக், கருக்கொண்டிருக்கும்போது நல்நினைவும் நற்சொல்லும் நற்செயலும் உண்டாவதற்குச் சிறு பொழுது முதற்கொண்டே அந் நல்வழிகளிற் பழகும் பழக்கம் இன்றியமையாத்தாய் இருத்தலிற், பெண்மக்கள் ஒவ்வொருவருந் தம் இளந்தைக் காலந் தொட்டே தக்கவர்களை அணுகிச் சிறந்த நூல்களைக் கற்றறிந்து தம்மறிவை வளர்த்துக் கொள்வதோடு, பயன்படாத சொல்லும் பயன் படாத செயலுந் தம்மிடத்தில் உண்டாகாதபடி நிரம்பவுங் கருத்தாய் நடந்துகொள்ளுதலும் வேண்டும். பெண்மக்களுக்குள்ளே வீணானவர்களுடன் பழகும் பழக்கத்தின் வழியே அவர்களுக்கு உள்ள வீணான தனமைகள் எல்லாந் தமக்கும படியுமாதலால், அவர்களுடன் கலந்து பழகாதபடி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் உயர்ந்த நிலைமையினையும் உயர்ந்த புதல்வர்களையும் பெறவிரும்பும் பெண்மக்களுக்கு இன்றியமையாத கடமையாகும். சிறுபோது முதல் பழகும் பழக்கம் நல்லதாயிருந்தால், அப்பழக்கத்திற்கு ஏற்றபடி மங்கையர் தாம் கருக்கொண்டிருக்குங் காலங்களில் நல் நினைவும் நற்சொல்லும் நற்செயலுமுடையவராவர்; சிறுபோதிற் பழகிய பழக்கந் தீயதாயிருந்தால் அதற்கு இசையவே அவர் கருக்கொண்டிருக்குங் காலங்களிலுந் தீய நினைவுந் தீய சொல்லுந் தீயசெயலும் உடையவர் ஆவர்.

    சிறுபொழுதில் உண்டான பழக்கத்தைப் பிறகு இடையிலே மாற்றிக்கொள்வது எளிதிலே முடிவதன்று. இதைப்பற்றி முதலிலேயுஞ் சிறிது பேசியிருக்கின்றோம். முன் நிறைந்துள்ள உடை கருவேல் முதலான மரங்களை, அவை சிறு செடிகளாய் இருக்கும்போதே களைந்தெறிவது எளிதிலே முடியும்; அங்ஙனம் அப்போது களையப் படாமல் விடப்பட்டால், அவை பருத்து வளர்ந்து பின்னர் எளிதிலே அகற்றப்படாதனவாய் இருந்து துன்பத்தைத் தரும் அல்லவோ? அதுபோலவே, சிறுபோதில் தீய பழக்கம் ஏறவிட்டாற், கருக்கொண்டிருக்கும் காலத்தில் அதனை எவ்வளவுதான் நீக்க முயன்றாலும் அது நீங்காதாய் வந்து தாயையும் பிள்ளையையும் ஒருங்கே கெடுத்துவிடுமென்று திண்ணமாய் உணரல் வேண்டும். மற்று, ஒரு தோட்டத்திற் சிறு செடிகளாய் வைத்துப் பயிராக்கிய தென்னை மா பலா வாழை முதலியன காலஞ் செல்லச் செல்ல மிகப் பெரியனவாய் வளர்ந்து, மிகத் தித்திக்கும் பழங்களைத் தந்து உண்பார்க்கு உடம்பையும் வளர்த்து இன்பத்தையும் விளைத்தல் போலச் சிறுபொழுதிலே தாய்மார்க்கு உண்டான நற்பழக்கமானது அவர் கருக்கொண்டிருக்குங் காலத்தும் அவரைத் தூயராய் வைத்து அவர் ஈனும் மக்களையும் பெறுதற்கரிய அழியாச் செல்வங்களாக்கிப் பேரின்பத்தை விளைவிக்குமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ!

    ஆக, இவ்வரும் பேருண்மையை நம்மிற் பெரும்பாலோர் உணராமையினாலன்றோ தாம் கருக்கொண்டிருக்கும்போது பிழைபட நடந்து அதனால் தீய பிள்ளைகளைப் பெற்றுத் தம் வாழ்நாள் முழுதுந் தாமுந் துன்புற்றுப் பிறரையுந் துன்பத்திற்கு ஆளாக்குகின்றார்கள். ஆ! நம் பெண்மக்களின் பேதைமைச் செயல் நினைக்குந் தோறும் நம் உள்ளத்தை நீராய் உருக்குகின்றதே! நம் பெண்மக்களைப் பாதுகாத்து ஆண் மக்களாயினும் இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து அவைகளைச் சீர்திருத்துகின்றார்களா வென்றால் பெரும்பாலும் ஆண் மக்களுங் கல்வியறிவு இல்லாதவர்களாகவே யிருத்தலால் அவர்களும் அது செய்யமாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். இங்ஙனம் ஆண்பாலார் பெண்பாலார் இருவரும் அறியாமை என்னும் இருளிற் குடியருப்பவர்களானால் நாடும் மக்களும் முன்னேறுவதெப்படி? சொல்லுங்கள் அறிஞர்களே!

    இனியேனும் இங்ஙனம் பாராமுகமாயிராமல் ஆண் பெண் என்னும் இருதிறத்தாரும் உயர்ந்த நூல்களைக் கற்றும், கற்றறிவுடையார் சொல்லும் பொருளைக் கேட்டும் அவற்றின்படி நடந்து நல்ல மக்களைப் பெறுதற்கும், பெற்ற மக்களைச் சீர்திருத்திவளர்த்தற்கும் நிரம்பவும் முயற்சி செய்தல் வேண்டும். எல்லாம் ஊழ்வினையால் ஆகும் என்றும், அவரவர் ஊழ்வினைக்குத் தக்கபடிதான் நல்ல பிள்ளைகளோ தீய பிள்ளைகளோ பிறப்பரல்லாது நம்மாலாவது ஒன்றுமில்லை யென்றுஞ் சொல்லிச் சோம்பேறிகளாய் வாழ்நாளை வீண் நாளாக்க் கழிப்பது பெரிய பொல்லாங்கினைத் தரும். ஊழ்வினையால் வந்த நோயை நம் செயலால் நல்ல மருந்துண்டு தீர்த்துக் கொளவ்துபோலப் பழவினையால் நமக்கு நேர்ந்த துன்பங்களையுஞ் சிபெருமானை எண்ணி முயன்று நாம் தீர்த்துக் கொள்ளல் வேண்டும். மார்க்கண்டேயர் தமக்கு ஏற்பட்ட பதினாறு ஆண்டைச் சிவபெருமான் திருவருட்டுணையால் என்றும் பதினாறாக ஆக்கிக் கொள்ளவில்லையா? ஆதலால், நாமுந் தீய நினைவுகளையுந் தீய செயல்களையும் விட்டு முழுமுதற் கடவுளான சிவபெருமானை இடைவிடாது தொழுது கொண்டும், எல்லா உயிர்களிடத்தும், அன்பும் இரக்கமும் உடையராய் நடந்தும், அறிவுடையோர் நூல்களை இடைவிடாது கற்றும், அவர் பொன்மொழிகளைக் கேட்டுந், தூய நினைவுந், தூய செயலும உள்ளவர் காளாய் ஒழுகி வருவோமாயின், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படும் நல்ல பிள்ளைகள் நல்லவராதற்குந், தீயவராதற்கும் நம் தாய்மார்களே முதன்மையான வழிகாட்டி காளயிருத்தலால், அவர்கள் இக்கடமையின் பொருட்டாகவாவது நல்லறிவுடையவர்களாய் நடக்க மிகவும் பழகிக் கொள்ளல் வேண்டும். தாய்மார் மிகவும் துன்புற்றுப் பிள்ளை பெறுதலும், பெற்ற பிள்ளை பலவகை நோய்களுக்கு இரையாகி மடிதலும், அங்ஙனம் மடியாது தப்பித் தவறிப் பிழைத்த பிள்ளைகளுந் தீயராய்ப் போதலும் எல்லாந் தாய்மார்களின் அறியாமையினாலும் தீய செய்கைகளாலுஞ் சோம்பலாலும் விளையுந் துன்பங்களேயல்லாது வேறு இல்லையென்று என் அருமைத் தாய்மார்களே, நீங்கள் திண்ணமாய் நம்புங்கள்! நம் அருமைத் தாய்மார்கள் மட்டுங் கற்றறிவுடையவர்களாகவும், நல்லன்பும் நல்லெண்ணமும் உடையவ்ரகாளகவும் இருந்தால் இத் துன்பங்கள் தலைக்காட்டுமா? எல்லோரும் நல்லறிவுடையவராகவும் எல்லாரும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராகவும் விளங்க இந் நிலவுலகத் தேவர்கள் உறையும் வானுலகமேயாகி, இந்நில வாழ்க்கைத் தேவர்கள் வாழும் இன்பவாழ்க்கையேயாகி, எல்லாம் இன்பமேயாய், எல்லாம் அன்பேயாய், எல்லாம் அருளேயாய் விளங்குமென்று உறுதியாய் நம்புங்கள்! நம் மக்களுக்குச் செய்ய வேண்டிய இப் பெருங் கடமையை நாம் வழுவாது செய்து வருவோமாயின், எல்லாம் வல்ல சிவபெருமான் நமக்கு அருள்புரிவது திண்ணமென்றும் உறுதியாய் நம்புங்கள்!

    ஓம் சிவம்,

    "அறிவுரைக் கொத்து" முற்றும்

This file was last updated on 3 March 2014.
.